புதன், 5 ஜூன், 2013

ஐ.ஐ.டி.,யில் சேர நுழைவு தேர்வு: தமிழக மாணவர்களிடையே ஆர்வமின்மை ஏன்?

பாடப்பளு, போதிய பயிற்சி மையங்கள் இல்லாத நிலை உள்ளிட்ட காரணங்களால், ஜெ.இ.இ., எனப்படும் ஒரே நுழைவு தேர்வில், தமிழக மாணவர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டுவதில்லை என, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.நாடு முழுவதும், 16 ஐ.ஐ.டி.,யில், 9,647 இடங்களும், 36 என்.ஐ.டி., யில், 20 ஆயிரம் இடங்களும் உள்ளன. இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு, இந்தாண்டு ஒரே நுழைவு தேர்வு(ஜெ.இ.இ.,) முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நுழைவு தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் மட்டுமே, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி.,யில் சேர முடியும். வடமாநிலங்கள் முன்னணி:

நாடு முழுவதும், ஏப்ரல் மாதம் நடந்த, ஜெ.இ.இ., முதன்மை தேர்வில், 12 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். வட மாநிலங்களில், ஏழு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதிய நிலையில், தென் மாநிலங்களில், ஐந்து லட்சத்திற்கும் குறைவான மாணவர்களே தேர்வு எழுதினர். தமிழகத்தில், 30 ஆயிரத்திற்குட்பட்டோர் தேர்வில் பங்கேற்றனர்.தமிழகத்தை பொறுத்தவரை, இத்தேர்வுக்காக தயார்படுத்தி கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை சொற்ப அளவிலேயே உள்ளது. போதிய பயிற்சி மையங்கள் இன்மையால், இத்தேர்வுக்கு மாணவர்கள் தயாராவதில் சிக்கல் நீடிக்கிறது.வட மாநிலங்களில் பயிற்சி மையங்களின் எண்ணிக்கை அதிகம். தென் மாநிலங்களில் பயிற்சி மையங்கள் குறைவு. தமிழகத்தில், 50 பயிற்சி மையங்கள் மட்டுமே உள்ளன.மாணவர்களிடையே போதிய விழிப்புணர்வு இன்மை, நல்ல கல்வி நிறுவனத்தில் சேர வேண்டும் என்ற எண்ணம் குறைவு உள்ளிட்ட காரணங்களால், ஜெ.இ.இ., நுழைவு தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை, சொற்ப அளவில் உள்ளதாக, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.ஒரு முறை தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்தால், மறுமுறை தேர்வு எழுத முன்வருவதில்லை.


விழிப்புணர்வு இன்மை:

இதுகுறித்து, "டைம்' பயிற்சி மைய துணை மேலாளர் ராதா கிருஷ்ணன் கூறியதாவது: பொறியியல் படிப்பில் சேர மாணவர்களுக்கு தற்போது எளிதில் இடம் கிடைத்து விடுகிறது. ஆனால், நுழைவு தேர்வு எழுதி, நல்ல கல்லூரி சேர வேண்டும் என எண்ணுவதில்லை. கடந்தாண்டு பொறியியல் படிப்பை முடித்த, 1.80 லட்சம் மாணவர்களில், 40 ஆயிரத்திற்குட்பட்டோர் மட்டுமே வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். தரமான கல்வி நிறுவனத்தில் படிக்காத காரணத்தால், மாணவர்களுக்கு, அவர்கள் துறை ரீதியான சிறந்த வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகி விடுகிறது. பொது நுழைவு தேர்வு அறிவிக்கும் பட்சத்தில், ஐ.ஐ.டி., - என்.ஐ.டி.,க்களில் படிக்கும் ஆர்வம் மாணவர்களுக்கு மத்தியில் அதிகரிக்கும்.இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.

- நமது நிருபர் -dinamalar.com

கருத்துகள் இல்லை: