செவ்வாய், 3 டிசம்பர், 2013

ஒரு வழியாக தேர்தல் ஆணையம் ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ்

சென்னை: தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 4ம் தேதி நடைபெறும் என்று, கடந்த அக்டோபர் மாதம் 4ம் தேதி தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தேர்தல் அறிவிப்பு தேதி வெளியான தினத்தில் இருந்து, சேலம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துவிட்டது.

இந்நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது தேர்தல் ஆணையத்துக்கு ஒரு புகார் வந்துள்ளது. அந்த புகாரின்படி, கடந்த 28ம் தேதி அவரது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக ஏற்காடு தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்யும்போது புதிய திட்டங்கள் குறித்து அறிவிப்புகளை முதல்வர் அறிவித்திருக்கிறார். இதையடுத்து, தேர்தல் ஆணையம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு புகார் தொடர்பாக ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயல் என்பதால் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீசுக்கு செவ்வாய்க் கிழமை (இன்று) மாலை 5 மணிக்குள் முதல்வர் பதில் தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

அதிமுகவுக்கு வாக்களிக்க ஜெயலலிதா வேண்டுகோள்

ஏற்காடு தொகுதி அதிமுக வேட்பாளர் சரோஜாவுக்கு வாக்களித்து, அவரை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று வாக்காளர்களை முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: விலையில்லா அரிசி; விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின் விசிறி; விலையில்லா கறவைப் பசுக்கள் மற்றும் ஆடுகள் திட்டம்; உழவர் பாதுகாப்புத் திட்டம்; மருத்துவ காப்பீட்டு திட்டம்; தாலிக்கு தங்கம் திட்டம்; கட்டணமில்லா கல்வி; விலையில்லா புத்தகங்கள்; சீருடைகள்; காலணிகள்; பென்சில்கள்; பெட்டிகள்; வரைபட புத்தகங்கள்; மடிக் கணினிகள்; சைக்கிள்கள்; பசுமை வீடுகள் திட்டம்; அம்மா குடிநீர் என மக்கள் நலன் காக்கும் பல திட்டங்கள் உங்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எனது தலைமையிலான அதிமுக அரசின் சாதனைகளை சீர்தூக்கி பார்த்து வாக்களிக்க வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

எக்ஸ்ட்ரா தகவல்

தேர்தல் நடத்தை விதிகள் முதலில், மனுதாக்கல் தொடங்கும் நாளில் இருந்து அமல்படுத்தப்பட்டன. பின்னர், அது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் என மாற்றப்பட்டது.dinakaran.com

கருத்துகள் இல்லை: