புதன், 5 செப்டம்பர், 2012

பெரும் மின் தட்டுப்பாடுக்கு தயாராகுங்கள்! காற்றாலைகள் நிற்கப் போகுது.

சென்னை:  இந்த மாத இறுதியில் காற்றாலைகள் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தின் அளவு பெருமளவு குறையவுள்ளது. இதையடுத்து மாநிலம் பெரும் மின் தடையை சந்திக்கவுள்ளது.
தமிழகத்தில் நிலக்கரியால் இயங்கும் அனல் மின் நிலையங்கள், நீரால் இயங்கும் புனல் நிலையங்கள், டீசல் மின்சார உற்பத்தி நிலையங்கள் மற்றும் காற்றாலைகள் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்துக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 12,000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது.
ஆனால், தமிழக மின் உற்பத்தி நிலையங்களிலும் மின்சார உற்பத்தி குறைந்ததாலும் மத்திய அரசின் மின்தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்தின் அளவு குறைந்ததாலும் மாநிலத்தில் கடும் மின்தடை நிலவுகிறது.

காற்றாலைகளி் மூலம் அதிக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருவதால் நேற்று மின்தடை நேரம் ஓரளவு குறைக்கப்பட்டது.
அணைக்கட்டுகள் மற்றும் நீர்நிலைகள் மூலம் கடந்த ஆண்டு ஜுன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவ மழை பெய்த காலகட்டத்தில் 214 கோடி யூனிட் புனல் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
ஆனால் தற்போது நடப்பாண்டு தென்மேற்கு பருவ மழை பொய்த்து போனதால் ஜுன் முதல் செப்டம்பர் வரை 85 கோடி யூனிட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதனால் 60 சதவீத மின்சாரம் உற்பத்தி குறைந்துவிட்டது.
அதே நேரத்தில் காற்றாலைகள் மூலம் கடந்த ஆண்டு மே மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை 500 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் நடப்பாண்டு மே மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை 750 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
பருவ மழை பொய்த்ததால் நீர்நிலைகள் மூலம் உற்பத்தி செய்யாத மின்சாரத்தை, காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்ததால் நிலமை ஓரளவு சமாளிக்கப்பட்டது.
இந் நிலையில் செப்டம்பர் இறுதியில் காற்றின் அளவு குறைவது வழக்கம். இதனால் காற்றாலைகளிலும் மின்சார உற்பத்தி குறைந்து விடும். பிறகு அக்டோபர் மாத மத்தியில் தான் வடகிழக்கு பருவ மழை தொடங்கும். அப்போது காற்றும் அதிகரித்து மின்சார உற்பத்தி அதிகரிக்கும்.
இதனால் செப்டம்பர் கடைசி வாரத்திலிருந்து அக்டோபர் இரண்டு வாரம் வரை, காற்றாலை மின்சார உற்பத்தி பெருமளவு குறையும்.
ஏற்கனவே, அனல் மின் நிலையங்களில் உற்பத்தி குறைந்துள்ள நிலையில் காற்றாலைகளும் 3 வாரத்துக்கு முடங்கினால், தமிழகத்தில் பெரும் மின்சார தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இதனால் நிலமையை சமாளிக்க மத்திய தொகுப்பிலிருந்து வழங்கப்படும் மின்சாரத்தின் அளவை அதிகரிக்குமாறு மத்திய அரசை கோர தமிழகம் முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு தந்துட்டாலும்...!

கருத்துகள் இல்லை: