புதன், 2 மே, 2012

ஒபாமாவை படுகொலை செய்ய உத்தரவிட்டார் பின்லேடன்'

வாஷிங்டன்: பாகிஸ்தானில் பதுங்கியிருந்தபோது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவைப் படுகொலை செய்ய உத்தரவிட்டிருந்தார் பின்லேடன் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் என்பிசி நிறுவனம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த செய்தியில் கூறுகையில், அபோத்தாபாத் வீட்டில் பின்லேடன் பதுங்கியிருந்தபோதும் தனது தீவிரவாத செயலில் தீவிரமாகவே இருந்துள்ளார். தொடர்ந்து தனது கூட்டாளிகளுக்கு அவர் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்து வந்துள்ளார். குறிப்பாக அதிபர் ஒபாமா, ராணுவத் தளபதி டேவிட் பெட்ரிஷியஸ் ஆகியோரைப் படுகொலை செய்யவும் அவர் உத்தரவிட்டிருந்தார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மூத்த அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் இத்தகவலைத் தெரிவித்ததாக அந்த செய்தியின் ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் அவரது வீட்டில் நடத்தப்பட் ரெய்டின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களிலிருந்து இது தெரிய வந்ததாக அந்த ராணுவ அதிகாரி கூறினாராம்.
பின்லேடனைக் கொன்ற பின்னர் அவர் பதுங்கியிருந்த வீட்டிலிருந்து கம்ப்யூட்டர்கள், ஹார்ட் டிஸ்க்குகள் ஆகியவற்றை அமெரிக்க சீல் படையினர் கைப்பற்றிச் சென்றனர் என்பது நினைவிருக்கலாம்.
இருப்பினும் அதிபர் ஒபாமாவைப் படுகொலை செய்வது தொடர்பான திட்டம் எதுவும் அந்த வீட்டில் இல்லை என்றும், எதிர்காலத் தாக்குதல்கள் குறித்த திட்டங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்றும் அந்த செய்தி கூறுகிறது.

கருத்துகள் இல்லை: