வியாழன், 27 மார்ச், 2014

ஸ்டாலின் கலைஞரை எப்படி பிளாக் மெயில் செய்து அழகிரியை வெளியேற்றினார் ?

அழகிரியை கட்சியை விட்டு நீக்கவில்லை என்றால், பிரசாரத்திற்கு போக மாட்டேன்' என, கருணாநிதியிடம் திட்டவட்டமாக தெரிவித்த ஸ்டாலின், சொன்னபடியே, தன், இரண்டாம் கட்ட பிரசாரத் திட்டத்தை ரத்து செய்து விட்டார். அதன் விளைவாகவே, தி.மு.க.,வில் இருந்து, அழகிரியை அடியோடு நீக்கும் அதிரடி நடவடிக்கையை கருணாநிதி எடுக்க வேண்டியதாகி விட்டது என, அறிவாலய வட்டாரம் தெரிவிக்கிறது. அதுமட்டுமின்றி, அழகிரியை நீக்கிய பின்னால் தான், மதுரை, தேனி, திண்டுக்கல்லுக்கு பிரசாரத்திற்கு செல்வேன் என, ஸ்டாலின் நிபந்தனை விதித்துள்ளளார். அது நடந்த பிறகே, நேற்று அவரது தென் மாவட்ட பிரசார பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. தி.மு.க.,வில், அழகிரி - ஸ்டாலின் இடையேயான மோதல், நீண்ட காலமாக உள்ளது. ஒவ்வொரு முறையும், இந்த பிரச்னை வெளியே வரும்போது, ஏதாவது சமாதானம் செய்து, அதை மறைத்து விடுவதையே, கட்சித் தலைமை வாடிக்கையாக கையாண்டது.
அழகிரி எங்காவது வேற்று கிரகத்தில் குடியேறினால் தவிர பிரச்சினை இனித் தீரப்போவதில்லை. 
இதனால், பிரச்னைக்கு உண்மையான தீர்வு காண முடியாமல் போய் விட்டது.இருவருக்கும் இடையே நடக்கும், வாரிசு யுத்தம் பற்றி வெளியான செய்திகளுக்கு கூட, மறுப்பு அறிவிப்பு வெளியிடுவதில் தான், கருணாநிதியின் கவனம் எல்லாம் இருந்ததே தவிர, கட்சிக்கு யார் வாரிசு என்பதை முடிவு செய்ய முடியாத நிலையே நீடித்தது.இதனால், அழகிரி ஆதரவாளர்கள், கட்சிக்குள் தனி குழுவாக இயங்கத் துவங்கினர். அதன் எதிரொலியாக, மதுரை உள்ளிட்ட, தென் மாவட்டங்களில், ஸ்டாலின் தலைமைக்கு எதிர்ப்பு உருவாகியது. அதை முறியடித்து, கட்சியை கைப்பற்ற ஸ்டாலின் எடுத்த, சமீபத்திய முயற்சிகளுக்கு பலன் கைகூடியுள்ளது.

அழகிரிக்கு எதிராக
அழகிரியின் கோட்டைக்குள் புகுந்து, ஆட்களை இழுக்கத் துவங்கியதும், அண்ணன் - தம்பி சண்டை உச்சத்தை தொட்டது. ஆனாலும், ஸ்டாலின் விடாமல் பிடித்த வலையில், அழகிரியின் ஆட்களாக இருந்த நிர்வாகிகள் விழுந்தனர். அதன்மூலம் கட்சியை வசப்படுத்திய ஸ்டாலின், அடுத்த கட்டமாக, அழகிரிக்கு எதிராக திரும்பினார். பொதுக்குழு போஸ்டர் விவகாரத்தை பயன்படுத்தி, கொஞ்சமிருந்த அழகிரியின் ஆதரவு நிர்வாகிகளை கட்டம் கட்டினார். கூடாரம் கலைக்கப்படுவதை கேள்விப்பட்டு, வெளிநாட்டிலேயே கொந்தளித்த அழகிரி, அதே வேகத்தில் சென்னை திரும்பி, கோபாலபுரம் சென்றார். அங்கு நடந்த சூடான விவாதமும் அழகிரிக்கு எதிராகவே அமைந்தது. தி.மு.க.,வில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டதும், தன் ஆட்டத்தை அழகிரி துவங்கினார். ஊர் ஊராக சென்று ஆதரவாளர்களை திரட்டி, ஸ்டாலினுக்கு எதிராக களம் இறங்குவார் என, அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், தி.மு.க.,வின் ஜென்ம விரோதிகளாக இருப்பவர்களை சந்திப்பதும், பேட்டி அளிப்பதுமாக அவரது நடவடிக்கை திரும்பியதும், கட்சித் தலைமைக்கு அவர் மீதானபயம் போய், கோபம் அதிகரித்தது.

கருணாநிதியை வீழ்த்த வேண்டும்
இந்த நேரத்தை ஸ்டாலின் சரியாக பயன்படுத்திக் கொண்டார். 'தி.மு.க., தோற்க வேண்டும்; கருணாநிதியை வீழ்த்த வேண்டும் என விரும்புகிறவர்களை, அழகிரி சந்திக்கிறார்; ஆதரவு அளிப்பது பற்றி ஆலோசிப்பேன் என, வெளிப்படையாக பேட்டி தருகிறார். இதுவே வேறு ஒருவராக இருந்தால், இப்படி அப்பட்டமாக கட்சிக்கு விரோதமாக செயல்பட முடியுமா என, கட்சியின் அடிமட்ட தொண்டர்களும், பொது மக்களும் கருதுகின்றனர். இது கட்சிக்கு அவப்பெயரை தேடித் தந்து விடும்' என, கருணாநிதியின் காதுகளுக்கு செய்திகளை கொண்டு சேர்த்தார் ஸ்டாலின். அத்துடன், மாவட்ட செயலர்களுக்கும் ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இதுபோன்று கருணாநிதிக்கு தகவல் அனுப்பும்படி பணிக்கப்பட்டனர். அழகிரிக்கு எதிராக, அதுவும் நன்றாகவே வேலை செய்துள்ளது என்கின்றனர், தி.மு.க.,வினர்.

இதற்கிடையில், 'தி.மு.க.,வின் சொத்துக்களை அபகரிக்க திட்டமிடுகிறார்' என, ஸ்டாலின் மீது, அழகிரி பகிரங்கமாக குற்றம் சாட்டியதும், டென்ஷனான ஸ்டாலின், பிரசாரத்தை பாதியில் முடித்து விட்டு திரும்ப திட்டமிட்டார். ஆனால், கட்சியில் பெரிய அளவில் குழப்பம் ஏற்படும் என, தெரிவிக்கப்பட்டதால், அதை கைவிட்டுள்ளார். அதேநேரத்தில், 'இனிமேலும் அழகிரியை கட்சியில் வைத்துக் கொண்டிருந்தீர்கள் என்றால், நான் பிரசாரம் செய்ய போவதில்லை. பேசாமல் நானும் வீட்டில் உட்கார்ந்து விடுவேன். இதுவரைக்கும், 10 தொகுதிகளுக்கு போய் வந்து விட்டேன். மீதி தொகுதிகளை பார்த்துக் கொள்ளுங்கள்' என, கட்சி தலைமையிடம் கறாராக கூறியதாக தெரியவந்துள்ளது.

வெளியனுப்பு விழா
அதன்படி, 26ம் தேதி துவங்கி, ஏப்ரல் 22ம் தேதி வரையிலான அவரது சுற்றுப் பயண திட்டத்தை ரத்து செய்து விட்ட தகவலும், கருணாநிதிக்கு போய் சேர்ந்தது. இதை அடுத்தே, அழகிரிக்கு வெளியனுப்பு விழா நடத்தப்பட்டுள்ளது என, கூறுகிறது அறிவாலய வட்டாரம்.நேற்று வெளியான அறிவிப்பில், ஏப்ரல், 3ம் தேதி, ராமநாதபுரம், சிவகங்கை தொகுதியிலும், 20ம் தேதி மதுரை, தேனி, திண்டுக்கல் தொகுதிகளிலும் ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

அழகிரியை சந்திப்பேன்: ஜான் பாண்டியன்
''அழகிரியை, நட்பு ரீதியாக சந்தித்து ஆதரவு கேட்பேன்,'' என, தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன் கூறினார்.அவர் கூறியதாவது:தென்காசி தொகுதியில் போட்டியிடும் கிருஷ்ணசாமியை எதிர்த்து பிரசாரம் செய்வேன். அழகிரி நீக்கம், அவர் குடும்ப அரசியல் சம்பந்தப்பட்டது. அந்த விஷயத்துக்குள் நாங்கள் நுழைய விரும்பவில்லை. ஆனால், எல்லாரும் அழகிரியை சந்தித்து ஆதரவு கேட்கின்றனர். அந்த வகையில் நானும், அவரை சந்திப்பேன்.இவ்வாறு, அவர் கூறினார். dinamalar.com

கருத்துகள் இல்லை: