திங்கள், 23 மே, 2011

போஸ்டர்களால் அழுகுணிப்போர் நடத்தும் அழகிரிக்கு எதிரான கிண்டல் போஸ்டர்

மு.க.அழகிரிக்கு எதிராக தமிழகத்தை ஒரு போஸ்டர் கலக்கிக்கொண்டு இருக்கிறது.மதுரையில் வீடியோ கடை நடத்தியது முதல் மத்திய அமைச்சரானது வரை மு.க.அழகிரிக்கு பிடித்த விஷயம் போஸ்டர்தான்.இதனாலயே இவரது ஆதரவாளர்கள் கட்சியிலும்,அதிகாரத்திலும் இடம் பிடிக்க பெரிதாக எதுவும் செய்ய மாட்டார்கள்.

பெரிதாக என்று சொல்வது கூட சிறிய விஷயம் , பிரம்மாண்டமாக போஸ்டர் அடித்து மதுரை முழுவதும் ஒட்டுவார்கள்,அடித்த போஸ்டரில் 50 சதவீதத்தை அவர் குடியிருக்கும் மதுரை டி.வி.எஸ்.,நகர் பகுதியில் ஒட்டுவார்கள்.அவர் பார்வை படும்படியான சுவரானது, ஊருக்கு போக வழிகாட்டும் பெயர் பலகையாக இருந்தால் கூட அதைப்பற்றி கவலைப்படாமல் ஒட்டுவார்கள்.ஆனால் மறந்தும் கூட அவரது வீட்டு சுவரில் ஓட்டமாட்டார்கள்,காரணம் அண்ணன் கோவிச்சுக்குவார் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் அண்ணன் வீட்டு சுவர் மட்டும் பாழாகிவிடக்கூடாது என்ற கவலை ஒரு பக்கம்.

இப்படி போஸ்டர் ஒட்டுபவர்களை, கருணாநிதி முன்னிலையிலேயே துரைமுருகன் போன்றவர்கள் அரசு விழாவிலேயே, "போஸ்டர் கிங்' என்று பாராட்டி பட்டம் கொடுத்து வேறு மகிழ்வார்கள். இத்தயை பாராட்டிற் கு பிறகு மதுரையில் போஸ்டர் ஒட்டுவதற்கு கேட்கவேண்டுமா என்ன.?அதுவும் சமீபத்தில் நடந்த அவரது இல்ல திருமண விழாவின் போது, மதுரையில் போஸ்டர் இருந்ததா அல்லது போஸ்டருக்குள் மதுரை இருந்ததா என்று வித்தியாசப்படுத்திப்பார்க்க முடியாதபடி காணப்பட்டது.சரி ஏதோ "குழந்தைத்தனம்' மாறாமல் போஸ்டரில் சந்தோஷம் கொள்கிறார், இருந்துவிட்டு போகட்டும் என்ற நிலையில்; இவருக்கு பிடிக்காதவர்கள் யாராவது இருந்தால், அவர்களை அசிங்கப்படுத்தவும் இந்த போஸ்டர் கலாச்சாரத்தை, இவரது ஆதராவாளர்கள் கையில் எடுத்துக்கொண்டதுதான் மகா கொடுமை.இது மாதிரி போஸ்டர்களை இவர் ஒரு போதும் கண்டித்தது இல்லை.மாறாக மறைமுக ஊக்கப்படுத்துகிறார் என்று எண்ணும்படியாக முதல் நாள் நூற்றுக்கணக்கில் ஒட்டப்படும் போஸ்டர்கள் மறுநாள் ஆயிரக்கணக்கில் ஒட்டப்படும்.அடுத்தவரை களங்கப்படுத்தும், கண்ணியக்குறைவை ஏற்படுத்தும், கவலையை உண்டாக்கும் இது போன்ற போஸ்டர்களை மதுரை போலீசாரும் கண்டுகொள்வது இல்லை.

இப்படி போஸ்டர்களால் அழுகுணிப்போர் நடத்திய மத்திய அமைச்சர் அழகிரிக்கு எதிராக ஒரு போஸ்டர் தற்போது தமிழகம் முழுவதும் வலம்வருகிறது.அந்த போஸ்டரை ஒட்டியவர் அழகிரி ஆதராவாளர்கள் போல பொய், புனை பெயரில் ஒளிந்துகொள்ளவில்லை., தனது பெயர்,படம் மட்டும் மொபைல் எண்ணை போட்டு தைரியமாக ஒட்டியுள்ளார்.போஸ்டரில் உள்ள வாசகங்களில் கிண்டலும்,கேலியும் கொப்பளிக்கிறது.

காணவில்லை
2011 ம்ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அ.இ.அ.தி.மு.க.,என்ற கட்சியே காணமால் போய்விடும் என்று கூறிய ,மு.க.அழகிரியை காணவில்லை
விபரம்
பெயர் : மு.க.அழகிரி
அப்பா பெயர் :தட்சிணாமூர்த்தி(எ)கருணாநிதி
பிறந்தது :சென்னை,கோபாலபுரம்
வளர்ந்தது :மதுரை அவணியாபுரம்
வேலைபார்ப்பது :ஆங்கிலம்,இந்தி தெரியாத மத்திய அமைச்சர்


இவரைப் பற்றிய தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்
இவண்எம்.ஜி.ஆர்.வாசன்,பகுதிகழக செயலாளர்,திருவல்லிக்கேணி.9941172464

இப்படிப்பட்ட வாசகங்களுடன் வண்ணத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரை பலரும் நின்று படித்து செல்கின்றனர்,அதிலும் ஆங்கிலம்,இந்தி தெரியாத மத்திய அமைச்சர் வேலை என்ற வார்த்தையை படித்துவிட்டு சிரிக்கின்றனர்.எது,எப்படியோ தலைவலியோ,முதுகுவலியோ தனக்கு வந்தால்தான் தெரியும் என்பார்கள், அது போல மற்றவர்களை போஸ்டர் மூலம் புண்படுத்துவதால் ஏற்படும் வேதனை எப்படி இருக்கும் என்பதை இப்போது அழகிரி நிச்சயம் உணர்ந்து இருப்பார் என்று நம்பலாம்.-ஆனந்தி.

கருத்துகள் இல்லை: