திங்கள், 24 மார்ச், 2014

பழனி: 40 ஆயிரம் ஆண்டு பழமையான குகை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

திண்டுக்கல் மாவட்டம், பழனி மலைகளில் சங்ககால கல்வெட்டுகள், கற்கால மனிதர்களின் குகை ஓவியங்கள், முதுமக்கள் தாழிகள் உள்ளிட்ட பல்வேறு வரலாற்று சான்றுகள் தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பழனி அருகே பாப்பன்பட்டி மலையில் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பழைய கற்கால மனிதர்கள் வரைந்த குகை ஓவியங்களை கண்டறிந்தனர்.
இந்த குகை ஓவியங்கள் ரத்த சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் 3 தொகுப்பாக காணப்படுகின்றன. இதில் வெள்ளை வண்ண ஓவியங்கள் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் வரையப்பட்டதாகும். ரத்த சிவப்பு வண்ணத்தில் ஆன ஓவியங்கள் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த மனிதர்களால் வரையப்பட்டுள்ளன.

இந்த ஓவியங்கள் சிதைந்த நிலையில் உள்ளன. ஒருசில விசித்திர குறியீடுகள் மட்டும் தென்படுகின்றன. இந்த ஓவியங்களில் ஆயுதத்தை கொண்டு வேட்டையாடுவது போன்ற ஒரு உருவம் மட்டும் மங்கலாக தெரிகிறது.
மஞ்சள் நிற ஓவியத்தில் தடித்த வால், 4 கால்கள், முதுகில் திமில் போன்ற அமைப்பு, குட்டையான கழுத்துடன் வாய் திறந்த நிலையில் டைனோசர் போன்ற உருவத்தை கற்கால மனிதர்கள் வரைந்துள்ளனர். இந்த ஓவியம் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்டதாகும்.
டைனோசர்கள் 6½ கோடி ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துவிட்டதாக கூறப்படுகிறது. கற்கால மனிதர்கள் நேரில் பார்த்தவற்றை மட்டுமே ஓவியங்களாக வரைந்துள்ளனர். அதனால் அவர்கள் டைனோசர் அல்லது அதுபோன்ற உருவத்தை கொண்ட பயங்கர விலங்குகளை பார்த்து வரைந்திருக்கலாம்.
இதனால் பழனி பகுதியில் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் டைனோசர்களோ அல்லது அதுபோன்ற பெரிய விலங்குகளோ வாழ்ந்து இருப்பதை இந்த ஓவியங்கள் உறுதிபடுத்துகின்றன என்று தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறினார். maalaimalar.com

கருத்துகள் இல்லை: