ஞாயிறு, 1 டிசம்பர், 2013

கலைஞர்: பாண்டியனுக்கு என்னை கேள்வி கேட்க என்ன தகுதி உண்டு ? ஜால்ரா தகுதி போதாதா கலைஞரே ?

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனுக்கு என்னைக் கேள்வி கேட்க என்ன தகுதி இருக்கிறது என்று கேட்டுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
இதுதொடர்பாக அவர் அளித்து்ள்ள கேள்வி பதில்
கேள்வி - ஏற்காடு தொகுதியில், அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், திருவாரூர் தொகுதியில் வெற்றி பெற்ற நீங்கள் சட்ட மன்றம் சென்றீர்களா என்று கேட்டிருக்கிறாரே?
பதில்: சட்டமன்றத்திற்கு நான் சென்றால், என்ன கேள்விகள் எல்லாம் கேட்பேனோ என்பதற்காக, என்னுடைய உடல் நிலை கருதி அதற்கேற்ப இட வசதி செய்து கொடுக்காமல், முன்னாள் முதல்வர் என்பதற்கான தகுதியிலே கூட இடம் ஒதுக்காமல் அலட்சியமாக இருப்பதைப் பற்றி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இதுவரை வாய் திறந்தது உண்டா?

அந்தக் கட்சியைச் சேர்ந்த மூத்த உறுப்பினர்களில் ஒருவரும், சிறந்த தொழிற்சங்கவாதியுமான தோழர் தியாகராஜன் கடந்த வாரம் இறந்து விட்டார். அந்தக் கட்சி எங்களுடைய தோழமைக் கட்சிகூட அல்ல. உடனடியாக நான் இரங்கல் தெரிவித்தேன். எங்கள் கட்சியின் சார்பில் பொருளாளரையும், மற்றவர் களையும் அனுப்பி வைத்தேன். ஆனால் அந்தக் கட்சியின் தோழமைக் கட்சியான அதிமுக சார்பில் யாராவது ஒருவர் அந்த இடத்திற்கு நேரில் வந்து இரங்கல் தெரிவித்தார்களா? முதல்வரே மூன்று நாட்களுக்குப் பிறகுதான் அதற்காக இரங்கல் தெரிவித்தார்.
ஏன், கடந்த ஆண்டு புதுக்கோட்டையில் அதிமுகவுடன் தோழமை சேர்ந்து வெற்றி பெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் மறைந்ததால் நடைபெற்ற இடைத் தேர்தலின்போது, அங்கே போட்டியிட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கே வாய்ப்பு அளிக்காமல், அதிமுக போட்டியிட்டது.
ஆனாலும் அதையும் பொருட்படுத்தாமல், தற்போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அழைக்காத விருந்தாளியைப் போல ஏற்காடு சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதுபோலவே மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் எந்த அளவிற்கு அவமானப்படுத்த முடியுமோ, அந்த அளவிற்கு அவமானப்படுத்திவிட்டு, அதன் பிறகு வழங்கினார்கள். இந்த இலட்சணத்தில் தா. பாண்டியனுக்கு என்னைப் பற்றி கேள்வி கேட்க என்ன அடிப்படை இருக்கிறது? என்று கேட்டுள்ளார் கருணாநிதி. tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: