வெள்ளி, 23 ஜூன், 2023

யாழ்ப்பாண மாணவிகளை வட்ஸ்அப் மூலம் பெற்றோர் கண்காணிக்க ஏற்பாடு - காவல்துறை உத்தரவு!

hirunews.lk : யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள மகளிர் பாடசாலைகளில் வகுப்பு ரீதியாக வட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கப்பட்டு மாணவிகளின் பெற்றோரின் கைத்தொலைபேசி இலக்கங்கள் இணைக்கப்பட்டு வகுப்பு ஆசிரியைகளால் கையாளப்பட வேண்டும் என்றும், மாணவிகள் தொடர்பான அவதானிப்புக்கள் அதில் பதிவிடப்பட வேண்டும் என்றும் யாழ் மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபரினால் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் மஞ்சுள செனரத் நேற்று இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் பதின்ம வயதினர் தொடர்பான குற்றங்களைக் குறைக்கும் நோக்கில் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மாணவிகளின் வரவு உட்பட அவர்கள் தொடர்பான ஆசிரியர்களின் அவதானிப்புக்களை மாணவிகளின் பெற்றோர், பாதுகாவலர் பார்க்கும் வகையில் வட்ஸ் அப் குழுக்களை உருவாக்க வேண்டும் என்றும், இந்தக் குழுக்கள் வகுப்பு ஆசிரியைகளாலேயே கையாளப்பட வேண்டும் என்றும் பணிக்கப்பட்டுள்ளது.

மாணவிகள் பாடசாலைக்கு சமூகமளிக்காவிட்டால் உடனடியாக இந்தக் குழுக்கள் ஊடாக பெற்றோருக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும், மாணவிகள் பாடசாலைக்கு வரும் வாகன விவரங்கள், சாரதிகளின் கைத்தொலைபேசி இலக்கங்கள் போன்றவையும் இந்தக் குழுக்களில் பகிரப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையை உடனடியாக செயற்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் குறித்த செயற் திட்டம் அந்தந்த காவல்துறை பிரிவில் உள்ள காவல்துறை பொறுப்பதிகாரிகளினால் மேற்பார்வை செய்யப்படும் எனவும் யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் மஞ்சுள செனரத் மகளிர் பாடசாலை அதிபர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
 

கருத்துகள் இல்லை: