வியாழன், 27 மார்ச், 2014

சீனிவாசன் பதவி விலகுகிறார்: பிசிசிஐ தலைவர் ஷிவ்லால் யாதவ்?


ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி முட்கல் தலைமையிலான குழு கடந்த பிப்ரவரி மாதம் ஐ.பி.எல். ஸ்பாட்பிக்சிங் சூதாட்டம் தொடர்பான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது.
அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்பான தகவல்களை கூறி குருநாத் மெய்யப்பன் பெட்டிங்கில் ஈடுபட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று வந்தபோது ஐ.பி.எல் சூதாட்ட வழக்கு விசாரணை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெற இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து என்.சீனிவாசன் விலகவேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர். பதவி விலகாவிட்டால் தாங்களே உத்தரவிட வேண்டி இருக்கும் என்று தெரிவித்தனர்.

இந்த வழக்கு விசாரணை நாளை மீண்டும் வருகிறது. அதற்குள் என்.சீனிவாசன் தனது பதவியில் இருந்து விலக வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறார்.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த கடுமையான உத்தரவு காரணமாக என்.சீனிவாசன் பதவி விலகுகிறார். அவர் பதவி விலகும் போது புதிய தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்பதே அடுத்த எதிர்பார்ப்பாக இருக்கிறது.
முன்னாள் சுழற்பந்து வீரரும், வாரியத்தின் துணைத் தலைவராக இருக்கும் ஷிவ்லால் யாதவ் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. கிரிக்கெட் வாரியத்தின் மண்டல சுழற்சிப்படி அவர் தான் போட்டியில்லாமல் அந்த பதவிக்கு தேர்வு பெறுவார்.
முன்னாள் தலைவரான சசாங்க் மனோகர் மீண்டும் தலைவராக வாரியத்தின் பெரும்பாலான நிர்வாகிகள் விரும்புகின்றனர். ஆனால் அவர் மீண்டும் தலைவராக விரும்பவில்லை.
சரத்பவார், அருண் ஜெட்லி பாராளுமன்ற தேர்தலில் இருப்பதால் அவர்கள் இதற்கான போட்டியில் இல்லை.
இதனால் ஷிவ்லால் யாதவுக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அவர் கூறும் போது, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை நாங்கள் ஏற்கிறோம். தலைவர் பதவி வழங்கினால் அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன் என்றார்.malaimalar.com

கருத்துகள் இல்லை: