சனி, 5 மே, 2012

1 கோடி நிலம்... உண்மையைக் கக்கிய ஐஜி பிரமோத்குமார்!

சென்னை: திருப்பூர் பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் பணம் பறித்த ஐ.ஜி. பிரமோத்குமாரிடம் சி.பி.ஐ. கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகிறது.
பாசி நிதிநிறுவன மோசடி வழக்கை விசாரித்த ஐ.ஜி. பிரமோத்குமார், அதன் உரிமையாளர்களிடமிருந்து கோடிக் கணக்கில் லஞ்சப் பணம் பெற்றார் என்பது சி.பி.ஐ.யின் புகார். இதன் பேரில் டெல்லியில் தலைமறைவாக இருந்த பிரமோத்குமாரை சி.பி.ஐ. கைது செய்து கோவை கொண்டுவந்தது. கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 5 நாள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரணை நடத்தவும் அனுமதிக்கப்பட்டது.

கோவை விருந்தினர் மாளிகையில் பிரமோத்குமாரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையின் போது அடுக்கடுக்கான பல கேள்விகளை சி.பி.ஐ. அதிகாரிகள் அவரிடம் கேட்டனர். பாதிக்கப்பட்டோர் புகார் கொடுக்காத நிலையில் பாசி மீது ஏன் வழக்கு போடப்பட்டது? புகார் கொடுக்க முன்வந்த நிலையில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? பாசி நிறுவன அதிபர்களிடம் வாங்கிய கோடிக்கணக்கான லஞ்சப் பணம் எங்கே? பாசி உரிமையாளர் கமலவள்ளிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மைதானா என பல கேள்விகள் கேட்டும் ஒன்றுக்குமே பதில் சொல்ல மறுத்துவிட்டார் ஐ,ஜி. பிரமோத்குமார். இதனால் உண்மையை கக்க வைக்க சி.பி.ஐ. யுக்தி ஒன்றை கையாண்டது

பாசி வழக்கில் தொடர்புடைய போலீசார் சண்முகையா, மோகன்ராஜ் ஆகியோரை பிரமோத்குமாருடன் உட்கார வைத்து விசாரணை நடத்த ஒவ்வொன்றாக உண்மை வெளியானது. இந்த விசாரணையில் ரூ1 கோடி மதிப்பிலான நிலம் கோவையில் தமக்கு இருப்பதாகவும் பிரமோத்குமார் ஒப்புக் கொண்டார்.

இதனிடையே பிரமோத்குமாரைத் தொடர்ந்து பாசி நிறுவனத்தை மிரட்டி பணம் பறித்த அதிகாரிகள், அரசியல்வாதிகள், ரவுடிகள் பலரும் இப்போது கலக்கத்தில் இருக்கின்றன

கருத்துகள் இல்லை: