ஞாயிறு, 30 அக்டோபர், 2011

புத்தகங்களைப் பாதுகாப்பது சவாலான காரியம். அழுக்கு, வெள்ளிப்பூச்சிகள்,

புத்தகங்களுடன், புத்தகங்களுக்காக…


பெங்களூரூ பிரிகேடியர் சாலையில் ஒரு சந்தில் என்னுடைய புத்தகக் கடை (Select) இயங்கி வருகிறது. என்னிடம் உள்ள புத்தகங்களில் பெரும்பாலானவை, புராதனமானவை. என் வாழ்நாளில் பெரும் பகுதியை நான் புத்தகங்களைச் சேகரிப்பதிலும் விற்பதிலும், புத்தகக் கண்காட்சிகளில் கலந்துகொள்வதிலும், புத்தகங்கள் குறித்து எழுதுவதிலும் பேசுவதிலும் செலவழித்து வருகிறேன். சில அனுபவங்களை மட்டும் இங்கே உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
டெல்லியில் நடைபெறும் உலகப் புத்தகக் கண்காட்சியில் 1992ம் ஆண்டிலிருந்து நான் கலந்துகொண்டு வருகிறேன். கல்கத்தா, ஹைதராபாத், கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் நடைபெறும் புத்தகக் கண்காட்சிகளிலும் பங்கேற்றிருக்கிறேன். கலந்துகொண்ட ஒவ்வொருமுறையும் நான் பல வகையில் பலனடைந்திருக்கிறேன். இங்கே நான் புத்தக விற்பனையை மட்டும் குறிப்பிடவில்லை. கடிதங்கள் வாயிலாக மட்டும் பரிச்சயமாகியுள்ள பல எழுத்துலக நண்பர்களை நேரில் காணும் வாய்ப்பு புத்தகக் கண்காட்சி மூலம் மட்டுமே கிடைக்கிறது.

நண்பர் ஒருவர் பிராங்ஃபர்ட் புத்தகக் கண்காட்சி பற்றி பெருமை பொங்க குறிப்பிட்டார். அங்குள்ள விசேஷமான ஏற்பாடுகள் குறித்தும் பிரமிப்பூட்டும் வசதிகள் குறித்தும் அவர் நிறைய சொன்னார். உலகம் முழுவதிலும் இருந்து பதிப்பாளர்கள் பங்குபெறும் இந்தக் கண்காட்சியில் தமிழ்நாட்டில் இருந்தும் கேரளாவில் இருந்தும் சிலர் பஙகேற்கிறார்கள். ‘நீங்கள் ஸ்டால் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்!’ என்று அந்த நண்பர் குறைபட்டுக்கொண்டார். தினம் தினம் புதிய புத்தகங்கள் பல உலகம் முழுவதிலும் இருந்து வெளிவந்துகொண்டிருக்கின்றன என்றாலும் பழைய புத்தகங்களுக்கான தேவை நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது என்று புரிந்துகொண்டேன்.
பதிப்பாளர்களைப் பொறுத்தவரை நான் அவதானித்த ஒரு விஷயம் இது. சமீப காலமாக,சிறிய பதிப்பகங்களை பல பெரிய ராட்சஸ நிறுவனங்கள் விழுங்கிக்கொண்டு வருகின்றன. பல புராதன பதிப்பங்கள் நவீனமாக மாறிவருகின்றன. புத்தக வெளியீட்டு விழாக்கள், குறைந்தவிலை புத்தக விற்பனை என்று பலப்பல முறைகளை இவர்கள் கையாண்டு வருகிறார்கள். பல சமயங்களில், புத்தகம் என்பது விற்பனைக்குரிய பண்டமாக மாட்டுமே பார்க்கப்படுவதை இந்நிகழ்ச்சிகள் நிரூபிக்கின்றன. ஆம், அவர்களைப் பொறுத்தவரை நாற்காலிகளைப் போல், வாஷிங் மெஷினைப் போல் புத்தகமும் ஒரு பண்டம்தான். என்னுடைய புத்தகக் கடை சிறியது. இப்படிப்பட்ட விழாக்களை நாங்கள் நடத்துவதில்லை.
பொதுவாக, புத்தகம் வாங்குபவர்கள் வெவ்÷று பின்னணியைச் சார்ந்தவர்கள். அவர்களுடைய விருப்பு, வெறுப்புகளை நாம் புரிந்துகொள்ளவேண்டும். ‘மாணவர்களுக்கு டிஸ்கவுண்ட் தருவீர்களா?’ ‘இன்னும் எவ்வளவு குறைத்துக்கொள்ளமுடியும்?’ என்று கேட்பவர்களை தினம் தினம் சந்திக்கிறேன். மீண்டும் மீண்டும் கேட்கப்படும் கேள்விகள் இவை. அவர்களுக்கு நான் பொறுமையாகவே ஒவ்வொருமுறையும் பதிலளிப்பேன். இவ்வாறு கேள்வி கேட்பவர்கள் பெரும்பாலும் அனுகூலமான விடைகளையும் நல்ல புத்தகங்களையும் பெற்றுச் செல்வது வழக்கம்.
பல வித்தியாசமான மனிதர்களை நான் புத்தகக் கடையில் சந்தித்ததுண்டு. கணவர் உள்ளே புத்தகம் தேடிக்கொண்டிருக்கும்போது, மனைவி கடை வாசலில் நின்றுகொண்டிருப்பார். அல்லது, பக்கத்தில் ஷாப்பிங் செய்ய போய்விடுவார். தன் காரியம் முடிந்ததும் கணவருக்கு மிஸ்ட் கால் கொடுப்பார். அதுவரை சேகரித்து வைத்திருந்த புத்தகங்களுக்கு அவசரமாக பில் போட்டுவிட்டு கணவர் வெளியேறிவிடுவார். சில சமயம் மனைவி மட்டும் புத்தகம் தேடுவார். கணவர் அமைதியின்றி வெளியில் நடை போட்டுக்கொண்டிருப்பார். என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர், பல புத்தகங்களை ஒன்றாக வாங்கி, அவற்றை மூட்டைகட்டி கடையிலேயே வைத்துவிட்டு, சிறிது சிறிதாக வீட்டுக்குக் கொண்டு செல்வார்.
இடம் பெயரும்போது பலர் வருத்தத்துடன் தங்கள் புத்தகங்களை எங்களிடம் விற்றுவிட்டுச் சென்றுவிடுவார்கள். அவர்களுடைய வருத்தம் எங்களுடைய மகிழ்ச்சியாக மாறுவதை என்னவென்று சொல்வது! பலரால் தங்கள் சிறிய வீடுகளில் தங்களுக்கு விருப்பமான அத்தனை புத்தகங்களையும் சேகரித்துவைக்கமுடியாமல் போய்விடுகிறது. பழைய பத்திரிகைகள், கிளாஸிக்ஸ் ஆகியவற்றைச் சேகரிப்பதில் தனிப்பட்ட முறையில் எனக்கு ஆர்வம் அதிகம். உதாரணத்துக்கு, கேதரின் மேயோவின் மதர் இண்டியா, ஆனி பிராங்கின் டைரி ஆகியவற்றின் ஆரம்பகாலப் பதிப்புகள் எங்களிடம் உள்ளன. இந்தப் புத்தகங்கள் தற்போது அச்சில் உள்ளன என்றாலும், பழைய பதிப்புகளையும் முதல் பதிப்புகளையும் தேடி எங்களிடம் வருகிறார்கள்.
சேகரிப்பதைக் காட்டிலும் புத்தகங்களைப் பாதுகாப்பது சவாலான காரியம். அழுக்கு, வெள்ளிப்பூச்சிகள், ஒட்டடை, தூசி என்று புத்தகத்தைப் பாழாக்க பல எதிரிகள் உள்ளனர். சில வகை புழுக்களும்கூட படையெடுத்து வருகின்றன. பல அரிய புத்தகங்களை இந்த எதிரிகளிடம் நான் இழந்திருக்கிறேன். கல்கத்தா, மும்பை, ஹதராபாத் என்று புத்தகங்களைத் தேடி பயணம் மேற்கொள்ளும்போது பல நல்ல புத்தகங்கள் அகப்படும். துள்ளியெழுந்து பிரித்தால் பூச்சிகள் பக்கங்களை அரித்துபோட்டிருக்கும்.
உயர்நிலைப் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்துக்கொண்டிருந்த சமயம், என் பாட்டியின் கிராமத்துக்குச் செல்லும்போது என் அம்மா, தங்கைகள், தம்பிகள் அனைவரும் உடன் வருவார்கள். இருந்தும் இவர்கள் மட்டும் எனக்குப் போதாது என்பதால் ஒரு டிரங் பெட்டியையும் கையோடு கொண்டுபோய்விடுவேன். எப்படிப்பட்ட புத்தகங்களைக் கொண்டு செல்வேன் என்று இன்று யோசிக்கும்போது புதிராக இருக்கும். Havelock Ellis’ My Confession, William Saroyan’s Human Comedy,  Correspondence between H. Ellis & Olive Schreiner போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம்.  என்னால் எல்லாவற்றையும் புரிந்துகொள்ளமுடியாது என்றபோதும் படித்துக்கொண்டிருப்பேன். பாட்டி வீட்டில் எலிகளும் தேள்களும் அதிகம். புத்தகங்களை அவற்றிடம் இருந்து மீட்க நிறைய போராடவேண்டியிருந்தது.
படிப்பைத் தொடர பெங்களூரூ திரும்பியபோது ஒரு சிறிய புத்தகம் என் கண்ணில் சிக்கியது. அதன் தலைப்பு, English Theatre. ஆசையுடன் திறந்தபோது பக்கங்கள் பொடிப்பொடியாக உதிர ஆரம்பித்தன. ஒரு பழுப்பு நிற எலி புத்தகத்தைக் குதறியிருந்ததைக் கண்டுகொண்டேன். எலிகள், உயிருடன் இருக்கும்போதும் சரி, இறந்தபிறகும்சரி தொடர்ந்து தொல்லை கொடுத்துவருகின்றன. என் அறை முழுவதும் புத்தகங்கள் நிரம்பியிருக்கும். சுவரோரங்களில் குவியல் குவியலாக அடுக்கியிருப்பேன். அந்தக் குவியலுக்குள் எலிகள் புகுந்துவிட்டால், கண்டறிவது மிக மிகக் கடினம். பல புத்தகங்கள், தொட்டாலே உதிர்ந்துவிடும் நிலையில் இருந்தன. பத்திரமாக வெண்ணைய் தாள் கொண்டு அவற்றை மூடிவைத்திருப்பேன். சிலவற்றுக்கு பிளாஸ்டிக் கவர் போட்டிருப்பேன். உதிரியாக இருக்கும் பக்கங்களை, வரைபடங்களை, போஸ்ட் கார்டுகளை, கத்தரித்த செய்தித்தாள் குறிப்புகளை அட்டைப் பெட்டிகளுக்குள் வைத்திருப்பேன்.
வாடிக்கையாளர்களுக்குக் காட்டுவதற்காக ஒவ்வொருமுறை அட்டைப் பெட்டியைத் திறக்கும்போதும், கவனத்துடன் இருக்கவேண்டும். புத்தகக் கண்காட்சிகளுக்கு அவற்றைத் தூக்கிச்செல்வது சவாலான பெரும்பணி. வண்டிகளில் ஏற்றி, இறக்குவது அதைவிடப் பெரிய சவால். இப்படிப்பட்ட பெட்டிகளைக் கையாள்பவர்கள் பெரும்பாலும் படிக்காதவர்கள் என்பதால், சாதாரணப் பெட்டி, படுக்கைகளைப் போலவே இவற்றையும் அலட்சியமாகக் கையாள்வார்கள்.
புத்தகங்களை உயிருக்கு உயிராக நேசிக்கும் பலரை நான் அறிவேன். ஆஸ்டின் டோப்ஸன் என்னும் 18ம் நூற்றாண்டு எழுத்தாளரின் கட்டுரை ஒன்றில் சாமுவேல் ஜான்சனின் நூலகம் பற்றிய குறிப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. புத்தகங்களைப் பார்த்து ஜான்சன் இவ்வாறு கூறுகிறார். ‘இவர்கள் என் நண்பர்கள். இவர்களிடம் இருந்து நான் இன்னும் விடைபெறவில்லை.’ லண்டனை எவ்வளவு நேசித்தாரோ அந்த அளவுக்குப் புத்தகங்களையும் ஜான்சன் நேசித்திருக்கிறார். தன் புத்தகங்களை ஜான்சன் பத்திரமாகப் பாதுகாத்தார். சாப்பிடும்போது அவர் புத்தகம் படிப்பதில்லை. பக்கங்களில் அழுக்கு படிந்துவிடும் என்பதால். ஒட்டிக்கொண்டிருக்கும் பக்கங்களை அவர் மிகவும் கவனமாகக் கையாண்டார்.
ஆரம்பத்தில் பனை ஓலைகளைக் கொண்டு எழுதினார்கள். பிறகு, மரப்பட்டைகளையும், ஈயம், மெழுகு போன்றவற்றையும் பயன்படுத்தினார்கள். ஆரம்பகால குறிப்புகளின்படி, ‘உண்மையான ஒரு புத்தகம் தோலில் மட்டுமே எழுதப்பட்டது’. யூதர்களும் பெர்ஷியர்களும் இந்த முறையைக் கடைபிடித்தனர். கல், களிமண், உலோகம், பானை, பனை ஆகியவும் எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்டன. இந்தியாவில் மூன்றாவது அல்லது நான்காவது நூற்றாண்டில் புகைப்பட அச்சுகள் உபயோகப்படுத்தப்பட்டதற்கு ஆதாரங்கள் உள்ளன. ஒருமுறை பேராசிரியர் எஸ்.கே. ராமச்சந்திர ராவ் என்பவருடன் பேசிக்கொண்டிருந்தேன். தன் வீட்டுத் தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தை அவர் சுட்டிக்காட்டினார். அதன் பட்டைகள் எழுதுவதற்காக முன்னர் பயன்படுத்தப்பட்டதை அவர் குறிப்பிட்டார்.
இன்று இண்டெர்நெட்டில் பல லட்சம் புத்தகங்கள் இலவசமாகக் கிடைப்பதாகச் சொல்கிறார்கள். ஆயிரம் வசதிகள் வந்தாலும், ஒரு புத்தகத்தை எடுத்து தொடையில் வைத்து, ஒவ்வொரு பக்கமாகத் திருப்பி படிக்கும் சுகம் வேறு வழிகளில் கிடைக்குமா?
0
K.K.S. மூர்த்தி
(1945ம் ஆண்டு K.B.K. ராவ் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டு, பிறகு அவர் மகன் கே.கே.எஸ். மூர்த்தியாலும், மூர்த்தியின் மகன் சஞ்சய் என்பவராலும் நிர்வகிக்கப்பட்டு வரும் மூன்று தலைமுறை புத்தகக் கடை, Select. கட்டுரையாசிரியர் K.K.S. மூர்த்தி தி ஹிந்து லிட்ரரி ரிவ்யூவில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவருகிறார். ஆங்கிலத்தில அவர் எழுதிய கட்டுரையின் தமிழ்வடிவம் இது. Select புத்தகக் கடையைத் தொடர்பு கொள்ள இங்கே செல்லவும்).

கருத்துகள் இல்லை: