திங்கள், 20 ஜூன், 2022

சிறுவாணி நீர்! கேரள முதல்வருக்கு நன்றி! கோரிக்கையை ஒரே நாளில் நிறைவேற்றிய முதல்வர் பினராயி விஜயன்

கலைஞர் செய்திகள் : கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
சிறுவாணி குடிநீர்த் திட்டத்தில் பயனாளிகளுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு நேற்று (19-6-2022) எழுதிய கடிதத்தில், சிறுவாணி குடிநீர்த் திட்டத்தின் மூலம் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் இத்திட்டப் பயனாளிகளுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்கிடவும், சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை 878.5 மீட்டர் வரை பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறும் கேட்டுக் கொண்டார்.
நேற்று கோரிக்கை.. இன்று நடவடிக்கை: கேரள முதல்வருக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மேலும், கேரள முதலமைச்சர் இக்கோரிக்கை குறித்து தனிப்பட்ட முறையில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

தமிழ்நாடு முதலமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க, கேரள அரசு, சிறுவாணி அணையிலிருந்து கோயம்புத்தூர் மாநகராட்சியன் குடிநீர் தேவையை தீர்க்க போதிய நீரை இன்று (20.6.2022) உடனடியாக திறந்துவிட்டுள்ளது.
நேற்று கோரிக்கை.. இன்று நடவடிக்கை: கேரள முதல்வருக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , கோயம்புத்தூர் மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவையினை தீர்த்து வைத்ததற்காகவும், இரு மாநிலங்களுக்கிடைய ஆன ஒப்பந்தத்தின்படி சிறுவாணி அணையிலிருந்து வேண்டிய நீரினை வழங்கியமைக்காகவும் இன்று (20.6.2022) மாண்புமிகு கேரள முதலமைச்சரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இவ்வாறு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: