திங்கள், 3 ஜூன், 2013

Television விளம்பர நேரங்களில் புதிய கட்டுப்பாடு! விளம்பர நேரம் குறைகிறது மத்திய அரசு கடிவாளம்

புதுடில்லி:"டிவி' சேனல்களில், நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்க்க முடியாத
வகையில், அடிக்கடி குறுக்கிடும் விளம்பரங்களை பார்த்து, வெறுப்படைத்த நேயர்கள், அக்டோபர் மாதம் முதல் நிம்மதி அடையும் வகையில், அதிரடி மாற்றம் வருகிறது. ஒரு மணி நேரத்திற்கு, 12 நிமிடங்கள் மட்டுமே விளம்பரங் களை இடம் பெறச் செய்ய வேண்டும், என்பது கட்டாயமாக்கப்பட உள்ளது.கோரிக்கை : "டிவி' மற்றும் ரேடியோவில், நிகழ்ச்சிகளுக்கு இடையே வரும், வர்த்தக விளம்பரங்கள், நிகழ்ச்சி தொடர்பான முன்னோட்ட விளம்பரங்கள் நேயர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. இதையடுத்து, விளம்பரங்களை கட்டுப்படுத்த வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தன.இது தொடர்பாக, நடவடிக்கை எடுப்பது பற்றி, மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான, "டிராய்' ஆலோசித்து வந்தது. தற்போது, "டிவி' சேனல்களில், ஒரு மணி நேரத்திற்கு, 20 முதல் 25 நிமிடங்களுக்கு விளம்பரங்களும், இது தவிர்த்து, நிகழ்ச்சி தொடர்பான முன்னோட்ட விளம்பரங்களும், அதிகம் இடம் பெறுகின்றன.

விளம்பர நேரத்தை படிப்படியாக குறைக்கும் வகையில், சேனல்களின் உரிமையாளர்கள் மற்றும் தனியார் பண்பலை ரேடியோ உரிமையாளர்களுடன், டிராய் பேச்சுவார்த்தை நடத்தியது.

இதன்படி, ஒரு மணி நேரத்திற்கு, 12 நிமிடம் மட்டுமே விளம்பரங்கள் இடம் பெற வேண்டும் என, டிராய் திட்டவட்டமாக கூறியுள்ளது. இதை, அக்டோபர் மாதம் முதல் அமல்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. முதலில் ரேடியோவில், விளம்பர குறைப்பை படிப்படியாக அமலுக்கு கொண்டு வர, ஒலிபரப்பாளர்கள் அமைப்பில் உள்ளவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.இருப்பினும், "டிவி' சேனல் களில் இதை அமல்படுத்துவதில், பலதரப்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. விளம்பர நேரத்தை குறைத் தால், விளம்பர கட்டணங்கள் அதிகரிக்கும் என, கூறப்படுகிறது.

மாற்று வழி:"டிவி'க்களில், அதிகம் விளம்பரங்களை வழங்குவதில் முன்னணியில் இருக்கும், "ஹேவல்ஸ் இந்தியா' நிறுவனத்தின் துணை தலைவர் விஜய் நாராயணன் கூறுகையில்,""டிராய் கட்டுப்பாட்டல், "டிவி' விளம்பரங்களுக்கான கட்டணம், 30 சதவீதம் அதிகரிக்கும். இதனால், மாற்று வழியை பற்றி யோசிக்க வேண்டியிருக்கும். மேலும், விளம்பரதாரர்கள் சரியான சேனல்களை தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும்,'' என்றார்.

விளம்பர கட்டுப்பாடு அமலுக்கு வந்தால், தற்போது, புற்றீசல் போல் சேனல்கள் வருவது கட்டுப்படுத்தப்படும் என்ற கருத்து நிலவுகிறது. இவ்வாறு கட்டுப்பாடு கொண்டு வந்தால், முன்னணியில் உள்ள சேனல்களுக்கு பாதிப்பு இல்லை. இரண்டாம், மூன்றாம் நிலையில் உள்ள சேனல்கள் தான் சிக்கலை சந்திக்கும் என்றும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: