திங்கள், 23 மே, 2011

Tata:அம்பானிக்கு எதுக்கு அவ்ளோ பெரிய வீடு? - தாக்கும் டாடா


டெல்லி: இந்தியாவின் இன்றைய தேவை, தன்னிடம் உள்ள செல்வத்தை சமூக நலனுக்காகவும் பயன்படுத்துபவர்களே. இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி பல கோடி மதிப்புள்ள 27 அடுக்கு மாளிகையில் வசிக்கிறார். இது மிகப்பெரிய தவறு. மற்றவர்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டிய இவர், செல்வத்தை இப்படி வீணாக்கலாமா?" என்று கடுமையாக விமர்சித்துள்ளார் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா.

ரிலையன்ஸ் குழும அதிபர் அம்பானி மீது இத்தனை வெளிப்படையான தாக்குதலை அவர் தொடுத்திருப்பது பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.
சமீபத்தில் லண்டனில் 'தி டைம்ஸ்' பத்திரிகைக்கு பேட்டியளித்தார் ரத்தன் டாடா.
அப்போது அவரிடம், முகேஷ் அம்பானியின் மும்பை சொகுசு பங்களா குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த டாடா, "பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட 27 அடுக்கு மாளிகையில் வசிக்க முகேஷ் அம்பானி முடிவு செய்ததை அறிந்தபோது நான் மிகுந்த வருத்தப்பட்டேன்.

முகேஷ் மாதிரி இடத்திலிருப்பவர்கள் தங்களின் பெரும் செல்வத்தில் ஒரு பகுதியை தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தில் கஷ்டப்படும் மனிதர்களுக்காக ஒதுக்க வேண்டும். அதுதான் இன்றைய தேவை. அதை விட்டுவிட்டு 27 அடுக்கு மாடியில் சொகுசாக வசிப்பதில் என்ன இருக்கிறது. இதை அவரிடம் நான் எதிர்பார்க்கவே இல்லை. அவரது ஒரு குடும்பத்துக்கு எதற்கு இத்தனை பெரிய ஆடம்பர மாளிகை", என்றார்.
போர்ப்ஸ் இதழில் உலகில் 9வது பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்து முகேஷுக்கு தரப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமமான டாடா சன்ஸ் தலைவர் ரத்தன் டாடா இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முகேஷ் அம்பானியின் இந்த 27 அடுக்கு சொகுசு மாளிகை தெற்கு மும்பையில் உள்ளது. இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ 10000 கோடி, மாடியில் ஹெலிகாப்டரை நிறுத்தும் வசதியுண்டு இந்த பங்களாவில்.

கருத்துகள் இல்லை: