வெள்ளி, 23 ஜூன், 2023

டைட்டானிக்: டைட்டான் நீர்மூழ்கியில் சென்ற 5 பேரும் இறந்துவிட்டனர் - என்ன நடந்தது?

டைட்டானிக் சுற்றுலா நீர்மூழ்கி

BBC News தமிழ்  :  பாக். வம்சாவளி பிரிட்டிஷ் கோடீஸ்வரர் ஷாஸாதா தாவூத், அவரது மகன் சுலேமான் தாவூத்
டைட்டானிக் கப்பலைப் பார்க்கப்போன டைட்டான் நீர்மூழ்கியில் இருந்த அனைவரும் இறந்துவிட்டனர் என்று பயண நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க கடலோரப் படையும் இதை உறுதி செய்துள்ளது.
"எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டாக்டன் ரஷ், ஷாஜதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலேமான் தாவூத், ஹமிஷ் ஹார்டிங் மற்றும் பால்-ஹென்றி நர்ஜோலெட் ஆகியோரை துரதிர்ஷ்டவசமாக இழந்துவிட்டோம் என்று நாங்கள் இப்போது நம்புகிறோம்." என்று நீர்மூழ்கியை இயக்கும் ஓஷன்கேட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


"இந்த மனிதர்கள் உண்மையான ஆய்வாளர்கள், அவர்கள் தனித்துவமான சாகச உணர்வையும், உலகின் கடல்களை ஆராய்வதற்கும் பாதுகாப்பதற்கும் ஆழ்ந்த ஆர்வத்தையும் கொண்டவர்கள்.. இந்த துயரமான நேரத்தில் எங்கள் இதயங்கள் இந்த ஐந்து ஆன்மாக்களுடனும் அவர்களது குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருடனும் உள்ளன. அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.

மீட்புப் பணியில் மிகவும் கடினமாக உழைத்த சர்வதேச சமூகத்தின் பல அமைப்புகளைச் சேர்ந்த எண்ணற்ற ஆண்களுக்கும் பெண்களுக்கும் முழு OceanGate குடும்பமும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது." என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீர்மூழ்கியில் பயணித்தவர்கள் யார்?

காணாமல் போன நீர்மூழ்கியில் 3 சுற்றுலாப் பயணிகள், ஒரு பைலட், ஒரு சுற்றுலா வழிகாட்டி ஆகிய 5 பேர் இருந்தனர்.

    ஹாமிஷ் ஹார்டிங் - 58 வயதான இவர் பிரிட்டனைச் சேர்ந்த பெரும் தொழிலதிபர். சாகசப் பிரியரான இவர் விண்வெளிப் பயணத்துடன், பல முறை புவியின் தென் முனைக்கும் சென்று திரும்பியுள்ளார்.
    ஷாஸாதா தாவூத் - 48 வயதான இவர் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் கோடீஸ்வரர்.
    சுலேமான் தாவூத் - ஷாஸாதா தாவூத்தின் மகன், 19 வயதேயான இவர் ஒரு மாணவர்
    பவுல் ஹென்றி நர்கோலெட் - 77 வயதான இவர் பிரெஞ்சு கடற்படையில் 'டைவர்' பணியில் இருந்தவர். டைட்டானிக் சிதைவுகளில் அதிக நேரம் ஆய்வு மேற்கொண்டவர், முதல் பயணத்தில் இடம் பெற்றவர் ஆகிய பெருமைகளைக் கொண்ட இவருக்கு மிஸ்டர் டைட்டானிக் என்ற பட்டப்பெயரும் உண்டு.
    ஸ்டாக்டன் ரஷ் - 61 வயதான இவர்தான் இந்த டைட்டானிக் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த ஓஷன் கேட் நிறுவனத்தின் நிறுவர் மற்றும், தலைமை செயல் அதிகாரி.

டைட்டன் நீர்மூழ்கியை தேடும் பணியில் முக்கிய தடயம்

முன்னதாக டைட்டானிக் அருகே தேடுதல் பணி நடைபெறும் பகுதியில் உள்ள ஓர் இடத்தில் தொலைதூரத்தில் இருந்து இயக்கப்படும் ஆர்.ஓ.வி வாகனம் சில குப்பைகளைக் கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்தது.

இதுபற்றிய கூடுதல் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், இது எதனுடைய சிதைவுகள் என்பதை வல்லுநர்கள் கண்டுபிடிக்க முயன்று வருவதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

டைட்டனை தேடும் பணியில் கப்பல்கள் மட்டுமின்றி ஆர்.ஓ.விகளும் விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தற்போது 10 ஆயிரம் சதுர மைல் கடல் பகுதியில் தேடுதல் பணி நடந்து வருகிறது.

நீர்மூழ்கியின் தரையிறங்கும் சட்டகம், பின் பக்க உறை ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என நம்பப்படுகிறது.

இடிபாடுகளில் கிடைத்தவற்றில் "ஒரு தரையிறங்கும் சட்டகம் மற்றும் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஒரு பின்புற உறை" ஆகியவை அடங்கும் என்று பயணிகளின் நண்பரான டேவிட் மியர்ன்ஸிடமிருந்து தகவல் வந்தது.

கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்க்கச் சென்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் பணியாளர்கள், கடலின் மேற்புரத்தில் அதனோடு தொடர்பில் இருந்த கப்பலான போலார் பிரின்ஸ் உடன் இருந்த தொடர்பை, கடந்த ஞாயிறு அன்று இழந்தனர். இந்தத் தொடர்பு முறிவு, டைட்டன் கடலுக்குள் சென்ற ஒரு மணிநேரம் 45 நிமிடங்களில் நிகழ்ந்தது.

டைட்டானிக் கப்பலின் இடிபாடுகள் கனடாவின் நியூஃபவுண்ட்லேண்டில் உள்ள செயின்ட் ஜான்ஸின் தெற்கே 700கிமீ தொலைவில் உள்ளது. டைட்டானி கப்பலின் சிதைவுகளுக்கு அருகே உள்ள கடல் பரப்பில் இந்தக் குப்பைகளை ஹொரைசான் ஆர்டிக்கின் ஆர்.ஓ.வி வாகனம் கண்டுபிடித்துள்ளதாக கடலோர காவல்படை அறிக்கை வெளியிட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் கூடுதல் தகவல்கள் தெரிவிக்கப்படும் என்று கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

ஆழ்கடலில் கேட்ட ஒலி நீர்மூழ்கியின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க உதவுமா?

பிரெஞ்சு ஆராய்ச்சி நிறுவனமான ஐஃபிரேமர் (Ifremer) மூலம் இயக்கப்படும் விக்டர் 6000 என்ற நவீன நீர்மூழ்கி தேடுதல் பகுதிக்கு வந்துள்ளது.

வியாழக்கிழமை காலை நிலவரப்படி மீட்புப் பணி நடக்கும் இடத்தில் இருந்து கூடுதலாக சத்தம் கேட்பதாக அமெரிக்க கடலோரப்படை தெரிவித்துள்ளது.

இந்த ஒலி காணாமல் போன நீர்மூழ்கியில் இருந்து வந்திருக்கலாம் என்று கருதப்பட்டாலும் இது உறுதி செய்யப்படவில்லை.

அந்த ஒலி உறுதியாக டைட்டன் நீர்மூழ்கியில் இருந்து வந்ததுதானா என்பதைக் கண்டுபிடித்துவிட முடியுமா, அப்படி உறுதியாகத் தெரிந்துவிட்டால், அந்த ஒலியை வைத்து அதன் இருப்பிடத்தைக் கண்டுபிடித்துவிட முடியுமா என்று நிபுணர்களிடம் கேட்டபோது அதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருப்பதாக்க கூறினர்.

தற்போது சுமார் 4 கி.மீ. ஆழத்தில் தேடும் பணி நடந்து வருகிறது.

இன்னும் சில மணி நேரங்களுக்கே ஆக்சிஜன் இருக்கும் என்று மதிப்பிடப்படும் நிலையில், அதன் பிறகு நீர்மூழ்கியில் இருப்பவர்களுக்கு என்ன ஆகும் என்ற அச்சமும் எழுந்திருக்கிறது.

டைட்டானிக் கப்பலின் சிதைவுகளைக் காண சுற்றுலா சென்ற டைட்டன் நீர்மூழ்கியைத் தேடுவது கடினமாக உள்ளது.

டைட்டன் நீர்மூழ்கி 4,000 மீட்டர் ஆழம் வரை செல்லக்கூடிய திறன் கொண்டது என்பதால் ஆழ்கடலின் மிக ஆழமான பகுதியில் அது இருக்கலாம். மேற்பரப்பிற்கு அடியில் 3,800 மீட்டர் ஆழத்தில் உள்ள டைட்டானிக் கப்பலின் சிதைவுகளைக் காணும் திறனைக் கொண்ட நீர்மூழ்கி அதுவாகும்.

ரேடியோ, ஜிபிஎஸ் சிக்னல்களால் தண்ணீரில் பயணிக்க முடியாது. எனவே தொலைவிலிருந்து இயக்கப்படும் ஆர்.ஓ.வி வாகனங்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கடந்த அரை மணிநேரத்தில், இரண்டு ஆழ்கடல் தொலைதூரத்தில் இருந்து இயக்கப்படும் நீர்மூழ்கிகள், ஆழ்கடலின் அடிப்பகுதியை அடைந்துவிட்டன. அவற்றில் ஒன்று கடல் தரையையே தொட்டுவிட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கனடிய கப்பலான ஹொரைசான் ஆர்டிக் உடன் இணைக்கப்பட்ட நீர்மூழ்கி கடற்பகுதியின் தரையை அடைந்துவிட்டதாக அமெரிக்க கடலோர காவல்படை தன் சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்துள்ளது.

தேடும் பணிக்கு வந்திருக்கும் அதிநவீன நீர்மூழ்கி எப்படிப்பட்டது?

பிரெஞ்சு ஆராய்ச்சி நிறுவனமான ஐஃபிரேமர் (Ifremer) மூலம் இயக்கப்படும் விக்டர் 6000 என்ற நீர்மூழ்கிக் கப்பல் தேடுதல் பகுதிக்கு வந்துள்ளது.

நான்கு மணி நேர ஷிஃப்டுகளில் பணிபுரியும், இரண்டு பைலட்கள் கொண்ட குழு, மேற்பரப்பில் மிதந்து கொண்டிருக்கும் கப்பலான அட்லாண்டேவில் உள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து அதன் இயக்கத்தை வழிநடத்தும்.

கட்டுப்பாட்டு அறையில் மூன்றாவது நபரும் பணிக்கு உதவுவார். இவர் கனடாவை சேர்ந்த கடலோரப் படையைச் சேர்ந்தவராகவோ அல்லது டைட்டான் நீர்மூழ்கி நிறுவனத்தைச் சேர்ந்தவராகவோ இருப்பார்.

விக்டர் 6000 நீர்மூழ்கியில் இருக்கும் விளக்குகள் மற்றும் கேமராக்கள், ஒரு டென்னிஸ் மைதானத்திற்கு சமமான தூரம் வரை கடலின் தரையில் உள்ளதை நிகழ்நேரத்திலேயே பார்க்க மேற்பரப்புக் கப்பலில் இருக்கும் குழுவுக்கு உதவும்.

பிரஞ்சு நீர்மூழ்கிக் கப்பலில் இரண்டு இயந்திரக் கைகள் உள்ளன. அவற்றால் குப்பைகளை அகற்றுவது போன்ற மிக நுட்பமான வேலைகளைச் செய்ய முடியும்.

அட்லாண்டேவில் இருந்து விக்டர் 6000ஐ இயக்கும் குழு மிகவும் அனுபவம் வாய்ந்தது என இந்தத் துறை நிபுணர்கள் கூறுகிறார்கள்.

டைட்டன் நீர்மூழ்கியின் இருப்பிடத்தை ஒலியை வைத்து துல்லியமாக கண்டுபிடிக்க முடியுமா?

சோனோபோய்ஸ் எனப்படும் மிதக்கும் டிடெக்டர் கருவிகள் மூலம் உணரப்படும் ஒலிகள் காணாமல் போன டைட்டன் நீர்மூழ்கியில் இருந்து வருபவையா என்பதைக் உறுதியாகக் கூறுவது கடினம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடல்புவி இயற்பியலாளர் டாக்டர் ராப் லார்டர், தொலைதூரத்தில் இருந்து இயக்கப்படும் நீர்மூழ்கியைப் பயன்படுத்தி, ஆழ்கடலின் அடிப்பகுதியில் எதையாவது கண்டுபிடிப்பதற்கான சாத்தியக்கூறுகள், தேடக்கூடிய பகுதியை எந்தளவுக்கு இறுக்கமாக வரையறுக்க முடியும் என்பதைப் பொறுத்தது என்று விளக்கினார்.

“கண்டறியப்பட்ட ஒலிகளின் மூலம் கிடைத்த முடிவுகளை நாங்கள் அனைவரும் பார்த்தோம்,” என்று முனைவர் லார்டர் இன்று(வியாழக்கிழமை) காலையில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
“ஆனால், தேடுதல் பகுதி பரந்துபட்டதாக, பெரியதாக இருப்பதால், அந்த ஒலிகள் எங்கிருந்து வருகின்றன என்பது யாராலும் நம்பிக்கையுடன் உறுதிபடக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதைக் குறிக்கிறது.”

மிதக்கும் சோனோபோய்ஸ் ஒவ்வொன்றும் தாங்குதிறன் கொண்டவையாக இருக்க வேண்டும். மேலும், ஒலியை உணரும் இந்த போய்ஸ் கருவிகள் இருக்கும் இடங்கள் மற்றும் அந்த ஒலி வந்த இடம் ஆகியவற்றைப் பொறுத்து, அதன் இருப்பிடத்தைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கலாம்.” என்று விவரிக்கிறார் நீர்மூழ்கியின் தேடல் மற்றும் மீட்பு நிபுணரான ஃபிராங்க் ஓவன்.

“அது சாத்தியமாக வேண்டும். ஆனால், டைட்டன் கப்பலில் அவர்கள் அப்படி இடித்து ஒலி ஏற்படுத்தினாலும், அவர்கள் ஒலி எழுப்புவது கார்பன் ஃபைபர் மேலோடு மீது, எஃகு மேலோடு மீதல்ல.
அது மணி அடிப்பது போன்ற ஒலிக்கு பதிலாக, ஒரு கட்டை மீது அடிப்பதைப் போன்ற ஒலியைத்தான் ஏற்படுத்தும். அதன் ஓசை குறைவாகவும் மிருதுவானதாகவும் ஒலிக்கும். அது தெளிவான ஒலியாக இருக்காது. ஆகவே, அந்த ஒலி தண்ணீரை ஊடுருவி அதிக தொலைவுக்குப் பரவாமலும் போகலாம்,” என்று அவர் விளக்குகிறார்.

ஆக்சிஜன் காலியான பிறகு என்ன நடக்கும்?
நீர்மூழ்கியில் ஆக்ஸிஜன் காலியான பிறகு உயிர்வாழ்வது ஒரு நபரின் வளர்சிதை மாற்றத்தைப் பொறுத்தது என்றும் சிலர் மற்றவர்களை விட நீண்ட காலம் வாழலாம் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

நியூஃபவுண்ட்லாந்தில் உள்ள செயின்ட் ஜான்ஸில் உள்ள மெமோரியல் பல்கலைக்கழகத்தின் மருத்துவ நிபுணரான டாக்டர் கென் லெடெஸுடன் பிபிசி நிருபர் பேசியுள்ளார்.
டாக்டர் லெடெஸ், காணாமல் போன டைட்டன் நீர்மூழ்கியில் இருந்தவர்களுக்கான சில காரணிகளை விளக்கினார்.

"இது விளக்கை அணைப்பது போல் இல்லை, அது மலையில் ஏறுவது போன்றது," என்று அவர் கூறினார்.
"அவர்கள் ஆக்ஸிஜன் நுகர்வைக் குறைக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வார்கள். ஓய்வெடுப்பார்கள்.அவர்கள் முடிந்தவரை நிதானமாகவும் அமைதியாகவும் இருக்க முயற்சிப்பார்கள்."

அதிகப்படியான செயல்பாடு, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும், அதிக கார்பன் டை ஆக்சைடை உருவாக்கும் என்று அவர் விளக்கினார்.
"தாழ்வுநிலையில் இருப்பது அவர்களுக்கு சாதகமாக இருக்கலாம்". என்கிறார் அவர்.
"அதிகமாகக் குளிர்ச்சியடைந்து சுயநினைவை இழந்தால், அதன் மூலம் அவர்கள் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பு உள்ளது. குளிர்ச்சியாக இருக்கும்போது இதயத் துடிப்பு மிகவும் மெதுவாக இருக்கும்," என்று அவர் கூறினார்.

காணாமல் போன நீர்மூழ்கியைக் கண்டுபிடிக்க மீட்புப் பணியாளர்கள் இப்போது சுமார் 2.5 மைல் (4 கிமீ) ஆழத்தில் தேடி வருகின்றனர்.

இது ஒரு கடினமான சூழல்; பூமியில் உள்ளதைக் காட்டிலும் விண்வெளியைப் போன்றிருக்கிறது என்று கூறலாம்.
மூழ்கிய டைட்டானிக் கப்பல் "நள்ளிரவு மண்டலம்" என்று அழைக்கப்படும் ஒரு பகுதியில் சிதைந்து கிடக்கிறது. உறைய வைக்கும் குளிர், கருமையான இருளுக்குப் பெயர் பெற்ற பகுதி இது.

இந்த டைட்டன் நீர்மூழ்கியில் இதற்கு முன்பு இரண்டு முறை சென்றவர்கள், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இருளான பகுதியில் இறங்கியதை விவரித்துள்ளனர். இறுதியாக கடலின் அடிப்பகுதியில் திடீரென மோதியிருக்கிறது.

நீர்மூழ்கிக் கப்பலின் இருக்கும் விளக்குகள் ஒரு குறிப்பிட்ட அளழுக்கு வெளிச்சத்தை வழங்குகின்றன. ஆனால் சில மீட்டருக்கு அப்பால் எதுவும் தெரியாது.

தேடல் தொடர்ந்து கொண்டிருப்பதால், இந்தச் சூழலை எதிர்த்து மீட்புக் குழுவினர் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

நீர்மூழ்கி உள்ளே என்ன இருக்கிறது?
டைட்டான் நீர்மூழ்கி மிகவும் குறுகியது, வெறும் 670 செ.மீ x 280 செ.மீ x 250 செ.மீ (22 அடி x 9.2 அடி x 8.3 அடி) அளவு மட்டுமே கொண்டது. ஒரு பைலட், நான்கு பயணிகள் ஐந்து பேர் கொண்ட குழுவை ஏற்றிச் செல்ல முடியும்.

இது போட்டியாளர்களை விட பெரியதாக இருந்தாலும், பயணிகள் தரையில்தான் உட்கார வேண்டும். சுற்றி வர குறைந்த மிகக் குறைந்த இடமே இருக்கும்.

கப்பலின் முன்புறத்தில் ஒரு பெரிய குவிமாடம் போன்ற பார்வை வெளி இருக்கிறது. இதன் மூலம் வெளியே இருப்பதைப் பார்க்க முடியும்.

"பயணிகள் செல்லும் மற்ற எந்த நீர்மூழ்கிக் கப்பல்களைவிடவும் இந்த காட்சிப் பகுதி பெரியது" என்று நிறுவனம் கூறுகிறது.

அத்தகைய ஆழத்தில் மிகவும் குளிராக மாறும் என்பதால் நீர்மூழ்கியின் சுவர்களும் சூடாகின்றன. சுவரில் பொருத்தப்பட்ட விளக்குகள் மட்டுமே வெளிச்சத்துக்கான ஆதாரம்.

மற்ற நீர்மூழ்கிகளில் இல்லாத வகையில் முன்புறத்தில் பயணிகளுக்கான தனிப்பட்ட கழிப்பறை இதில் உண்டு. இதைப் பயன்படுத்தும்போது ஒரு சிறிய திரையால் மூடப்படும். கூடவே இசையும் ஒலிக்கும்.

ஆனாலும் உணவைக் குறைத்து கழிப்பறையைப் பயன்படுத்துவதைக் குறைக்க வேண்டும் எந்று இந்தச் சுற்றுலா நிறுவனம் வலியுறுத்துகிறது.

டைட்டானிக் சுற்றுலா நீர்மூழ்கி எங்கே மூழ்கியது?
காணாமல் போன டைட்டானிக் சுற்றுலா நீர்மூழ்கி 5 பேருடன் நியூபவுண்ட்லாந்து கடற்கரையில் செயின்ட் ஜான்ஸ் நகரில் தொடங்கியுள்ளது.

பயணத்தை தொடங்கிய ஒரு மணி நேரம் 45 நிமிடங்களில் அந்த நீர்மூழ்கியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. அது செயின்ட் ஜான்ஸ் நகரில் இருந்து கிழக்கே 1,450 கி.மீ., தெற்கே 643 கி.மீ. தொலைவில் மூழ்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

நீருக்கடியில் சத்தம் - நீர்மூழ்கி விபத்தில் சிக்கியதா?
நீர்மூழ்கி காணாமல் போன பகுதியில், நீருக்கடியில் இருந்து சத்தம் எழுந்ததை கனடிய கடற்படைக்குச் சொந்தமான பி-3 விமானம் கேட்டதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. அமெரிக்க அரசின் உள்ளுடு தகவல் பரிமாற்றத்தை சுட்டிக்காட்டி, அது மோதும சத்தமாக இருக்கலாம் என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த சத்தம் எப்போது, எவ்வளவு நேரத்திற்கு கேட்டது என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்று சி.என்.என். தொலைக்காட்சி செய்தி கூறுகிறது.

வியாழக்கிழமையன்று கூடுதலாக சப்தம் கேட்டதாகவும் மீட்புக்குழு தெரிவித்துள்ளது.
படக்குறிப்பு,

தேடுதல் பணியில் யார், யார் ஈடுபட்டுள்ளனர்?
அட்லாண்டிக் பெருங்கடலில் 19,650 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் கடற்படைகளுடன், ஆழ்கடல் ஆய்வு நிறுவனங்கள் பலவும் இந்த மீட்புப் பணியில் கைகோர்த்துள்ளன.

காணாமல் போன நீர்மூழ்கியை கப்பல்கள், விமானங்கள் மூலம் கண்டுபிடிக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நீர்மூழ்கி காணாமல் போன இடம் தொலைதூர பகுதி என்பதால் தேடுதல் பணி கடினமாக இருப்பதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

சில மணி நேரத்திற்கான ஆக்சிஜன் மட்டுமே இருப்பு
காணாமல் போன நீர்மூழ்கியில் உள்ள 5 பேரும் இன்னும் சில மணி நேரத்திற்கு சுவாசிப்பதற்கான ஆக்சிஜன் மட்டுமே எஞ்சியிருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தாமதமாகும் ஒவ்வொரு நிமிடமும் அவர்கள் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகளை குறைத்துவிடும் என்பதால் விரைந்து அவர்களைக் கண்டுபிடிக்க தேடுதல் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த ஆழ்கடல் ஆய்வு நிறுவனமான மெகல்லனின் உதவியையும் ஓஷன்கேட் நிறுவனம் கேட்டுள்ளது.

பயணத்திற்கு முன்பு பிரிட்டிஷ் கோடீஸ்வரர் கூறியது என்ன?
நீர்மூழ்கியில் பயணம் செய்த பாக். வம்சாவளி பிரிட்டிஷ் கோடீஸ்வரர் ஷாஸாதா தாவூத்(மேலே), பிரிட்டிஷ் தொழிலதிபர் ஹாமிஷ் ஹார்டிங்

கடந்த வார இறுதியில் ஹார்டிங் தனது சமூக வலைதளப் பக்கத்தில். டைட்டானிக் சிதைவுகளை நேரில் பார்க்கப் போவதாக பெருமையுடன் குறிப்பிட்டிருந்தார். 

கருத்துகள் இல்லை: