வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

அத்திவரதரால் ஆட்சிக்கு ஆபத்து! எடப்பாடிக்கு பட்டாச்சாரியார்கள் கொடுத்த ஷாக்!

டிஜிட்டல் திண்ணை: அத்திவரதரால் ஆட்சிக்கு ஆபத்து!  எடப்பாடிக்கு பட்டாச்சாரியார்கள் கொடுத்த ஷாக்!மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது. லொக்கேஷன் காஞ்சிபுரத்தைக் காட்டியது.
“கடந்த ஒன்றரை மாதங்களாக அமர்க்களப்பட்ட காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவ தரிசனம் இன்றோடு நிறைவு பெறுகிறது. அத்திவரதரை நாளை மீண்டும் குளத்துக்குள் வைப்பதற்கான ஏற்பாடுகளை காஞ்சிபுரம் பட்டாச்சாரியர்களும், மாவட்ட நிர்வாகத்தினரும் ஒருங்கிணைந்து செய்து வருகின்றனர்.
அத்திவரதரைக் காணத் திரண்ட கூட்டம் கடைசி நான்கைந்து நாட்களில் கடுமையாக எகிறியது. இதுவரை தமிழ்நாடு, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து சுமார் ஒரு கோடி பேர் அத்திவரதரை தரிசித்த நிலையில் பல கோடி பேர் இன்னும் அத்திவரதரை தரிசிக்க முடியவில்லை. காஞ்சிபுரத்தில் கூட்ட நெரிசல், நெருக்கடி என்ற செய்திகளைப் பார்த்தே பலர் தங்கள் பயணத்திட்டத்தை மாற்றிக் கொண்டுவிட்டனர். இந்த நிலையில் அத்திவரதரை மீண்டும் குளத்துக்குள் வைக்கக் கூடாது என்று, அவரை மக்கள் தரிசனத்துக்காக வெளியிலேயே வைக்க வேண்டும் என்ற கருத்து கடந்த பத்து நாட்களாகவே உருண்டு திரண்டது. நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடுக்கப்பட்டன.

இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில், ‘அத்திவரதர் சிலையை மீண்டும் குளத்தில் வைக்கக் கூடாது’ என்று வலியுறுத்தி வழக்குத் தொடுத்த வீர வசந்தகுமார் உள்ளிட்ட இந்து மகா சபா அமைப்பினர், தனிப்பட்ட முறையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க முயன்றனர். முதல்வர் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து முதல்வரை அவரது வீட்டில் சென்று சந்தித்தனர் அவர்கள்.
’அத்திவரதர் இப்போது தமிழ்நாட்டின் ஆன்மீக அடையாளமாகிவிட்டார். அதனால தயவு செஞ்சு அவரை மீண்டும் குளத்துக்குள்ள வைக்கணும்குற முடிவை மறுபரிசீலனை பண்ணுங்க. அத்திவரதரை வெளியே தனி சந்நிதியாக வைத்தால், திருப்பதிக்கு நிகரான ஆன்மீக பெருமையையும், பொருளாதார வளர்ச்சியையும் காஞ்சிபுரம் பெறும். உங்க காலத்துல இது நடந்ததுன்னா அந்த பெருமை முழுக்க உங்களையே சேரும்’ என்று முதல்வரிடம் வற்புறுத்தியுள்ளனர். ‘ஆகம விதிகள் அப்படினு சொல்றாங்களே..’ என்று முதல்வர் அவர்களிடம் சொல்ல, ‘அப்படியெல்லாம் ஆகம விதிகள்ல எங்கேயும் இல்லங்க. அதனால நீங்க முடிவெடுத்தா இன்னும் அத்திவரதரை தரிசிக்காத பல கோடி பேருக்கு அந்த பாக்கியம் கிடைக்கும்’ என்று முதல்வரிடம் உருக்கமாக வேண்டுகோள் வைத்துள்ளனர்.
‘இதுல என் கையில எதுவும் இல்ல. நான் கலெக்டர் மூலமா காஞ்சிபுரம் கோயில்ல இருக்கிற பெரியவங்ககிட்ட பேசிப் பார்க்குறேன்’ என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்திருக்கிறார் முதல்வர். அவர்களை அனுப்பி வைத்துவிட்டு உடனடியாக காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையாவைத் தொடர்புகொண்டிருக்கிறார் முதல்வர்.
‘நீங்க உடனே அத்திவரதர் ஆகமத்தைப் பத்தி முழுசா தெரிஞ்ச பட்டாச்சாரியார்களை கூப்பிட்டு பேசுங்க. ஒருவேளை அத்திவரதரை குளத்துல வைக்காமல் வெளியே வைத்தால் என்ன ஆகும்னும் தோணுது. அவங்ககிட்ட கேட்டு முடிவு பண்ணிக்கலாமே’ என்று கூறியிருக்கிறார். முதல்வர் சொன்னதையடுத்து கலெக்டர் பொன்னையா நேற்று காலை காஞ்சிபுரம் கோயில் மூத்த பட்டாச்சாரியார்களை தனது கேம்ப் ஆபீசுக்கு அழைத்துப் பேசியிருக்கிறார்.
‘அத்திவரதரை குளத்துக்குள்ள வச்சுதான் ஆகணுமா வேற வழியிருக்கானு சிஎம் உங்ககிட்ட கேக்க சொன்னாரு’ என்று கலெக்டர் கேட்க, பட்டாச்சாரியார்களோ, ‘சார்... ஒவ்வொரு விஷயமும் ஒரு நியதிக்கு உட்பட்டுதான் நடக்குர்து. அப்படித்தான் அத்திவரதர் வைபவமும். இது நாங்களோ நீங்களோ நிர்ணயிச்சது கிடையாது. நாப்பது வருஷத்துக்கு ஒரு முறை இப்படித்தான் நடந்துண்டுருக்கு. நாப்பது வருஷத்துக்கு முன்னாடி பெரியவா என்ன பண்ணாளோ அதையேதான் நாமும் பண்றோம். இதுல போய் நாம கைவச்சா அது நன்னா இருக்காது. இதை மாத்த சொல்லாதீங்கோ’ என்று சொல்லியிருக்கிறார்.

அப்போது கலெக்டர் பொன்னையா தனது போனில் இருந்து முதல்வர் எடப்பாடிக்கு அழைத்து, ‘நீங்க சிஎம் கிட்டயே இதை சொல்லிடுங்களேன்’ என்று சொல்லி போனை அந்த மூத்த பட்டாச்சாரியாரிடம் கொடுத்துவிட்டார். இந்த முனையில் காஞ்சி பட்டாச்சாரியார், அந்த முனையில் முதல்வர் எடப்பாடி.
‘சார்... இந்த நாப்பத்து சொச்ச நாளும் ரொம்ப நன்னா ஏற்பாடு பண்ணிக் கொடுத்திருக்கேள். சின்ன சின்ன பிரச்சினைகள் இருந்தாலும் ரொம்ப சுமுகமா எல்லாம் நடந்திருக்கு. ஆனா கடைசியில அதை ஏன் நாம மாத்தணும். அத்திவரதரை அவரோட வழியில அனந்த சரஸ் குளத்துல போக விட்டுருவோம். எல்லாம் ஒரு க்ரமமா நடந்துண்டுருக்கும்போது அதை ஏன் நாம மாத்துவானேன்... உங்க க்‌ஷேமத்துக்கும் சேர்த்துதான் சொல்றேன். அத்திவரதர் விக்ரகத்தை வெளியில வச்சா நாட்டுக்குதான் பிரச்சினை வரும். நீங்க நல்லபடியா ஆட்சி பண்ணிண்டிருக்கேள். இன்னும் சொல்லப் போனா உங்க ஆட்சிக்கே ஆபத்து வரவும் வாய்ப்பிருக்கு. அதனால ஆகமப்படி அனந்த சரஸ் குளத்துலயே அத்திவரதரை வச்சிடுவோம். இல்லேன்னா இயற்கை சீற்றங்களும், ஆட்சி மாற்றங்களும் நடக்குறது உறுதியாயிடும்’ என்று சொல்லியிருக்கிறார் பட்டாச்சாரியார்.
இதைக் கேட்டதும் முதல்வர் எடப்பாடி உடனடியாக கலெக்டர் பொன்னையாவிடம், ‘இதுக்கு மேல மறுபேச்சே வேணாம். அவங்க என்ன சொல்றாங்களோ அதைக் கேளுங்க’ என்று சொல்லிவிட்டார். அதற்குப் பின்னரே கலெக்டர் பொன்னையா, ‘அத்திவரதர் மீண்டும் குளத்துக்குள் வைக்கப்படுவார். இதில் மாற்றமே இல்லை’ என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்”என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை: