புதன், 8 டிசம்பர், 2010

ரமணா ரெட்டியின் வீட்டுக்குள் பர்தா.'ரத்தசரித்திரம்' Part 2

இதன் பின்பு அனந்தப்பூர் மாவட்டத்தின் நிலைமை தலைகீழானது. மாவட்ட நிர்வாகமே பரிதலா ரவியின் கீழ் மண்டியிட்டுவிட்டது. அண்ணன் கண் அசைவில்லாமல் தொகுதியில் எதுவும் நடக்காது என்ற நிலைமையானது. இந்தச் சமயத்தில்தான் பரிதலா ரவியின் துப்பாக்கிச் சத்தம் இன்னும் அதிகமாகக் கேட்கத் துவங்கியது என்கிறது மீடியா.

சூர்ய நாராயண ரெட்டியின் ஆதரவாளர்களும், ரமணா ரெட்டி மற்றும் ஓபுல் ரெட்டியின் அல்லக்கைகளும் தேடித் தேடிக் கொல்லப்பட்டனர். பலரும் கர்நாடகாவுக்குத் தப்பியோடினார்கள். உள்ளூரில் தனக்கு எதிரிகளே இருக்கக் கூடாது என்ற பரிதலா ரவியின் உத்தரவை அவருடைய அடிப்பொடிகள் சிரமமேற்கொண்டு செய்து வந்த தருணத்தில் எதிர்பாராத ஒரு சிக்கல் முளைத்தது. இது அவரது சொந்தக் கட்சியிலேயே..

பொதுவாகவே ஆந்திர அரசியலை நிர்மாணிப்பது ரெட்டிகளும், நாயுடுக்களும்தான். பண முதலைகளான இவர்கள்தான் ஆந்திராவின் ஆட்சியையே தீர்மானிக்கும் அளவுக்கு செல்வாக்கு படைத்தவர்கள். இப்படியொரு ரெட்டியாக அனந்தப்பூர் மாவட்டத்தின் கடைக்கோடியில் திகழ்ந்து வந்த ஜே.சி.பிரபாகர் ரெட்டி என்பவர் தெலுங்கு தேசக் கட்சியில் இணைய முன் வந்தார். (இப்போது இந்த பிரபாகர் ரெட்டிதான் காங்கிரஸ் அரசில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக இருக்கிறார்)

ஆனால் இவரது வருகையை பரிதலா ரவி விரும்பவில்லை. இவரைக் கட்சியில் சேர்க்கக் கூடாது என்று எதிர்த்தார். இந்த எதிர்ப்பை அவர் என்.டி.ராமாராவிடமும் தெரிவித்திருக்கிறார். ஆனால் அப்போது ராமாராவ் அவரது புதிய மனைவி லட்சுமி சிவபார்வதியின் கட்டுப்பாட்டில் இருந்ததால் எதுவும் சொல்ல முடியாத நிலைமை. ஹைதராபாத்தில் என்.டி.ஆரை பார்த்து காலில் விழுந்து கட்சியில் சேர்ந்தார் பிரபாகர் ரெட்டி.

இதனைக் கேள்விப்பட்ட உடனேயே தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் ரவி. ஆனால் அப்போதும் அனந்தப்பூர் மாவட்டம் அவரது முழு கட்டுப்பாட்டில்தான் இருந்திருக்கிறது. இதன் பின்பான சமரசப் பேச்சில் ரவியின் மீதான பாசத்தில் கட்டுப்பட்ட ராமாராவ், மீண்டும் ரவியை அழைத்து பேசி, சமாதானம் செய்து அவரையே எம்.எல்.ஏ. தேர்தலில் நிற்க வைத்து மீண்டும் எம்.எல்.ஏ.வாக்கிவிட்டார்.
இந்த நேரத்தில்தான் சந்திரபாபு நாயுடு, லட்சுமி சிவபார்வதிக்கு எதிராக உட்கட்சிக் கலகம் செய்து முக்கால்வாசி எம்.எல்.ஏ.க்களைக் கடத்திக் கொண்டு போய் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டார். இந்த நேரத்தில் தனக்கு அரசியல் அறிமுகம் கொடுத்த ராமாராவுக்கு தனது முழு ஆதரவையும் நீட்டினார் ரவி.

தனது அனந்தப்பூர் மாவட்டத்தின் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கிருஷ்ணன் பக்கம்தான் என்று பகிரங்கமாக அறிவித்து என்.டி.ஆருக்கு தனது நன்றிக் கடனைத் தெரிவித்துக் கொண்டார். ஆனால் எதிர்பாராதவிதமாக என்.டி.ஆர். திடீரென்று மரணமடைந்துவிட.. கட்சியின் கடிவாளம் லட்சுமி சிவபார்வதியின் கைகளுக்குச் சென்றது..

ஏற்கெனவே சிவபார்வதியுடன் சண்டையில் இருந்த ரவி அனந்தப்பூர் மாவட்டத்தில் மட்டும் கட்சியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு மாநிலத் தலைமைக்கு சவால் விட்டபடியே இருந்திருக்கிறார். அவருடைய அதிருப்தி சிவபார்வதியைவிடவும் சந்திரபாபு நாயுடுவுக்கு நன்கு தெரிய வர.. அன்போடு அழைப்பு வந்தது ரவிக்கு..

“அனந்தப்பூர் மாவட்டத்தில் வேறு எந்த நபரும் உங்களுக்கெதிராக கொம்பு சீவி விடப்பட மாட்டார்கள்..” என்று சந்திரபாபு நாயுடு உறுதிமொழியளிக்க அணி மாறினார் பரிதலா ரவி.

1996-ல் நடந்த ஆந்திர தேர்தலில் அதே பெனுகுண்டா தொகுதியில் மீண்டும் தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு அதே ரமணா ரெட்டியைத் தோற்கடித்தார் பரிதலா ரவி. இதன் பின்பு அடுத்தச் சுற்று பழி வாங்குதல் பணி துவங்கியது..

ரவியின் கூலிப்படை டீம் இப்போது உயிரோடியிருக்கும் தலைவர்களைக் குறி வைத்தது. முதல் பலி ஓபுல் ரெட்டி. 1996-ம் ஆண்டு ஒரு நாள். ஓபுல் ரெட்டி தனது ஆதரவாளர்களுடன் ஹைதராபாத்திற்கு வந்தவர் ஹோட்டலுக்கு விலைமாதுவை வரவழைத்து குஷியாக இருந்துள்ளார். இவரது வருகையை மோப்பம் பிடித்த ரவியின் டீம் பக்கா பிளானோடு ஹோட்டலுக்குள் நுழைந்துள்ளது.

ஓபுல் ரெட்டி 'வேலை'யை முடித்துவிட்டு ஹாயாக குளியல் போட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அறைக்குள் நுழைந்த டீம், விலைமாதுவை வெளியேற்றிவிட்டு ஓபுல் ரெட்டிக்காக காத்திருக்கிறது. வெளியில் வந்த ஓபுல் ரெட்டியின் தொண்டையை அறுத்ததுடன் இல்லாமல் அவரது ஆணுறுப்பையும், விதைப்பையையும் அறுத்து காக்காய்க்கு வீசிவிட்டு பறந்தோடி விட்டது. இந்தக் கொலையை நக்ஸல் இயக்கம்தான் செய்தது என்றாலும் முதல் குற்றவாளியாக பரிதலா ரவிதான் சேர்க்கப்பட்டார்.

இவரது கொலையில் இரண்டுவிதமான செய்திகள் கிடைத்துள்ளன. இவரது வீட்டில்தான் இந்தக் கொலை நடந்ததாகவும் சொல்கிறார்கள். உண்மை எது என்று தெரியவில்லை.

இப்போது சூரியின் டர்ன்.. தனது ஆதரவாளர்களையும், தனக்கு நெருக்கமான உறவுக்காரருமாக இருந்த ஓபுல் ரெட்டியின் மரணத்திற்கு அடுத்து ரவி தன்னைத்தான் குறி வைத்திருக்கிறார் என்பது உணர்ந்து ரவிக்கு முன்பாக தான் முந்திக் கொள்ள நினைத்திருக்கிறார். ஆனால் அதனைச் செயல்படுத்தியவிதம் இந்த இரண்டு குடும்பங்களின் வம்ச சண்டையை அகில இந்தியாவுக்கும் எடுத்துச் சென்றது..

19.11.1997 அன்று காலை 11.50 மணி. ஹைதராபாத் ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் இருக்கும் ராமாநாயுடுவின் சினி ஸ்டூடியோவில் இருந்து வெளியில் வந்து கொண்டிருந்தன கார்களின் அணிவகுப்பு. அதில் நடுநாயகமாக வந்த காரில் நடிகர் மோகன்பாபுவுடன், பரிதலா ரவியும் இருந்தார்.

தான் தயாரித்த தனது தந்தை ராமுலுவின் வாழ்க்கை சரித திரைப்படத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்டுவிட்டு அதில் தனது தந்தையாக நடிக்க ஒப்பந்தமாயிருக்கும் மோகன்பாபுவுடன் பேசியபடியே ஹோட்டலுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார் ரவி.

ரவியின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து ஸ்டூடியோவில் இருந்து 25 அடி தூரத்தில் ஒரு பழைய பியட் கார் நின்று கொண்டிருந்தது.. எமனாக நிறுத்தப்பட்டிருந்த அந்தக் காரில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் அது வெடிக்கப்படும் சூழலில் தயாராய் இருந்தது.

எல்லாம் சரியாக இருந்திருந்தால் பரிதலா ரவியுடன் அன்றைக்கு மோகன்பாபுவும் சேர்ந்தே இறந்து போயிருப்பார். ஆனால் எங்கும், எதிலும் முந்திக் கொள்ளும் மன நிலையை உடைய பத்திரிகையாளர்கள் செய்த ஒரு சின்ன செயலால்தான் அன்றைக்கு ரவி லேசான காயங்களோடு தப்பித்துக் கொண்டார்.

ரவியின் வாகனத்திற்கு பின்னால் வந்து கொண்டிருந்த தெலுங்கு E டிவியின் குழு வந்த வாகனம் திடீரென்று ரவியின் வாகனத்தை முந்திக் கொண்டு முன்னால் சென்றது.. இந்த பத்து செகண்ட்டுகள் வித்தியாசத்தில் ரிமோட் கண்ட்ரோல் அழுத்தப்பட பியட் கார் வெடித்த வெடிப்பில் E டிவியின் கார் சுக்கு நூறானது.. அதில் இருந்த 6 பணியாளர்களும் இறந்து போனார்கள். அப்பாவி மக்களையும் சேர்த்து மொத்தம் 26 பேர் மரணம். 32 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள்
மோகன்பாபுவும், பரிதலா ரவியும் சிறிதளவு காயங்களுடன் தப்பித்தது கடவுள் புண்ணியம்தான்.. ஆந்திராவே பதைபதைத்தது.. இப்போதும் அனந்தப்பூர் மாவட்ட போலீஸ் மட்டும் இது சூரியின் வேலையாகத்தான் இருக்கும் என்று உடனுக்குடன் போலீஸ் தலைமையகத்துக்கு செய்தி அனுப்பியதுடன் சூரியுடன் கடைசியாக அனந்தப்பூரில் தென்பட்ட தர்மாவரம் மாவட்டத்தைச் சேர்ந்த கோட்லரு வாசுதேவ ரெட்டி என்ற 20 வயது வாலிபனைப் பற்றியத் துப்பையும் வழக்கை விசாரிக்க ஆரம்பித்த சிஐடி போலீஸார் வசம் சேர்ப்பித்தனர்.

இங்கேயிருந்து நூல் பிடித்த போலீஸின் தேடுதல் வேட்டையில் எல்லாவிதமான ரெட்டிகளும் சிக்கிக் கொண்டார்கள். போலீஸின் தேடுதல் வேட்டையில் சூரியின் மனைவி பானுமதி போலீஸில் பிடிபட்டார். அவரை வைத்து போனில் மிரட்டியதையடுத்து கர்நாடகாவில் சித்ரதுர்கா என்னுமிடத்தில் பதுங்கியிருந்த சூரி நாராயண ரெட்டி அதே ஆண்டு டிசம்பர் மாதம் 12-ம் தேதி கர்நாடக போலீஸில் சரணடைந்தார்.

இந்த வழக்கில் மொத்தம் 21 பேர் குற்றம்சாட்டப்பட்டு அதில் 14 பேர் மட்டுமே பிடிபட்டார்கள். மீதியிருக்கும் 7 பேர் இன்றுவரையிலும் தேடப்படுவதாகச் சொல்லப்படுகிறது. இதில் சூரிய நாராயண ரெட்டிதான் முதல் குற்றவாளி.

குற்றஞ்சாட்டப்பட்ட 14 பேர்களில் 6 பேரை குற்றவாளிகளாக அறிவித்த நீதிமன்றம், மீதி 8 பேரை விடுவித்தது. ஏ-1 குற்றவாளியான சூரிக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது நீதிமன்றம். இதனை எதிர்த்து சூரி அப்பீல் செய்தபோது, ஆந்திர உயர்நீதிமன்றம் இதனை வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்று மாற்றித் தீர்ப்பளித்து பரபரப்பாக்கியது.

ஆனாலும் இதற்காகவெல்லாம் சூரி தரப்பு பயந்துவிடவில்லை. இதற்குப் பின்னும் படுகொலைகள் தொடர்ந்தன. கோர்ட் குற்றவாளியில்லை என்று விடுவித்தாலும் நாங்கள் விடுவதில்லை என்று துப்பாக்கிகள் ராயலசீமா மாவட்டங்கள் முழுவதும் முழங்கின. இந்த முறையும் நக்ஸல் இயக்கம் ரவியின் முன்னே நின்று கொள்ள கொலைகள் விழத் தொடங்கின.

ஹைதராபாத்தில் கொத்தபள்ளி என்னுமிடத்தில் ஹோட்டலில் தங்கியிருந்த இருவரை நக்ஸல்கள் சுட்டுக் கொன்றனர். பானுகோட்டா கிஷ்டப்பா, குண்டிமாடி ராமுலு, வெங்கடேசலு, கொண்டா ரெட்டி என்ற சூரியின் ஆதரவாளர்களை அடுத்தடுத்துப் போட்டுத் தள்ளியது ரவியின் தரப்பு.. இதில் போயா நாகராஜூ என்பவர் மட்டும் இரண்டு முறை நடத்திய தாக்குதலின்போதும் தப்பித்துக் கொண்டார். ஆயுசு கெட்டி போல..

சிறுசுகளையெல்லாம் போட்டாச்சு என்றாலும் ஒரேயொரு பெரிசு மட்டும் ஊர்ப் பக்கமே வராமல் ஹைதராபாத்திலேயே பலத்த போலீஸ் பாதுகாப்போட உக்காந்திருக்கே.. விடலாமா? அதுலேயும் எலெக்ஷன் வேற நெருங்கிருச்சு. இப்பவே போட்டாத்தான அடுத்த தேர்தல்ல ஈஸியா ஜெயிக்கலாம் என்று யோசித்த ரவி தரப்பு, இப்போது குறி வைத்தது ஓபுல் ரெட்டியின் அண்ணனும், பெனுகுண்டாவின் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ரமணா ரெட்டியை..

1999-ல் ஹைதராபாத்தில் இருந்த ரமணா ரெட்டியின் வீட்டுக்குள் பர்தா அணிந்த இரண்டு பெண்கள் நுழைந்தார்கள். கட்சி விஷயமாக பேசுவதற்காக அவர்தான் வரச் சொன்னார் என்றார்கள். நானா? லேடீஸையா? என்றபடியே சந்தேகத்தோடு எழுந்து வந்த ரமணா ரெட்டியை பார்த்த மாத்திரத்தில் பர்காவை விலக்கி கைகளில் இருந்த துப்பாக்கியால் சராமரியாகச் சுட்டுத் துளைத்ததில் ரவியின் பெரிய எதிரியின் உயிரும் உதிர்ந்து போனது.

1999 தேர்தலும் வந்தது. பரிதலா ரவி மீண்டும் தேர்தலில் போட்டியிட்டார். சிறையில் இருந்தபடியே சூரி நாராயண ரெட்டி தனித்துப் போட்டியிட்டார். உயிர் மேல் இருந்த பயம் காரணமாக காங்கிரஸின் முக்கியத் தலைகள் போட்டியிட முன் வராததால் ஒப்புக்குச் சப்பாணியாக பெல்லாம் சுப்ரமணியம் என்பவரை நிறுத்தி வைத்தது காங்கிரஸ். பரிதலா ரவி  70.82 சதவிகித வாக்குகளைப் பெற்று வெற்றி வாகை சூடினார். சூரிக்கு டெபாஸிட்டே காலியானது.

அனந்தப்பூர் மாவட்டம் கனிம வளம் நிறைந்தது.. சுரங்கங்கள் நிறையவும் உள்ளன. குவாரிகள் துவங்கி காசு பார்க்க ஆரம்பித்த நேரத்தில் பரிதலா ரவியின் சொத்துக்களும் கூடத் துவங்கின. ரவிக்குத் தெரியாமல் எந்த அரசு கான்ட்ராக்டும் மாவட்டத்தில் யாருக்குமே கிடைக்காது. அவர் கண் ஜாடை காட்டினால்தான் மாவட்ட நிர்வாகமே நடக்கும் என்ற நிலைமையில் இதெல்லாம் சகஜம்தானே..

கர்நாடகாவிலும் அனந்தப்பூரை ஒட்டிய மாவட்டங்களிலும், ஊர்களிலும் நக்ஸல்கள் குரூப்பை வைத்து தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தையே நிறுவிக் கொண்டார் ரவி. இந்த நேரத்தில் அவர் சம்பாதித்த சொத்துக்களின் இன்றைய மதிப்பு 300 கோடி இருக்கும் என்கிறார்கள்.

சிறைக்குள் இருந்தாலும் ரவியைப் போட்டுத் தள்ளும் முடிவில் மாற்றமில்லை சூரியிடம். ரவியின் வீட்டின் மீது குண்டு வீசித் தாக்குதல் தொடுக்கும் விதமாக ஒரு நடவடிக்கையையும் அப்போது சூரி செய்திருக்கிறார். இதுவும் காவல்துறையில் வழக்காக பதிவு செய்யப்பட்டது. இதில் இரண்டாவது குற்றவாளி யார் தெரியுமா? ஒய்.எஸ்.ஜெகன்மோகன்ரெட்டி.

ரவியைத்தான் போட முடியவில்லை. அவரது ஆட்களையாவது துப்பரவு செய்து அகற்றுவோம் என்ற நினைப்பில் ரவியின் ஆட்கள் மூவரை வெங்கடபுரம் அருகே வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்கள் சூரியின் ஆட்கள். இப்போதும் தெலுங்கு தேசம் ஆட்சிதான்.

அதேபோல் ரவியும் சூரியை சிறையிலேயே போட்டுத் தள்ளவும் செட்டப் ஆட்களை அனுப்பி வைத்து ஆழம் பார்த்திருக்கிறது. இதை போலீஸும், உளவுத்துறையும், சிறை நிர்வாகமும் கண்டறிந்து சூரியை மிகப் பாதுகாப்பான பகுதியில் வைத்து அடைத்து காப்பாற்றியிருக்கிறார்கள்.

ஒருவேளை சூரியை கோர்ட்டுக்கு கொண்டு வரும்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று நினைத்து மிகப் பெரும் செக்யூரிட்டியோடுதான் சூரியை கோர்ட்டுக்கு கொண்டு வந்து அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: