வியாழன், 15 நவம்பர், 2012

வீதியில் சென்ற காரில் இருந்த தளபதியை குறிவைத்து விமான ஏவுகணை வந்து தாக்கியது!

Viruvirupu
விமான ஏவுகணை தாக்குதல் ஒன்றில், ஹமாஸ் ராணுவத் தளபதி ஒருவரை கொலை செய்துள்ளது இஸ்ரேலிய விமானப்படை. காசா பகுதியில் நடைபெற்ற இந்தக் கொலை, இரு தரப்பையும் யுத்தம் ஒன்றுக்கு மிக அருகே கொண்டு வந்திருக்கிறது.
ஹாஸ் அமைப்பின் ராணுவப் பிரிவின் தளபதி அஹ்மத் அல்-ஜாபரி, இஸ்ரேவிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். இவரும் மற்றொருவரும் பயணம் செய்த காரை துல்லியமாக குறிவைத்து ஏவுகணை ஏவியது இஸ்ரேலிய விமானம். காரும், அதில் இருந்த இருவரும் சுக்குநூறாக சிதறிப் போயினர்.

இஸ்ரேல் கடந்த 4 ஆண்டுகளில் காசா பகுதியில் அடித்து வீழ்த்தியுள்ள அதி சீனியர் ஹமாஸ் தளபதி இவர்தான். ஒருவகையில் பார்த்தால், இஸ்ரேலின் ‘ஹிட் லிஸ்ட்டில்’ உள்ள முதல் 10 நபர்களில் இவரும் ஒருவர். கடந்த 2006-ம் ஆண்டு இஸ்ரேலிய ராணுவ வீரர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவத்தில், பிரதான திட்டமிடல் புள்ளியாக இருந்தவரும், தற்போது கொல்லப்பட்டுள்ள அஹ்மத் அல்-ஜாபரிதான்.
தளபதி அஹ்மத் அல்-ஜாபரியின் நடமாட்டங்களை இஸ்ரேலிய உளவுத்துறை ஷின்-பெத் மிக நெருக்கமான பின்தொடர்ந்திருக்கிறது என்பது இந்த தாக்குதலில் இருந்து புரிகிறது. காசா பகுதியில் உள்ள ‘சேஃப் ஹவுஸ்’ ஒன்றில் இருந்து காரில் பயணம் செய்த அவரது நடமாட்டங்கள், ஷின்-பெத்துக்கு துல்லியமாக தெரிந்துள்ளது.
கார் வீதியில் சென்று கொண்டிருந்தபோது, இஸ்ரேலிய விமானத்தில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை ஒன்று காரை தாக்கி வெடிக்க வைத்தது. அந்த வீதியில் பயணம் செய்துகொண்டிருந்த மற்றையவர்கள் ஓடிவந்து, காரின் தீயை அணைத்து, உள்ளே இறந்துகிடந்த இருவரையும் வெளியே இழுத்துப் போட்டபோதுதான், அந்தக் காரில் ஹமாஸின் முக்கிய தளபதி பயணித்தது, அங்குள்ளவர்களுக்கே தெரிய வந்தது.
இஸ்ரேல் இந்த தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளது. “ஹமாஸ் ராணுவ தலைமையை முற்றாக அழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதி இது” என்கிறது இஸ்ரேலிய உளவுத்துறை ஷின்-பெத் வெளியிட்டுள்ள அறிக்கை.
இந்த தாக்குதலின் எதிரொலியாக, “எமது தளபதிமீது தாக்குதல் நடத்தியவர்கள் ‘வாழ்நாளில் மறக்க முடியாத அளவில்’ பாடம் புகட்டுவோம்” என ஹமாஸ் வானொலி அறிவித்தது. இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பு, “காசா பகுதியில் யுத்த பிரகடனம் செய்துள்ளது இஸ்ரேல். இனி நடக்கப்போகும் பதிலடிகளுக்கு அவர்களே பொறுப்பு” என அறிவித்துள்ளது.
நாம் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல, இந்தக் கொலை, இரு தரப்பையும் யுத்தம் ஒன்றுக்கு மிக அருகே கொண்டு வந்திருக்கிறது.

கருத்துகள் இல்லை: