வெள்ளி, 16 நவம்பர், 2012

4.8 டி.எம்.சி. காவிரி நீர் திறந்துவிட டில்லி உத்தரவு! பழைய பாக்கி 52.5 டி.எம்.சி எங்கே?

Viruvirupu
தமிழகத்துக்கு நவம்பர் 16-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை 8 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை சுருக்கி, 4.8 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும் என காவிரி கண்காணிப்புக்குழு, கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்திற்கு நவம்பர் 16-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை கர்நாடகம் திறந்து விட வேண்டிய நீரின் அளவு குறித்து முடிவெடுப்பதற்காக காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டம் டில்லி ஷ்ரம் சக்தி பவனில் நடந்தது.
கூட்டத்திற்கு காவிரி கண்காணிப்பு குழு தலைவரும் மத்திய நீர்வளத் துறை செயலருமான டி.வி. சிங் தலைமை தாங்கினார். தமிழகம் சார்பில் தலைமைச் செயலர் தேவேந்திரநாத் சாரங்கியும், கர்நாடகம் சார்பில் தலைமைச் செயலர் எஸ்.வி. ரங்கநாத்தும் பங்கேற்றனர்.
தமிழகத்திற்கு 8 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என தமிழகத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், கர்நாடகா அரசு முன்வைத்த வாதத்தில், அங்கு தென்மேற்கு பருவமழை 40 சதவீதம் பொய்த்து, 60 சதவீத அளவுக்கே மழை பெய்துள்ளதாக தெரிவித்தது. இந்த வாதம் கண்காணிப்பு குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, வறட்சி காலத்தில் நீர் பங்கீடு செய்யும் முறைப்படி 8 டி.எம்.சி. தண்ணீரில் 60 சதவீதமான 4.8 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என காவிரி கண்காணிப்புக்குழு கூட்டத்தில் உத்தரவிடப்பட்டது.
அதே நேரத்தில், ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை திறக்க வேண்டிய 52.5 டி.எம்.சி. நீர் இன்னமும் வழங்கப்படாமல் இழுபறி நிலையில் உள்ளதை தமிழகம் சுட்டிக்காட்டிய போதிலும், அதற்கு கர்நாடகா அரசோ, டி.வி.சிங்கோ பதில் ஏதும் அளிக்கவில்லை.

கருத்துகள் இல்லை: