ஞாயிறு, 5 டிசம்பர், 2010

யுத்ததில் பொதுமக்கள் கொல்லப்படவில்லை பயங்கரவாதிகளையே படையினர் கொன்றனர்`- லண்டன் டைம்ஸ் இதழுக்கு ஜனாதிபதி தெரிவிப்பு

‘இலங்கை  அரச படையினர்   பயங்கரவாதிகளை மாத்திரம் கொலை செய்தார்கள்.   எந்த ஒரு குடிமகனையும் இலங்கை ஒருபோதும் கொலை செய்யவில்லை.
எமது அறிவுறுத்தல் ‘எந்த ஒரு பொதுமகனையும் தாக்கக்கூடாது’.    இது ஒரு மனிதாபிமான நடவடிக்கை’ என்பதாகவே இருந்தது’   என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ    லண்டன் டைம்ஸ்  இதழுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
எதிரெதிர்  தாக்குதலின் போது   ஒன்று அல்லது   இரண்டு   பொதுமக்கள்  தாக்குதலில் சிக்கியிருக்கவும் கூடும் என்பதை  ஏற்றுக்கொண்ட   ஜனாதிபதி இது குறித்து தாம்  கவனம் செலுத்துவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றவென இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரிட்டன் சென்றிருந்த போது புலம் பெயர் தமிழ்க் குழுக்களின் எதிர்ப்பலைகள் காரணமாக அவர் நிகழ்த்தவிருந்த உரை யூனியன் ஏற்பாட்டாளர்களால் இரத்துச் செய்யப்பட்டது. அதன் பின்னர் லண்டன் டைம்ஸ் அவருடன் மேற்கொண்ட நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஒக்ஸ்போர்ட் யூனியனின் தலைவர் ஜனாதிபதி உரையாற்றுவதை இனியும் விரும்பப் போவதில்லை. இவர் பிரிட்டனுக்கு உத்தியோக பூர்வக் காரணமாக வந்ததே அதற்குத்தான். பிரிவினைவாத  தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்திற்குத் திட்டமிட்டுள்ளனர்.   இதன்விளைவாக ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பு தொடர்பில் உத்தரவாதமில்லை என்று ஒக்ஸ்போர்ட் யூனியனின் தலைவர் தெரிவித்திருந்தார்.
ஒக்ஸ்போர்ட் யூனியன் தலைவர் அவர்களால் (தமிழ் குழுக்களால்) அச்சுறுத்தப்பட்டிருக்கலாம் என நான் நினைக்கின்றேன் என்று ஜனாதிபதி இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தில்   இராணுவ வெற்றி கண்டு    18 மாதங்களின் பின்னர் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மீதான விசாரணைகளை மேற்கொள்ளத் தவறியமைக்காக இலங்கை குற்றச் சாட்டுக்கு இலக்காகியுள்ளது.
இலங்கை   இராணுவம்  இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மேற்கொண்ட   சிவில் தாக்குதல்களால் சுமார்    20 000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக டைம்ஸ் இவ்வருடம் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.      இது தொடர்பில் கேட்கப்பட்ட போது    வெறுமையான புன்னகையுடன்     நிதானமாக மறுத்தார் ஜனாதிபதி. அநேகமான பொதுமக்கள் புலிகளாலேயே கொல்லப்பட்டனர்.    அவர்களைப்    புலிகள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தினர்.    அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு   அவர்கள்   தப்பி வர முயற்சித்தபோது   புலிகள் அவர்களைக் கொலை செய்தார்கள் என்றார் அவர்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் எந்த நாடும் செய்ய இயலாத சாதனையாக நாம் பயங்கரவாதத்தில் இருந்து மீண்டுள்ளோம்.  இப்போது நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது என்றார்.
சீனா இலங்கையில் ஹம்பாந்தோட்டை துறைகத்தை கட்டியுள்ளது தொடர்பில் கேட்கப்பட்ட போது அதனால் இப்போதோ எதிர்காலத்திலோ இலங்கையின் எந்தத் துறைமுகமும் சீனாவின் கடற்படைத் தளமாக இருக்காது. இந்தியா அல்லது வேறு நாடாகவும் இது இருக்கலாம் என்றார்.
வீடியோக் காட்சிகள் தொடர்பில் பதிலளித்த ஜனாதிபதி அது தொடர்பான  முழுவிடயத்தையும் நான் நிராகரிக்கிறேன்.       இது போன்ற தொரு வீடியோவும் முன்னர் ஒளிபரப்பாகி யுள்ளது.  எல்லாம் போலியானவை என்று கூறினார்.
இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான இரு முக்கிய குற்றச்சாட்டுகள் உள்ளன.  முன்னாள் நண்பன் இந்நாள் எதிரி   மற்றும் முன்னாள் எதிரி பின்னால் நண்பன் என்பவைகளே அவையாகும்.    ஒன்று சரத்பொன்சேகா மற்றது விநாயகர்த்தி முரளிதரன் என்பவர்கள் சம்பந்தப்பட்டதே அவை.     இது குறித்து பதிலளித்த போது சரத்பொன்சேகா தொடர்பான விவகாரம்   யாவும்   சட்டமுறைக்குள் உட்பட்ட தெனவும்     முரளிதரன்   குறித்துக் குறிப்பிடும் போது எவரையும் மன்னிக்க நாம் தயாராக உள்ளோம் அவர் ஜனநாயகப் பாதைக்கு   வர  முடியுமானால்   அவரைப்   பழைய நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் கூறினார்.
யுத்தக்குற்றச்  சாட்டுக்கள் மீதான முழு அளவிலான விசாரணையை ஏன் நடத்தப்படவில்லை என்ற கேள்விக்கு நாம் இதனை முன்பே செய்துள்ளோம் நாம் ஆணைக்குழுவையும் ஏற்படுத்தியுள்ளோம் என்று பதிலளித்தார்.
இறுதி யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த 3 இலட்சம் மக்களில் மீள்குடியேற்றத்தை எதிர்பார்த்து 10 000 பேரே உள்ளனர். சிறுவர் போராளிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  அதைத் தெரிவித்த ஜனாதிபதி புலிச் சந்தேகநபர்களின் பட்டியலை வெளியிட தனது அரசாங்கம் மறுத்துள்ளதாகவும் அவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் பட்டியலை டைம்ஸ் இதழுக்கு காட்டுவதாகவும் ஆனால் அவர்களின் பெயர்களைப் பிரசுரிக்க அனுமதிக்க முடியாதெனவும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை: