சனி, 8 ஜூன், 2013

மாணவிகளை CCTV கமெரா மூலம் ரசித்த தாளாளர் குண்டர் சட்டத்தில் உள்ளே

திருத்தணி: திருவள்ளூர் டிடி மருத்துவக் கல்லூரி தாளாளர் தீனதயாளன் நாயுடு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் குன்னவலத்தில் உள்ள டி.டி மருத்துவக் கல்லூரியின் தலைவர் தீனதயாளன் நாயுடு அனுமதியின்றி மருத்துவக்கல்லூரி தொடங்கி மாணவர்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் பணம் வசூல் செய்தார் என்பது தீனதயாளன் மீதான புகாராகும். இதனையடுத்து கடந்த மே மாதம் 28ம் தேதி தீனதயாளனை கைது செய்த போலீசார் அவரை வேலூர் சிறையில் அடைத்தனர். இந்திய மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் பெறாமல் மூன்று ஆண்டுகள் அட்மிசன் நடத்தி மாணவர்களை மோசடி செய்துள்ளார். அதேபோல் கல்லூரிக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்கியது, கட்டுமானப் பொருட்கள் சப்ளை செய்தவர்கள் என பலருக்கும் பணம் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளதாக காவல்நிலையத்தில் 30க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாணவிகள் புகார் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள டி.டி நாயுடு மீது அவரது மருத்துவக் கல்லூரி மாணவிகள் 38 பேர் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி ரூபேஸ்குமார் மீனாவிடம் புகார் அளித்துள்ளனர். கல்லூரிக்குச் சொந்தமான மாணவிகள் விடுதியில் சிசிடிவி கேமரா பொருத்தி அவற்றை தனது அறையில் பார்த்து ரசித்துள்ளார். பாத்ரூம் அருகில் பொருத்தப்பட்ட கேமராவில் இருந்து பல படங்களை ஜூம் செய்து பார்ப்பதுதான் டி டி நாயுடுவின் வேலையே என்கின்றனர் மாணவிகள். விடுதியில் சுதந்திரமாக நடமாட முடியாது என்று கூறும் மாணவிகள் தங்களை அசிங்கமாக டி.டி நாயுடு திட்டுவார் என்று புகார் தெரிவித்தனர். டி.டி.நாயுடு மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் வீரராகவாவுக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் வீரராகவாவ், டி.டி.நாயுடுவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, டி.டி.நாயுடுவை காவல்துறையினர் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கைது செய்தனர். டி.டி மருத்துவக் கல்லூரி மீது இத்தனை புகார்கள் எழுந்து மெடிக்கல் கவுன்சிலில் இருந்து இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: