புதன், 4 டிசம்பர், 2013

தமிழகத்தில் 8.5 லட்சம் விவசாயிகளை காணோம்'? வேறு வேலை தேடி போய்விட்டார்கள் !

திண்டுக்கல்:தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 8.5 லட்சம் விவசாயிகள், உழவுத்தொழிலை விட்டு, வேறு தொழில்களுக்கு மாறியுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள், மானியங்களை நேரடியாக வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, பயிர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இதில், விவசாயிகள் மற்றும் மண் மாதிரி விபரங்கள் சேகரிக்கப்பட்டு, ஆன்லைனில் பதிவு செய்யப்படுகிறது. தமிழகத்தில், விவசாய அதிகாரிகள் கிராமங்களில் ஆய்வு செய்து விவசாயிகள் பெயர், குடும்ப பின்னணி, நிலம், பட்டா எண் விபரங்களை சேகரித்து வருகின்றனர். ஆய்வில், ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு அதிகாரிகளிடம் உள்ள புள்ளிவிபரமும், ஆய்வில் சேகரிக்கப்பட்ட புள்ளிவிபரமும் மாறுபட்டிருந்தன.விசாரணையில், கடந்த 10 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் 8.5 லட்சம் விவசாயிகள் விவசாயத்தை விட்டு, வேறு தொழில்களுக்கு மாறியிருப்பது தெரியவந்தது. மேலும், போதிய மழை இல்லாதது, விவசாய நிலங்களை "பிளாட்'களாக்கி விற்பது இதற்கு காரணமாக கண்டறியப்பட்டு உள்ளது. தவிர, கடந்த இரண்டு ஆண்டுகளாக, தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுவதால் சாகுபடி பரப்பும் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் உணவு உற்பத்தி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. dinamalar.com  பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத்திட்டம் என்பது போல விவசாயிகள் மறுவாழ்வுத்திட்டமும் சீக்கிரம் போடவேண்டி இருக்கும் போல.

கருத்துகள் இல்லை: