புதன், 4 டிசம்பர், 2013

திருமாவளவன்: தலித்துக்களுக்கு எதிராக பாயும் கறுப்பு சட்டங்களை ஒழிக்கவேண்டும்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தடுப்புக் காவல் சட்டங்களில் தலித்து களையும் சிறுபான்மையினரையும் சிறைப்படுத்துவதைக் கைவிடுக! என்று தமிழக அரசுக்கு தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   ‘’தமிழ்நாட்டில் தனது சாதியினர் மீதுதான் அதிக அளவில் தடுப்புக் காவல் சட்டங்கள் ஏவப்படுவதாக அண்மையில் பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாசு கூறியுள்ளார். அதற்குத் தமிழக அரசின் சார்பில் மறுப்பெதுவும் தெரிவிக்கப்படாத நிலையில் அந்தத் தவறான செய்தியை உண்மை என்று பொதுமக்கள் நம்புகிற நிலை ஏற்பட்டிருக்கிறது. தடுப்புக் காவல் சட்டங்கள் என்பவை மக்களுக்கு எதிரான கறுப்புச் சட்டங்கள் அவற்றை முற்றாக ஒழிக்கவேண்டும் என்பதே விடுதலைச் சிறுத்தைகளின் நிலைபாடு. அந்தக் கோரிக்கையை முன்வைத்து மனித உரிமை அமைப்புகளோடு இணைந்து பல்வேறு போராட்டங்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தியிருக்கிறது. பொடா சட்டத்துக்கு எதிராக இடதுசாரிக் கட்சிகளை இணைத்துப் போராடியிருக்கிறது. ஏனென்றால் இத்தகைய கறுப்புச் சட்டங்கள் ஆட்சியாளர்களால் ஏழை எளிய மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதுதான் வரலாறு.
அதற்கு தற்போதுள்ள அதிமுக ஆட்சியும் விதிவிலக்கல்ல.
தேசிய குற்ற ஆவண மையம் ( என்.சி.ஆர்.பி) வெளியிட்டிருக்கும் 2012 ஆம் ஆண்டுக்கான புள்ளி விவரங்களின்படி இந்தியாவிலேயே அதிகமான நபர்களை தடுப்புக்காவல் சட்டத்தின்கீழ் கைது செய்திருக்கும் மாநிலம் தமிழ்நாடுதான். இரண்டாவது இடம் வகிப்பது குஜராத். இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் என்று சொல்லப்படும் உத்தரப்பிரதேசம் கூட மூன்றாவது இடத்தில்தான் இருக்கிறது.
தமிழ்நாட்டில் 523 பேர் தடுப்புக்காவல் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டிருப்பதாக என்.சி.ஆர்.பி யின் புள்ளிவிவரம் கூறுகிறது. 2013 ஆம் ஆண்டு முடிய இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்குமேயொழிய குறைந்திருக்க வாய்ப்பில்லை.
சாதாரண சட்டங்களின்கீழ் கைதுசெய்யப்பட முடியாத கொடுங்குற்றவாளிகள்மீதுதான் இந்தச் சட்டங்கள் பாய்ந்திருக்கும் என நினைத்தால் நாம் ஏமாந்துதான் போவோம். தடுப்புக் காவல் சட்டங்களின்கீழ் கைது செய்யப்பட்ட 523 பேரில் 202 பேர் தாழ்த்தப்பட்டவர்கள், 36 பேர் பழங்குடியினர், 77 பேர் முஸ்லிம்கள், 43 பேர் கிறித்தவர்கள். மொத்த எண்ணிக்கையான 523 பேரில் 358 பேர் இந்த நான்கு சமூகங்களைச் சேர்ந்தவர்கள். அதாவது 2012 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் தடுப்புக் காவல் சட்டங்களின்கீழ் கைதானவர்களில் 68% பேர் மேற்சொன்ன நான்கு சமூகங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
தமிழகத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சாதி வெறியர்கள்மீதோ, மத வெறியர்கள் மீதோ இந்தச் சட்டங்களை ஏவுவதற்குப் பதிலாக எந்த மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்களோ அவர்கள்மீதே இதைப் பயன்படுத்துவது இயற்கை நீதிக்கு முரணானது. இந்தச் சட்டங்களின்கீழ் சிறைப்படுத்தப் பட்டிருப்பவர்கள் உண்மையிலேயே குற்றமிழைத்திருந்தால் பிற சட்டங்களின்கீழ் அவர்கள்மீது நட வடிக்கை எடுக்கலாம் என்பதைத் தமிழக அரசின் கவனத்துக்குச் சுட்டிக்காட்டுகிறேன்.

எவ்வித வரைமுறையுமின்றி தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர்மீது தடுப்புக் காவல் சட்டங்களை ஏவும் போக்கை நிறுத்திக்கொள்ளவேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: