திங்கள், 24 மார்ச், 2014

மோடியின் கதை OR ஒரு கிரிமினல் தலைவனான கதை ?

நரேந்திர மோடியின் கதை அவருக்கு பல போதனைகள் செய்த, அவரை உருவாக்கிய அமைப்புக்களின் கதையும் கூட. அரசியல் ரீதியாக அவ்வமைப்புக்கள் கடந்த ஐம்பதாண்டுகளில் வளர, அவற்றின் ஊடே மோடியும் வளர்ந்தார்.அவற்றுள் மிக முக்கியமானது, அரசியலில் அவர் மேலும் மேலும் உயரக் காரணமாக இருந்திருப்பது ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங். அஹிம்சையினையும் சகிப்புத்தன்மையினையும் முன்னிறுத்திய மஹாத்மா காந்தியின் இந்து மதத்திற்கு மாற்றாக, மற்ற மதத்தினருடன் மோதும், சண்டைகளுக்குத் துடிக்கும் இந்து மதத்தை உருவகித்தது  1925 ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்.  அது மட்டுமல்ல, அகில இந்திய காங்கிரஸ் மதச்சார்பற்ற தேசியத்தை வளர்க்க முற்பட்டதென்றால், ஆர் எஸ் எஸ் இந்தியாவையே ஓர் இந்து நாடாகத்தான் சித்தரித்தது.  அது காங்கிரஸ் மற்றும் காந்தி மீது வளர்த்த வெறுப்புக் கனலில் காந்தி எரிந்து போனார். அவரை சுட்டுக்கொன்றது சில காலம் ஆர் எஸ் எஸ்சில் பணியாற்றிய நாதுராம் கோட்சே. ஜவஹர்லால் நேரு இயக்கத்தையே தடை செய்தார், பின்னர் 20,000க்கும் மேற்பட்ட ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் கைதாயினர்.
ஓராண்டு கழித்து தடை நீக்கப்பட்டது. ஆனால் பல தசாப்தங்கள் ஆர் எஸ் எஸ் ஒரு இரகசிய அமைப்பு போலவே செயல்பட்டது. வக்கீல் சாஹிப் என்றறியப்பட்ட இலக்‌ஷ்மண்ராவ் இனாம்தார், ஓர் அமைதியான அர்ப்பணிப்பு மிக்க நபர், அவரால்தான் ஆர் எஸ் எஸ் குஜராத்தில் வேரூன்றியது. கட்டுக்கோப்பான அமைப்புக்கள் ஏதுமின்றி ஆங்காங்கே கிளைகளை உருவாக்கி தொண்டர் படையினை கட்டமைத்தார் இனாம்தார். அப்போது உருவான வட்நகர் ஷாகாவில் எட்டு வயது சிறுவன் நரேந்திரமோடியும் இணைந்தார். 

வட்நகர் கிளை 1944ல் அமைக்கப்பட்டது. அதற்குக் காரணமாயிருந்தவர் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் பாபுபாய் நாயக். அவரைப் போன்ற பலர் இந்தியாவெங்கும் சென்று மாணவர்களை ஆர் எஸ் எஸ் பக்கம் ஈர்த்தனர்.
காந்திஜி கொல்லப்பட்ட பிறகு சில காலம் அதிகம் வெளியில் தலைகாட்டாமல் ஆனால் களப்பணியில் தீவிரமாயிருந்தார் நாயக். அவ்வப்போது வக்கீல் சாஹேப் லக்‌ஷ்மண் இனாம்தாரை அழைத்து புதிதாகச் சேர்ந்தவர்கள் மத்தியில் உரையாற்றச் சொல்லுவார். 1958ஆம் ஆண்டு தீபாவளியன்று இனாம்தார் முன்னிலையில் மோடி சிறுவர் தொண்டர்களுக்கான பிரமாணத்தை எடுத்துக்கொண்டார்.
மோடி சகோதரர்களில் மூத்தவரான சோம்பாய் மோடி பெருமையுடன் குறிப்பிட்டார் – “நாங்கள் வீட்டிலோ பள்ளியிலோ வழக்கமாக செய்வதைக்காட்டிலும் வித்தியாசமாக ஏதேனும் செய்யவேண்டுமென்றுதான் நரேந்திரன் எப்போதுமே ஆசைப்படுவான். ”
தாமோதர்தாஸ் மூல்சந்த் மோடிக்கும் ஹீராபேனுக்கும் ஆறு குழந்தைகள். நரேந்திரர் மூன்றாமவர். அவர்கள் கஞ்ச்சி என்ற கீழ்சாதியை சேர்ந்தவர்கள். வடநகரின் உள்ளே ஒரு சந்தில் வசித்தனர். கஞ்ச்சிகள் பரம்பரை பரம்பரையாக தாவர எண்ணை தயாரித்து விற்று வந்தனர். அத்துடன் வட்நகர் ரயில் நிலையத்தில் ஒரு டீ ஸ்டாலும் நடத்தி வந்தார் தாமோதர்தாஸ் மோடி. எண்ணை ஆலையை ஹீரா பேனும் பிள்ளைகளும் நிர்வகித்தனர்.
காலையில் டீக் கடையில் தந்தைக்கு உதவியாக இருந்துவிட்டு, முதல் மணி அடித்தவுடன் ரயில்வே பாலத்தைக் கடந்து வகுப்பிற்கு வருவான் நரேந்திரன் என்கிறார் அவரது வகுப்புத் தோழரும் தற்போது ஆயுர்வேத மருத்துவருமான சுதீர் ஜோஷி.
இரு பாலருக்குமான பகவத் ஆசார்ய நாராயணாசார்ய உயர்நிலைப்பள்ளியில்தான் மோடி படித்தார். அது குஜராத்தி மீடியம் பள்ளி, பழைய வட்நகரின் துவக்கத்தில் அமைந்திருந்தது அது. அப்பள்ளியில் சமஸ்கிருத ஆசிரியராகப் பணியாற்றிய பிரஹ்லாத் படேல் நரேந்திரன் படிப்பில் சாதாரணம்தான் ஆனால் பட்டி மன்றங்களிலும் நாடகங்களிலும் அதிக ஆர்வம் காட்டினார் என்கிறார். நான் நடத்திய பட்டிமன்ற சங்கத்திற்கு தவறாமல் வருவார் நரேந்திரன் என்கிறார் படேல்.
11modi5
மாலையில் பள்ளி முடிந்தவுடன் புத்தகங்களை வீசி எறிந்துவிட்டு அவசர அவசரமாக ஷாகாவிற்கு ஓடுவோம் என்று நினைவுகூர்கிறார் சுதீர் ஜோஷி.
எங்கள் தாய்க்கும் தந்தைக்கும் உதவியாக இருந்தான், பள்ளிக்கும் சென்று வந்தான் நரேந்திரன், ஆனால் அவன் மிகுந்த அக்கறை காட்டியது ஷாகாவில்தான். உப்பு, எண்ணையை சாப்பாட்டிலிருந்து தவிர்த்துவிட்டான், அவன் ஏதோ சாமியாராகப் போகிறான் என்று நாங்கள் நினைத்தோம் என்கிறார் அண்ணன் சோம்பாய்.
எதையோ தேடி அலைந்துகொண்டிருந்த அந்த இளைஞனுக்கு ஒரு இலட்சியத்தை, பாதையை வகுத்துக்கொடுத்தது ஆர் எஸ் எஸ்தான். ஆனால் துறவியாவதா அல்லது இந்துத்துவத்தை வளர்க்க ஆர் எஸ் எஸ் தொண்டனாவதா என்பது குறித்து மோடியால் எளிதில்  வட்நகர் கஞ்ச்சிக்காரர்கள் குல வழக்கப்படி நரேந்திர மோடிக்குத் திருமணமும் செய்துவைக்கப்பட்டது. அவர்களுக்கு மூன்று அல்லது நான்கு வயதில் நிச்சயிக்கப்படும், திருமண சடங்கு 13 வயதில், ஆனால் 18 அல்லது 20 வயதில்தான் சேர்ந்து வாழத்தொடங்குவர். அவ்வாறே மோடிக்கு வட்நகரை அடுத்த பிராம்மணவாடா எனும் நகரைச் சேர்ந்த ஜசோதாபேன் சிமன்லால் என்ற பெண்ணுடன் திருமணம் நடத்திவைக்கப்பட்டது.
ஆனால் சேர்ந்து வாழவேண்டிய நிலையில், மோடிக்கு 18 வயதானபோது அவர் இமயமலைக்குச் சென்றுவிட்டார், இரு குடும்பத்தினருக்கும் அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை.அவர் என்ன செய்துகொண்டிருந்தார், எங்கெல்லாம் போனார் என்பது எவருக்குமே தெரியாது. “நாங்களெல்லாம் மிகவும் கவலைப் பட்டுக் கொண்டிருந்தோம்…பின்னர் திடீரென்று, இரண்டு வருடங்கள் கழித்து வீடு திரும்பினார். தமது துறவறத்தை முடித்துக் கொள்ளப் போவதாகவும் அஹமதாபாத் சென்று எங்கள் மாமா பாபுபாயின் காண்டீனில் வேலை செய்யப்போவதாகவும் தெரிவித்தார்,” என்கிறார் சோம்பாய்.
அவர் மீண்டும் வீட்டைவிட்டு வெளியேறும் முன் ஜசோதாபேனுடன் சேர்த்துவிடவேண்டுமென்று மோடியின் தாய்க்கு ஆசை. எனவே அவர்கள் வீட்டுக்குச் சொல்லி அனுப்பினார். ஆனால் ஜசோதா வீட்டிற்கு வரவேண்டிய நாளன்று தன் குடும்பத்தாருடன் சண்டைபோட்டுக் கிளம்பிவிட்டார் என்கிறார் ஓர் உறவினர்.
முதலில் பாபு பாயின் காண்டீனின் வேலை செய்தவர் பின்னர் கீதா கோயில் அருகே சைக்கிளில் டீ விற்கத் தொடங்கினார். அந்தக் கட்டத்தில்தான் அவர் ஆர் எஸ் எஸ்சிற்குத் திரும்ப அவர் முடிவெடுத்ததாக பெயர் குறிப்பிடவிரும்பாத ஒரு நிர்வாகி தெரிவிக்கிறார்.
காலை ஷாகா கூட்டம் முடிந்து திரும்பும் பிரச்சாரகர்கள் மோடியிடமிருந்து டீ வாங்கிக் குடிப்பார்கள். அவர்களுக்கு மோடியைப் பிடித்துப்போயிற்று. ஏற்கெனவே அவர் ஷாகாவில் இருந்திருக்கிறாரா. எல்லாமாகச் சேர்ந்து மோடியின் வாழ்க்கையில் மீண்டும் ஒரு திருப்பம். டீக் கடை பிசினஸை நிறுத்தினார். மாநில ஆர் எஸ் எஸ் தலைமையகத்தில் ஒரு உதவியாளராக சேர்ந்தார். குஜராத் தலைமையகம் ஹெட்கேவார் பவன் என்றழைக்கப்படுகிறது. அங்கே 12, 15 பேர் தங்கியிருந்ததாகவும், வக்கீல் சாஹிப்பின் அழைப்பின் பேரில் தானும் அவர்களுடன் சேர்ந்துகொண்டதாகவும் மோடி அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய எம்.வி.காமத்திடம் கூறியிருக்கிறார்.
அங்கே அவர் தினமும் ஆர் எஸ் எஸ் பிரச்சாரகர்களுக்கு காலை டீ சிற்றுண்டி செய்வார்., பிறகு கட்டிடத்தை சுத்தப்படுத்துவார். எட்டு, ஒன்பது அறைகள் இருந்ததாம். அனைத்தையும் மோடிதான் கூட்டிப் பெருக்கித் துடைப்பாராம். மேலும் வக்கீலின் உடைகளையும் தன்னுடையவற்றையும் துவைப்பாராம். ஏறத்தாழ ஒரு வருடம் இதுதான் மோடியின் வாழ்க்கையாயிருந்தது. அந்த நேரத்தில்தான் பல முக்கிய தலைவர்களை சந்தித்ததாகக் கூறுகிறார் அவர். ஆர் எஸ் எஸ்சின் வளர்ச்சியில் ஒரு முக்கிய கால கட்டமது.  ஒரு ரகசிய தீவிரவாத கும்பலிலிருந்து சட்டபூர்வமான, வலிமைவாய்ந்த ஓர் அமைப்பாக அது மாறிவந்த நேரம்.
narendra-modi-young-pic
அஹமதாபாத்தைச் சேர்ந்த பிரபல சமூக ஆய்வாளர் திரிதிப் ஷுருத் எப்படி ஆர் எஸ் எஸ் குஜராத்தில் சட்ட பூர்வ அந்தஸ்தை எட்டியது என்பதை விவரிக்கிறார்: “முதலில் 1974 நவ நிர்மாண் போராட்டம். பொறியியற் கல்லூரி மாணவர் விடுதிகளில் உணவுக் கட்டண உயர்வை எதிர்த்துத் தொடங்கிய ஆர்ப்பாட்டங்கள் விரைவிலேயே ஊழலில் திளைத்த, பல்வேறு அடக்குமுறைகளை ஏவிவிட்ட மாநில அரசிற்கெதிரான மாநிலம் தழுவிய மாணவர் போராட்டமாக உருவெடுத்தது. அதில் ஆர் எஸ் எஸ் பங்கேற்றது. பின்னர் எமர்ஜென்சி. அப்போது காந்திய வாதிகளுடனும் சோஷலிஸ்டுகளுடனும் ஆர் எஸ் எஸ் இணைந்து பணியாற்றியது. தவிரவும் 1971 பஞ்சத்தின் போதும், 1979ல் மச்சு ஆற்று அணை தகர்ந்து ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தபோதும் ஆர் எஸ் எஸ் நிவாரணப்பணிகளில் தீவிரமாக இறங்கியது. இதெல்லாம் போக 1971ல் மன்னர் மானிய ஒழிப்பின் விளைவாய் கொதித்துப்போய் இந்திரா காந்திக்கெதிரான சக்திகளை உருவாக்க விரும்பிய அரச வம்சத்தினரும் ஆர் எஸ் எஸ்சை பயன்படுத்திக்கொண்டனர். இவ்வாறாக வளர்ந்தது அவ்வமைப்பு.”
அந்த நேரத்தில் குஜராத் வந்து செல்வோருக்கு டிக்கெட் ரிசர்வேஷன், தலைமை அலுவலகத்திற்கு வரும் கடிதங்களைப் பிரித்துப் பார்ப்பது, இப்படியாக மோடியின் பொறுப்புக்கள் கூடின. மேலும் அகில இந்திய தலைமையகமான நாகபுரி அலுவலகத்தில் ஒரு மாதம் நடைபெற்ற அதிகாரிகளுக்கான பயிற்சி முகாமிலும் மோடி பங்கு பெற்றார். அத்தகைய முகாம்களில் பயிற்சி பெறுவோரே ஆர் எஸ் எஸ்சில் நிர்வாகிகளாக முடியும். அந்த முதற்கட்ட பயிற்சி மிக முக்கியமானது, அதைத் தனது 22, 23 வயதிலேயே முடித்துவிட்டார் மோடி என்கிறார் ஓர் முக்கிய ஆர் எஸ் எஸ் பிரச்சாரகர்.
பிறகு ஆர் எஸ் எஸ்சின் மாணவர் பிரிவான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தின் குஜராத் மாநிலப் பிரிவை மேற்பார்வையிடும் பிரச்சாரகராக மோடி பொறுப்பேற்கிறார். அவசரகால நிலை முழுதும் அப்பொறுப்பில்தான் அவர் இருந்தார். பொதுவாக வித்யார்த்தி பரிஷத் போன்ற அமைப்பை நடத்தும் ஆர் எஸ் எஸ் பிரச்சாரகர் அதிகமாக வெளியார் கண்களில் படக்கூடாது. தோலுக்கடியில் ஓடும் ரத்த நாளமாகத் தான் செயல்பட்டு வழிகாட்டவேண்டும். ஆனால் மோடிக்கு அதெல்லாம் ஒத்துவராது. அவர் பாணி அப்படி. அவரது முத்திரை எல்லாவற்றிலும் பதியவேண்டும். அந்த வகை செயல்முறை அப்போதே வெளியாகத் தொடங்கியது. சின்னச் சின்ன விஷயங்களில் கூட அவர் சில கறாராக நடந்துகொண்டார். 1970களில் குஜராத் மாணவர் அமைப்பில் இருந்த ஒரு நிர்வாகி மோடி தன்னை முன்னிறுத்துவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். மற்ற பல தலைவர்களுக்கு அது சற்றும் பிடிக்கவில்லை எனக் குறிப்பிடுகிறார்.
எமர்ஜென்சி கால கட்டத்தில் பரிஷத் தெருமுனை ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது. புல்லாபாய் சாலையில் அப்படி ஒரு கூட்டம் நடந்தது. “அத்தகைய கூட்டங்களில் நாங்கள் அரசுக்குக் கண்டனம் தெரிவித்தாலும் கூட நிதானமாகவே பேசவேண்டும். ஏனெனில் அதுவே ஆர் எஸ் எஸ் பாணி. தவிரவும் போலீஸ், உளவுத் துறை எங்களைக் கண்காணித்து வந்தது எங்களுக்குத் தெரியும் எனவே கவனமாக நடந்துகொள்ளுமாறு நாங்கள் பணிக்கப்பட்டிருந்தோம். அப்போது அவ்வழியாக சைக்கிளில் வந்த நரேந்திர மோடிஜிக்கு எங்கள் பேச்சு ஆத்திரத்தையே வரவழைத்தது. சட்டென்று மேடையிலேறி, மைக்கைப் பிடுங்கி, ஆக்ரோஷமாகப் பேசத்துவங்கினார். அரசை காட்டமாகத் தாக்கினார்,” என்கிறார் அந்த நிர்வாகி.
மோடியின் ஆவேசம் அங்கு கூடியிருந்தவர்களை உற்சாகப்படுத்தியது. ஆனால் அன்றிரவு ஹெட்கேவார் பவனில் மூத்த தலைவர்கள் அவ்வாறு தன்னை அடையாளப் படுத்திக் கொண்டு கடுமையாகப் பேசியதற்காக மோடியைக் கடிந்து கொண்டனர். மோடி அந்த நேரம் ஏறத்தாழ ஒரு இரகசியப் பிரச்சாரக்காகத்தான் செயல்பட்டுவந்தவர். அப்படியிருக்கையில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டது தவறு என சுட்டிக்காட்டப்பட்டது.
”என்ன பேசினீர்கள் என்பதை விடுங்கள். உங்களுடையதைப் போன்றதொரு பொறுப்பிலிருப்பவர் அத்திசையிலேயே சென்றிருக்கக்கூடாது. ஆர்ப்பாட்டம் பிசுபிசுத்திருந்தாலும் பரவாயில்லை. ஆனால் அமைப்புக் கட்டுப்பாடு மிக முக்கியம்,” என அவரிடம் வலியுறுத்தப்பட்டது.
என்னதான் சங்கத்திற்கு அவர் விசுவாசி, சங்கக் கருத்தியலை அவர் முழுமையாக ஏற்றிருந்தார் என்றாலுங்கூட, எப்போதுமே தனி நபர்களை விட சங்கம் முக்கியமானது, கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ளவேண்டும், நடத்தை நெறிமுறைகளை சரிவரக் கடைபிடிக்கவேண்டும் என்பதெல்லாம் மோடிக்கு சரிப்பட்டு வரவில்லை.
ஆர் எஸ் எஸ்சிலும் பாரதீய ஜனதா கட்சியிலும் மோடிக்கு மூத்தவராயிருந்து, பின்னாளில் அவருடன் கடுமையாக மோதி, ஒரு கட்டத்தில் குஜராத் முதல்வராகவும் பணியாற்றைய சங்கர்சிங் வகேலா எப்படி மோடி சங்க நெறிகளை மீறுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார் என்று விளக்கினார்: ”தாமதமாகவே எழுவது அவருக்கு வழக்கம், எனவே காலை ஷாகாவை அடிக்கடி கோட்டைவிடுவார். எதையும் மற்றவர்கள் போல செய்யமாட்டார். மாறுபட்டே காணப்பட்டார். நாங்களெல்லாம் முழுக்கை சட்டை அணிந்தால் அவர் அரைக்கை சட்டைதான் போடுவார். நாங்கள் காக்கி ட்ரௌசர் அணிந்தால் அவர் மட்டும் வெள்ளை. ஒரு முறை கோல்வால்கரே ஏனிப்படி குறுந்தாடி என பகிரங்கமாகவே கேட்டார்…”
Gujarat-Narendra_Modi22
இப்படியெல்லாம் கட்டுப்பாடுகளை மீறினாலும் அவரது திறமை, கடமைகளை சரிவர நிறைவேற்றுதல் போன்ற குணாதிசயங்கள் மோடிக்கு நற்பெயரைப் பெற்றுக்கொடுத்தன. எந்த பொறுப்பை ஒப்படைத்தாலும் அதை செவ்வனே செய்துமுடிப்பார். எமர்ஜென்சியின்போது பல்வேறு சிறு பிரசுரங்களை இரகசியமாக அச்சிட்டு வெளியிடும் பணி குஜராத்துக்குத்தான் ஒதுக்கப்பட்டது. இலட்சக்கணக்கில் பல மொழிகளில் அங்கே அச்சிடப்பட்டு மற்ற மாநிலங்களுக்கு அவற்றை அனுப்பிவைக்கும் பொறுப்பு மோடியுடையது. அதை சிறப்பாக நிறைவேற்றினார் அவர்.
இன்னொரு சமயம் விஸ்வஹிந்து பரிஷத்தின் மாநிலக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. பெரிய அளவில் நிதி திரட்டப்பட்டது. திரட்டப்பட்டதை எப்படி பாதுகாப்பது என்று விஹெச்பி தலைவர்களுக்கு அச்சமும் கவலையும் ஆனால் மோடியிருக்க பயமேன்? ஒரு குழி தோண்டி கரன்சி நோட்டுக்களைப் புதைத்து அதன் மீது தன் படுக்கையை விரித்துவிட்டார் அவர் !
மிகக் குறுகிய காலத்தில் அவரது திறமை நிரூபிக்கப்பட, குஜராத் ஆர் எஸ் எஸ்சில் மிக இன்றியமையாதவரானார் மோடி. ஆனால் அவர் நெருங்கிப் பழகியிருந்த பலர் வேகமாக முன்னேறியிருந்தனர். அவசர கால கட்டத்தில் தான் உதவிய பலர் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாயிருந்தனர். குஜராத்திலேயெ ஜனதா கட்சி அரசில் அமைச்சர்களாகியிருந்தனர். எனவே மற்ற தலைவர்களின் தேவைகளை கவனிக்கும் பொறுப்பிலிருந்து மீண்டு  தானும் ஒரு தலைவராக வேண்டுமானால் அதற்கு உரிய முறையில் தயார் படுத்திக் கொள்ள வேண்டுமென்பதை உணர்ந்தார் மோடி. நாகபுரியில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பயிற்சிகளை முடித்தாலே தானும் பாரதீய ஜனதாவின் தலைவராக உருமாற முடியும் என்பதறிந்து அத்தகைய பயிற்சிகளையும் பெற்றார் மோடி என்கிறார் மேலே குறிப்பிட்ட நிர்வாகி.
எமர்ஜென்சி முடிந்து ஓர் ஆண்டில், 1978ல், மத்திய குஜராத்தில் ஆறு மாவட்டங்களுக்குப் பொறுப்பான பிரச்சாரக்கானார் அவர். அடுத்த மூன்றாண்டுகளில், 31 வயதிலேயே ஆர் எஸ் எஸ்சிற்கும், குஜராத்திலிருந்த அனைத்து பரிவார அமைப்புக்களுக்கும் இடையேயான பாலமாக செயல்படும் பொறுப்பும் அவரை வந்தடைந்தது.
தொடரும்.
மொழி பெயர்ப்பு : த.நா.கோபாலன்
நன்றி : தி கேரவன் மாத இதழ். 

கருத்துகள் இல்லை: