சனி, 24 ஜூன், 2023

புதினுக்கு எதிராக புரட்சியா?யுக்ரேன் போரில் திடீர் திருப்பம் - ரஷ்யாவில் என்ன நடக்கிறது?

bbc.com  : ரஷ்யாவில் புதினுக்கு எதிராக புரட்சி? யுக்ரேன் போரில் திடீர் திருப்பமாக, ரஷ்ய ஆதரவு கூலிப்படையான 'வாக்னர்' அந்நாட்டிற்கு எதிராகவே திரும்பியுள்ளது.
யுக்ரேனில் இருந்து ரஷ்ய எல்லைக்குள் நுழைந்துவிட்ட இந்த கூலிப்படையினர் ரஷ்யாவின் தென் பகுதியில் முக்கிய நகரம் ஒன்றை கைப்பற்றிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அங்கிருந்து தலைநகர் மாஸ்கோ நோக்கி அணிவகுக்க தயாராக இருப்பதாகவும் அதன் தலைவர் பிரிகோஷின் தெரிவித்துள்ளார்.
யுக்ரேனில் ஓராண்டுக்கும் மேலாக நீடிக்கும் போரில் ரஷ்யாவுக்குத் உறுதுணையாக களத்தில் நின்ற அதன் ஆதரவு கூலிப்படையான 'வாக்னர்' திடீரென ரஷ்யாவுக்கு எதிராகவே திரும்பியுள்ளது.
 நேற்றிரவு அந்த கூலிப்படையினர் யுக்ரேன் எல்லையைக் கடந்து ரஷ்யாவுக்குள் நுழைந்து, ரோஸ்டோவ் - ஆன் - டான் நகரில் புகுந்து, அங்குள்ள ரஷ்யாவின் தெற்கு பிராந்திய ராணுவ தலைமை அலுவலகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டுள்ளனர்.

கருங்கடலோரம் அமைந்துள்ள ரோஸ்டோவ்-ஆன்-டான் நகரில் இருந்து வாக்னர் கூலிப்படையினர் மாஸ்கோ நோக்கி அணிவகுப்பதாக பிரிட்டன் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல தரப்பில் இருந்தும் தகவல்கள் கசிந்துள்ளன. வோரோனேஸ் நகரை உள்ளடக்கிய பரந்து விரிந்த வோரோனேஸ் ஓப்ளாஸ்ட் பிராந்தியத்தின் வழியே அப்படையினர் மாஸ்கோ நோக்கிச் செல்வதாக கூறப்படுகிறது.

இந்த நகரம் மாஸ்கோவில் இருந்து 482 கி.மீ. தெற்கே இருக்கிறது.

ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் தன்னை சந்திக்காவிட்டால் மாஸ்கோ நோக்கி அணிவகுத்துச் செல்லப் போவதாக வாக்னர் குழுவின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸின் மிரட்டல் விடுத்துள்ளார்.

ரஷ்ய ராணுவ தலைமையகத்திற்கு வெளியே ஆயுதம் தரித்த வீரர்கள்

யுக்ரேன் போரில் முக்கிய முடிவுகளை எடுக்கும் மையமாக திகழ்ந்த, ரோஸ்டோவ் - ஆன் - டான் நகரில் உள்ள ராணுவ தலைமையகத்திற்கு வெளியே ஆயுதங்களுடன் வீரர்கள் காவல் காக்கும் வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன.

அவர்கள் ராணுவ தலைமையகத்தை பாதுகாக்கும் ரஷ்ய ராணுவ வீரர்களா அல்லது வாக்னர் கூலிப்படையினரா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

அந்த வீடியோக்களில் காட்டப்படும் கட்டடம் ரோஸ்டவ்-ஆன்-டான் நகரில் பதிவு செய்யப்பட்டவை என்பதை எங்களால் உறுதிப்படுத்த முடிந்தது.

அடுத்தடுத்து திருப்பங்கள் அரங்கேறி வரும் வேளையில், அந்த நகரில் மக்களின் இயல்பு வாழ்க்கை அப்படியே நீடிக்கிறது. ,ளைஞர்கள் தெருமுனைகளில் கூடி அங்கு நடந்தேறும் நிகழ்வுகளை நேரலை செய்கின்றனர். தெருக்களை சுத்தம் செய்வோர் அவர்களது வழக்கமான பணிகளை தொடர்கின்றனர்.

ஆனால், அதனூடாக அடுத்தடுத்து அரங்கேறும் நிகழ்வுகள் இயல்பானதாக இல்லை.
'25,000 பேர் சாகத் தயார்' - பிரிகோஸின்
வாக்னர் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸின் தனது டெலிகிராம் பக்கத்தில் செய்துள்ள பதிவில், ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக திரும்புவதால் வாக்னர் குழுவில் உள்ள அனைவருமே சாகவும் தயாராக இருபபதாக குறிப்பிட்டுள்ளார்.

"நாங்கள் அனைவரும் சாகத் தயாராக இருக்கிறோம். நாங்கள் 25,000 மற்றும் கூடுதலாக 25,000" என்று அவர் அந்த ஆடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார். இது ரஷ்ய மக்களுக்கான நடவடிக்கை என்று அவர் கூறியுள்ளார்.

ரோஸ்டவ்-ஆன்-டான் நகரில் உள்ள ராணுவ நிலைகளை கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு விட்டதாக கூறும் வாக்னர் குழுவின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸின், ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்கெய் ஷோய்கு மற்றும் வலேரி கெரசிமோவை சந்திக்க அனுமதி வழங்கப்படாவிட்டால், தலைநகர் மாஸ்கோ நோக்கி சுமார் 1,600 கி.மீ. தூர அணிவகுப்புக்கு தனது படைகள் தயாராக இருப்பதாக மிரட்டல் விடுத்துளளார்.

பிரிகோஸின் பேச்சு அடங்கிய 2 வீடியோக்களும் ரோஸ்டவ்-ஆன்-டான் நகரில் உள்ள ரஷ்ய ராணுவ தலைமையகத்திற்குள் பதிவு செய்யப்பட்டவை என்று கூறப்படுகிறது. அதனை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம்.


மேலும் ஒரு நகரைக் வசமாக்கியதா 'வாக்னர்'?
ரோஸ்டவ்-ஆன்-டான் நகரில் இருந்து மாஸ்கோ நோக்கி புறப்பட்டுவிட்ட 'வாக்னர்' படைகள் மேலும் ஒரு நகரை கைப்பற்றிவிட்டதாக பிபிசி தகவல்கள் கூறுகின்றன. ரோஸ்டோவ்-ஆன்-டான் நகருக்கும், தலைநகர் மாஸ்கோவுக்கும் நடுவே கிட்டத்தட்ட பாதி தொலைவில் உள்ள வெரோனேஸ் நகரில் ராணுவ முகாம்கள், தளவாடங்களை வாக்னர் கூலிப்படை கைப்பற்றிவிட்டதாக கூறப்படுகிறது.

வெரோனேஸ் நகரில் உள்ள எண்ணெய் சேமிப்புக் கிடங்கு ஒன்று பற்றி எரிகிறது. அங்கே தீயை அணைக்கும் பணியில் 100 தீயணைக்கும் வீரர்கள் ஈடுபட்டிருப்பதாக அந்த பிராந்திய ஆளுநர் அலெக்சாண்டர் குசெவ் தெரிவித்துளளார்.

அந்த இடத்தில் இருந்து கரும்புகை வானோக்கி எழும் வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது. அந்த வீடியோக்களை தனிப்பட்ட முறையில் உறுதி செய்து கொள்ளும் பணியில் பிபிசி ஈடுபட்டுள்ளது.
படக்குறிப்பு,


மாஸ்கோ நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய ராணுவ வீரர்களும், கவச வாகனங்களும் வீதிகளில் வலம் வருகின்றன.

இதேபோல், ரஷ்யாவின் இரண்டாவது பெரிய மற்றும் மிக முக்கியமான நகரான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரிலும் ராணுவ பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள 'வாக்னர்' தலைமையகத்தில் இன்று காலை ரஷ்ய அதிகாரிகள் சோதனையிட்டதாக கூறப்படுகிறது. அங்கே, ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாஸ்கோ வீதிகளில் ஆயுதங்களுடன் உலா வரும் ராணுவ வீரர்கள்
முதுகில் குத்தும் செயல் என்று புதின் எச்சரிக்கை
ரஷ்யாவின் ராணுவத் தலைமைக்கு எதிராக வாக்னர் குழு போர்க்கொடி தூக்கிய பிறகு முதன் முறையாக ரஷ்ய அதிபர் புதின் பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய உரையில், அனைத்து படைகளும் ஒருங்கிணைந்து இருக்க கேட்டுக் கொண்டுள்ளார். நடந்த நிகழ்வுகள் 'ஒரு துரோகம்' என்றும் ரஷ்ய மக்களை முதுகில் குத்தும் செயல் என்றும் அவர் சாடியுள்ளார்.

"இது முதுகில் குத்தும் செயல். இந்த மாதிரியான அச்சுறுத்தல்களில் இருந்து தேசத்தைக் காப்பதற்கான எங்களது நடவடிக்கை தீவிரமானதாக இருக்கும். துரோகப் பாதையில் இறங்கி தீவிரவாதத்தை கையில் எடுத்தவர்கள், நிச்சயம் தண்டனையை அனுபவிப்பார்கள். சட்டத்திற்கும் நாட்டு மக்களுக்கும் அவர்கள் பதில் சொல்வார்கள்" என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவை அச்சுறுத்தும் இந்த மோசமான சூழலில் ரஷ்ய அரசு தரப்போ, வாக்னர் கூலிப்படை தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸினோ தங்களது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்க தயாராக இருப்பதாக தெரியவில்லை.

புதினுக்கு நேரடியாக சவால் விடுகிறாரா பிரிகோஸின்?
புதினின் தொலைக்காட்சி உரைக்கு பதிலளித்துள்ள வாக்னர் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸின் தனது நிலைப்பாட்டில் இன்னும் உறுதி காட்டுகிறார். ரஷ்ய அரசு நிர்வாகத்தில் நிலவும் ஊழல், பொய்ப் பிரசாரம், அதிகாரப் பசிக்கு முடிவு கட்டவும் அவர் சூளுரைத்துள்ளார்.

ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக முதன் முறையாக நேரடியாக பிரிகோஸின் விடுக்கும் சவால் இது என்று நம்பப்படுகிறது.

புதினுக்கு மிகவும் நெருக்கமான, அவருக்கு விசுவாசமான சகாவாக வலம் வந்த பிரிகோஸின், ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் சமையல் ஒப்பந்தங்களை பெற்றதன் மூலம் 'புதினின் சமையல்காரர்' என்று வர்ணிக்கப்பட்டவர்.

ரஷ்யாவுக்கு எதிராக வாக்னர் கூலிப்படை திரும்பியது ஏன்?
யுக்ரேன் போர்க் களத்தில் ரஷ்ய ராணுவத்தின் பின்னடைவுக்கும், அதிக உயிரிழப்புகளுக்கும் பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் ஷொய்குவே காரணம் என்று பிரிகோஸின் மீண்டும் மீண்டும் குற்றம்சாட்டியிருந்தார்.

"இந்த போர் தேவைப்பட்டது. அதன் மூலம் ஷோய்கு மார்ஷலாக முடியும். அதன் மூலம் இரண்டாவது நாயகனாக உருவெடுக்க முடிந்தது. யுக்ரேனை நாஜிமயமாகாமல் தடுப்பதற்கோ, ராணுவமயமாக்கலை கட்டுப்படுத்துவதற்கோ இந்த போர் நடக்கவில்லை. ஒரு கூடுதல் நட்சத்திரத்திற்காகவே இந்த போர் தேவைப்பட்டது." என்கிறார் பிரிகோஸின். இது யுக்ரேன் மீதான தாக்குதலைத் தொடங்க ரஷ்யா முன்வைத்த காரணங்களுக்கு முரண்பாடாக இருக்கிறது.

இவ்வார தொடக்கத்தில் யுக்ரேனில் உள்ள வாக்னர் கூலிப்படையின் தளம் ஒன்றை ரஷ்ய ராணுவ தாக்கியதாக பிரிகோஸின் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், இதனை ரஷ்ய பாதுகாப்புத்துறை மறுத்துள்

இது ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் ஷோய்கு மற்றும் வாக்னர் குழு தலைவர் பிரிகோஸின் இடையே நீண்ட காலமாக இருந்து வரும் தனிப்பட்ட கசப்புணர்வின் வெளிப்பாடு என்று மாஸ்கோ வட்டாரங்கள் கூறுகின்றன.

"புதினின் சமையல்காரர்" என்று வர்ணிக்கப்பட்ட பிரிகோஸின் இதுவரை அதிபர் புதினுக்கு நேரடியாக சவால் விடுக்கவில்லை. 

கருத்துகள் இல்லை: