வெள்ளி, 6 டிசம்பர், 2013

23 ஆண்டுகள் கழித்து மருத்துவமனை துப்புரவு பணியாளருக்கு நிரந்தர பணி ! ஏழைகளுக்கு நீதி என்பது வெகு தூரம்

காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய மருத்துவமனை, நெல்லிக்குப்பத்தில் உள்ளது. அந்த மருத்துவமனையின் துப்புரவு பணியாளராக எம்.கிருஷ்ணவேணி (வயது 53) 1-12-89 அன்று பணியில் சேர்ந்தார். இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்தார். அதில், நாள் முழுவதும் நான் அந்த மருத்துவமனையில் துப்புரவு பணியாற்றுகிறேன். மருத்துவமனையில் உள்ள கழிவுகளை அப்புறப்படுத்துவது எனது பணியாகும். எனது பணி, பகுதி நேரப்பணியல்ல. ஆனால் 23 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எனது பணியை அரசு வரைமுறை செய்யவில்லை. இதுசம்பந்தமாக அரசுக்கு விண்ணப்பங்கள் கொடுத்தும் அது கவனிக்கப்படவில்லை. எனவே எனது பணியை வரைமுறை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி டி.ராஜா விசாரித்தார். 10 ஆண்டுகளுக்கும் மேல் அவர் அந்த மருத்துவமனையில் பணியாற்றி இருப்பதால், கிருஷ்ணவேணியின் பணியை நான்கு வாரங்களுக்குள் வரைமுறை செய்ய வேண்டும் என்று 5-10-12 அன்று உத்தரவிட்டார்.


ஆனால் அந்த உத்தரவை காஞ்சீபுரம் கலெக்டர் நிறைவேற்றவில்லை. எனவே அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கை கிருஷ்ணவேணி தாக்கல் செய்தார். ஏற்கனவே கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாததால் காஞ்சீபுரம் கலெக்டர் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி டி.ராஜா விசாரித்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, 24-10-13 தேதியிட்ட அரசாணையை அரசுப் பிளீடர் தாக்கல் செய்தார். அதில் 30-11-99 அன்றிலிருந்து கிருஷ்ணவேணியின் பணி வரைமுறை செய்யப்பட்டுவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் வரைமுறைப்படுத்தப்பட்ட சம்பளத்தை அக்டோபர் மாதத்தில் இருந்து கிருஷ்ணவேணி வாங்கி வருகிறார் என்றும் நீதிபதியிடம் கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து அவமதிப்பு வழக்கு முடிக்கப்பட்டது.

பணிவரைமுறை செய்யப்படுவதற்கு முன்பு கிருஷ்ணவேணி 1,200 ரூபாய் சம்பளம் வாங்கினார். தற்போது அவருக்கு ரூ.18 ஆயிரம் சம்பளம் தரப்படுகிறது என்று அவர் தரப்பில் ஆஜரான வக்கீல் பி.சாலமோன் கூறினார்.maalaimalar.com

கருத்துகள் இல்லை: