சனி, 12 செப்டம்பர், 2020

மிரட்டும் ஊடகங்கள் மிரளும் திமுக.. வே. மதிமாறன்.

Mathimaran V Mathi
: மிரட்டும் ஊடகங்கள் மிரளும் திமுக! ஒரு பேரியக்கத்தின்
அஸ்தமனம் எனக் கலைஞரை குறித்து மிகக் கேவலமான கட்டுரை வெளியிட்ட இந்துதான், அதுகுறித்த எந்த வருத்தமும் தெரிவிக்காமல், கூச்சமே இல்லாமல் தெற்கிலிருநது ஒரு சூரியன் என கலைஞரை வர்ணித்து புத்தகம் வெளியிட்டது. இந்துவிடம் குறைந்தபட்ச அறிவு நாணயம்கூடக் கிடையாது. அவர்கள் சங்கியாக இருக்கக்கூட லாயக்கற்றவர்கள். சங்கிகளிடம் கூட அவதூறில் ஒரு தொடர்ச்சி இருக்கிறது. இந்துவின் நோக்கம் வர்த்தகத்திற்குப் புகழ்ச்சியும். அரசியலுக்குக் காழ்ப்புணர்ச்சியும் என்கிற முறைதான் திமுக குறித்தும்.
ஆனால், அது தெரியாமல் அதை நெஞ்சோடு அணைத்து, சொந்த செலவில் இந்து விற்பனையாளராக ஊர் ஊராகக் கூவி விற்ற திமுககாரர்களும் திராவிட இயக்க அறிஞர்களும்தான் பாவம். அந்த முக்கியத்துவத்தை இவர்கள் முரசொலிக்கு தந்ததில்லை.

இப்போதும் சிலர், திமுக மீதான அவதூறை தனியாகவும் அதற்கும் தரமான இந்துவிற்கும் தொடர்பில்லை என்கிற பாணியில், கட்டுரை எழுதியவரை பலிகடாவாக்கி கண்டிப்பது அதில் தனக்கான வாய்ப்பிற்குத் துண்டு போட்டு வைக்கும் எழுத்தளார்களுக்கே உரிய புத்திசாலிதனம்தான்.

தமிழ் இந்து வெளியான முதல்நாள் 3 மணி நேரத்திற்குள் அந்த இதழின் சங்கி மனோபாவத்தை பல பக்கங்களிலிருந்து முதலில் முன் அறிவித்து எச்சரித்தவன் நான் மட்டுமே. (இணைப்பு முதல் கமெண்ட்டில்) கண்டிப்பதால், எனக்கான வாய்ப்பு என் புத்தக அறிமுகத்திற்குகூட மறுக்கப்படும் என்று தெரிந்தேதான் செய்தேன்.
இன்றும் அதற்காகவே என்னை முற்றிலுமாகப் புறக்கணிப்பதுதான் அந்த ஜனநாயக தூணின் யோக்கியதை.

மிகப் பெரிய ஜனநாயகவாதியான இந்து ராம், கலைஞர் குடும்பத்தின் உறவினர். இப்படி ஒரு தவறான கட்டுரை வந்ததற்காக அவர் அதைக் கண்டிப்பாரா? அந்தக் கட்டுரையும் ஒரு ஜனநாயகம் எனக் கடந்து செல்வார்.

2 ஜீ விவகாரத்தில் அவதூறுகளை அள்ளி தெளித்தது விகடன். அது தவறு எனத் தீர்ப்பான பிறகு அதற்கு வருத்தம் தெரிவித்ததா?

எப்போதுமே ஊடகங்களால் திமுகவிற்கு நன்மையில்லை. திமுகவால் ஊடகங்களுக்குதான் நன்மை. எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் ஆளுங்கட்சியாக இருக்கும்போது திமுகவிற்கு எதிரான செய்திகளை வியாபாரம் செய்வது. திமுக விடமே விளம்பரங்கள் வாங்கியும் பிழைப்பது.

ஊடகங்களால் திமுக எப்போதும் வெற்றி பெற்றதில்லை. திமுகத் தலைமையும், தொண்டர்களும் இந்த உண்மையைப் புரிந்து கொண்டு ஊடகங்களைப் பொருட்படுத்தாமல், மக்களோடு பயணியுங்கள்.

மக்கள் ஜெயலலிதா இருக்கும்போதே வெற்றியை திமுகவிற்குத் தந்தார்கள். அதைத் திமுகதான் தவிர்த்தது.
இப்போதும் பிரம்மாண்ட வெற்றியை தருவதற்கு மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதைப் பெறுவதற்குத் திமுகதான் தயங்கிக் கொண்டிருக்கிறது-வே. மதிமாறன்.

கருத்துகள் இல்லை: