புதன், 5 ஜூன், 2013

அவசர சட்டமாக உணவு பாதுகாப்பு மசோதா அமலாகிறது?

ஜனநாயக நெறிமுறைகளை காற்றில் பறக்க விட்டு விட்டு, தங்களின்
விருப்பத்திற்கு ஏற்ப, "உணவுப் பாதுகாப்பு மசோதா'வை, அவசர சட்டமாக நிறைவேற்ற, காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. இதன்மூலம் நினைத்ததை சாதிக்க அக்கட்சி மும்முரமாக களமிறங்கியுள்ளது.வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்பவர்களுக்கு, குறைந்த விலையில், உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதி செய்யும், உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற, பல மாதங்களாக, காங்கிரஸ் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. ஆனாலும், மற்ற அரசியல் கட்சிகள், போதிய ஒத்துழைப்பு தராததால், மசோதா நிறைவேறுவது தள்ளிப்போனது.
எதிர்க்கட்சிகளால் முடங்கியது:

காங்., தலைவர் சோனியாவின் கனவுத் திட்டமான, இந்த மசோதாவை நிறைவேற்ற, கடந்த இரண்டு, பார்லிமென்ட் கூட்டத் தொடர்களின் போதும், மத்திய அரசு கடும் பிரயத்தனம் எடுத்தது. ஆனால், ஊழல் உட்பட, பல பிரச்னைகளை எழுப்பி, எதிர்க்கட்சிகள் பார்லிமென்டை முடக்கியதால், மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. தமிழகத்தை ஆளும், அ.தி.மு.க.,வும், எதிர்க்கட்சியான, தி.மு.க.,வும், இந்த மசோதாவை எதிர்க்கின்றன. அதேநேரத்தில், மத்திய அரசை வெளியிலிருந்து ஆதரிக்கும் முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சியும், "விவசாயிகளுக்கு எதிரான மசோதா இது' எனக்கூறி, ஆதரவு தர மறுக்கிறது. அதேபோல, வேறு சில கட்சிகளும், இம்மசோதாவை எதிர்க்கின்றன.பிரதான எதிர்க்கட்சியான, பா.ஜ.,வோ, "சில திருத்தங்களை செய்து, மசோதாவை நிறைவேற்றலாம்' எனக்கூறி வருகிறது.


பிடிவாதத்தை கைவிடாத காங்.,:

எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், அதைப் பற்றி கவலைப்படாமல், காங்கிரஸ், இந்த மசோதா விஷயத்தில் பிடிவாதமாக உள்ளது. காங்கிரஸ் உயர்மட்டக் குழு, சமீபத்தில் கூடி, மசோதா பற்றி விவாதித்தது. அத்துடன், காங்., தலைமையிலான, ஐ.மு.கூட்டணி தலைவர்கள் கூட்டத்திலும் இதுபற்றி ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனைகளின் போது, பார்லிமென்ட் சிறப்புக் கூட்டத் தொடரை கூட்டி, மசோதாவை நிறைவேற்றலாமா அல்லது அவசர சட்டமாக அமல்படுத்தலாமா என்பது உட்பட, பல விதமான வாய்ப்புகள் பற்றி விவாதிக்கப்பட்டன.இந்நிலையில், உணவு பாதுகாப்பு மசோதாவை, அவசர சட்டம் மூலம் நிறைவேற்ற, காங்., தலைமையிலான, மத்திய அரசு தயாராகி விட்டதாக, டில்லியில், தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இதுதொடர்பாக, அந்த வட்டாரங்கள் கூறியதாவது:உணவு பாதுகாப்பு மசோதா பற்றி விவாதிக்க, சமீபத்தில், ஐ.மு.கூட்டணி தலைவர்களின் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், "உணவு பாதுகாப்பு மசோதாவை, அவசர சட்டமாக நிறைவேற்றக் கூடாது. போதுமான விவாதம் நடத்தி, பார்லிமென்டில்தான் நிறைவேற்ற வேண்டும். இதுவே என் கருத்து. அதற்கு மேல், நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ செய்து கொள்ளுங்கள்' என, கூறி விட்டார்.சரத்பவார் பெரிய அளவில் எதிர்ப்பை தெரிவிக்காதது, காங்கிரசுக்கு தெம்பைக் கொடுத்துள்ளது. அதனால், மசோதாவை அவசர சட்டம் மூலம் நிறைவேற்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.


அமைச்சகம் ஒப்புதல்:

அதேநேரத்தில், சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட உணவு பாதுகாப்பு மசோதாவை, அந்த அமைச்சகம் பரிசீலித்து ஒப்புதல் கொடுத்து விட்டது. நேற்று காலை, மசோதாவை, மத்திய அமைச்சரவை செயலருக்கும் அனுப்பி விட்டது.இந்த வேகங்களை பார்க்கும்போது, உணவு பாதுகாப்பு மசோதா, அவசர சட்டம் மூலம் அமல்படுத்தப்படுவது நிச்சயம் என்பது தெளிவாகிறது.இந்த மசோதா பற்றி விவாதிக்க, அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினாலும், அதில், நிச்சயம் ஒப்புதல் கிடைக்காது. அதே போல், பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தை கூட்டினாலும், எதிர்பார்த்த பலன் கிடைக்காது என, காங்., நம்புகிறது. அதனால், அவசர சட்டம் ஒன்றை, சிறந்த வழி என, நினைக்கிறது.


மத்திய அமைச்சரவை கூட்டம்:

மத்திய அமைச்சரவை கூட்டம், நேற்று இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கான அலுவல் ஆய்வு குறிப்பேட்டில், கடைசி நிமிடம் வரை, உணவு பாதுகாப்பு மசோதா பற்றிய விவரம் இடம் பெறவில்லை. அடுத்ததாக, வெள்ளியன்று நடைபெறும், மத்திய அமைச்சரவை கூட்டத்தில், உணவு பாதுகாப்பு மசோதாவை, அவசர சட்டமாக நிறைவேற்ற, ஒப்புதல் தரப்படலாம்.இந்த மசோதாவை நிறைவேற்றி விட்டால், 2014 தேர்தல் பிரசாரத்தின் போது, அதை முன்னிலைப்படுத்தி பிரசாரம் செய்து, ஓட்டுக்களை அள்ளி விடலாம் என்பதே காங்கிரஸ் தலைவர்களின் கணிப்பு.இவ்வாறு, தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- நமது டில்லி நிருபர் -dinamalar.com

கருத்துகள் இல்லை: