வியாழன், 5 டிசம்பர், 2013

கேரளாவில் அட்டைபாடியில் உள்ள தமிழர்களை அகதிகளாக்கும் கேரளா அரசு !

கோவை : கேரள மாநிலம், அட்டப்பாடியில், பல தலைமுறைகளாக வாழும் தமிழர்களின் நிலம் உள்ளிட்ட சொத்துக்களை அபகரித்து, அகதிகளாக்கி வெளியேற்றும் முயற்சியில், கேரள மாநில அரசு ஈடுபட்டிருப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தின் வடகிழக்கில், மன்னார்காடு தாலுகாவில் உள்ளது, அட்டப்பாடி. மேற்குத்தொடர்ச்சி மலையில், அடர்ந்த வனம்சார்ந்த இப்பகுதி சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. கேரள மாநிலத்தின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது, அட்டப்பாடியில்தான் ஆதிவாசிகள் அதிகம் வசிக்கின்றனர்; இதன் எல்லை, ஏறத்தாழ 750 சதுர கி.மீட்டர். இங்கு இருளர், முடுகா, குரும்பா இனத்தவர் குறிப்பிட்ட அளவில் உள்ளனர். அட்டப்பாடி மலை <உச்சியிலுள்ள மல்லேஸ்வரன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது; சிவராத்திரியின்போது, விழாக்கள் களைகட்டும்; கணக்கிலடங்கா சுற்றுலா பயணிகள் கூடுவர்.அட்டப்பாடிக்கு இன்னொரு முக்கியத்துவமும் உண்டு. இங்கு, தமிழர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். தலைமுறை, தலைமுறையாக இங்கு வசிக்கும் தமிழர்களுக்கு வீடு, விவசாய நிலம், வியாபார கடைகள் உள்ளன.
சமீபகாலமாக, இங்கு வசிக்கும் தமிழர்களின் நிலத்தை அபகரித்து, ஓட்டாண்டியாக்கி, ஊரைவிட்டே விரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது, கேரள அரசு. ஆதிவாசிகளின் நிலங்கள், ரியல் எஸ்டேட் மாபியாக்களிடம் சிக்கியிருப்பதாகவும், வன எல்லைக்குள் விதிமீறி ரிசார்ட்கள் மற்றும் ஆடம்பர சொகுசு பங்களாக்கள் கட்டப்பட்டிருப்பதாகவும், அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கையை துவக்குவதாகவும் கூறி, தமிழர்களின் விவசாய நிலம், வீடுகளை அபகரிக்க திட்டமிட்டு< முனைப்புடன் செயலாற்றி வருகிறது. மன்னார்காடு எல்லைக்குரிய கேரள வருவாய்துறை அதிகாரிகள், அட்டப்பாடிவாழ் தமிழர்களுக்கு சமீபத்தில் ஒரு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்தனர்.

அதில், "ஆதிவாசி நிலங்கள், விதிமீறி பிற நபர்களுக்கு கைமாறியுள்ளன. இவற்றை கையகப்படுத்தி, மீண்டும் ஆதிவாசிகளுக்கே வழங்க வேண்டியுள்ளது. எனவே, இந்த நோட்டீஸ் கண்டஏழு தினங்களுக்குள், ஆக்கிரமைப்பை அகற்றிக்கொள்ளவேண்டும். இல்லாவிடில், ஜாமினில் வெளிவரமுடியாதவாறு, தகுந்த சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கை, அட்டப்பாடி வாழ் தமிழர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. "தலைமுறை, தலைமுறையாக வாழ்ந்துவரும் நிலங்களை காலி செய்துவிட்டு, சொத்துக்களை அப்படியே விட்டுவிட்டு, அனாதைகளைப் போன்று
எப்படி வெளியேற முடியும்; இதற்கு உடன்பட மாட்டோம்' என, எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் குதிக்க தயாராகி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக, தமிழக அரசியல் கட்சிகள் களமிறங்கியுள்ளன. ஆனால், நில வெளியேற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகளை கேரள அரசு மறுத்திருக்கிறது. ஆதிவாசிகளின் வாழ்விடங்கள் குறித்த நில ஆய்வு மட்டுமே தற்போது நடக்கிறது எனவும் தெரிவிக்கிறது.
இது குறித்து, வால்பாறை இ.கம்யூ., எம்.எல்.ஏ., ஆறுமுகம் கூறுகையில், ""அட்டப்பாடியில் வசிக்கும் தமிழர்களை நிலவெளியேற்றம் செய்யக்கூடாது. இதற்கான முயற்சி மேற்கொள்ளும் கேரள அரசை, இ.கம்யூ., வன்மையாக கண்டிக்கிறது. கேரள அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளால், இருமாநில நல்லுறவு பாதிக்கும். அட்டப்பாடியில் இருந்து தமிழர்களை வெளியேற்றுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். அட்டப்பாடி வாழ் தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும்,'' என்றார்.
கேரள தமிழர் சங்கம் அரசுக்கு கோரிக்கை: கேரள வாழ் தமிழர்கள் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச்செயலாளர் பேச்சிமுத்து கூறுகையில், ""இந்த விவகாரத்தை தமிழர்கள் விவகாரமாக பார்க்கக் கூடாது; விவசாயிகள் பிரச்னையாகவே பார்க்க வேண்டும். ஏறத்தாழ 100 ஆண்டுகளாக, தமிழர்கள் அட்டப்பாடியில் வசிக்கிறார்கள். நான்கு, ஐந்து பஞ்சாயத்துகளின் மக்கள் தொகையில் 40 முதல் 80 சதவீதத்தினர் தமிழர்கள். இவர்களுக்குரிய சமூக, பொருளாதார பாதுகாப்பை, கேரள அரசு வழங்க வேண்டும்; நிலத்தைவிட்டு வெளியேற்றக்கூடாது,'' என்றார்.  dinamalar.com 

கருத்துகள் இல்லை: