வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

BBC : இந்தியாவுக்கு பாதுகாப்புப்படைத் தலைவர் அறிவிப்பு: அடுத்து என்ன?

விமானப்படைத் தலைவர் புன்னகைத்தார். கடற்படை தலைவர்
தலையசைத்தார். தரைப்படைத் தலைவர் ஏதும் செய்யாமல் அப்படியே அமர்ந்திருந்தார். செங்கோட்டையில் பிரதமர் மோதி இந்திய பாதுகாப்புத் துறை தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியிட்ட போது, முப்படையின் தளபதிகள் கொடுத்த எதிர்வினையாகும்.
பாதுகாப்புப் படைத்தலைவர் என்று ஒருவர் நியமிக்கபடுவார் என்ற மோதியின் அறிவிப்புதான் அது.
நவீன காலத்திற்கு ஏற்றாற்போல் எடுக்கப்பட்ட நடவடிக்கை இது என்று கூறிய மோதி, "பாதுகாப்புப் படைத்தலைவர் என்பவர் முப்படைகளுக்கு தலைவராக விளங்குவதோடு, பாதுகாப்பு சீர்த்திருத்தங்களையும் மேற்கொள்வார்" என்று தெரிவித்தார். பாதுகாப்புப் படைத்தலைவர் என்றால் என்ன? தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படையின் தலைவர்களுக்கு மேல் அதிகாரம் படைத்தவராக இருப்பதோடு, அரசாங்கத்திற்கு பாதுகாப்பு குறித்து ஆலோசனை வழங்குபவராகவும் இவர் இருப்பார்.

பொதுவாக மூத்த ஐஏஎஸ் அதிகாரியாக இருக்கும் பாதுகாப்புத்துறை செயலாளர், அதைத்தானே செய்கிறார் என்று பலரும் இங்கு கேள்வி எழுப்பலாம்.
இல்லை என்பதே அதற்கு பதில்.
பாதுகாப்புப்படைத் தலைவரை நியமிப்பது, அவரது செயல்பாடுகள், அவரது பொறுப்புகள் என்ன என்பது குறித்த தகவல்களில் தெளிவு இல்லை என்றாலும், முப்படைகளில் ஏதேனும் ஒரு படையில் பணியாற்றும் மூத்த அதிகாரிக்கே இந்த பதவி கொடுக்கப்படும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மோதியின் இந்த அறிவிப்பு வியக்கத்தக்கதா? இதற்கு முன் இருந்த அரசாங்கங்களும், இதுகுறித்து திட்டமிட்டிருந்தாலும், இதனை செயல்படுத்த முடிந்ததில்லை.
சொல்லப்போனால் அனைத்து அதிகாரங்களும் உள்ள பாதுகாப்பு ஆலோசகர் என்ற ஒரு பதவியை உருவாக்குவது என்பது கார்கில் போருக்கு பிறகான விவாதங்களில் தலைத்தூக்கியது.
மறைந்த முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கரும் இதற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
நேரடியோகவோ மறைமுகமாகவோ இதுகுறித்து பிரதமர் மோதி பல்வேறு தருணங்களில் குறிப்பிட்டிருக்கிறார்.
தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படைக்கு தனித்தனி தலைவர்கள் இருக்கிறார்கள். முப்படைகளும் சேர்ந்து இருக்கும் என்றாலும், அவர்களின் செயல்பாடுகளை எல்லாம் தனித்தனி தலைமையகங்கள்தான் மேற்பார்வையிடும்.

பாதுகாப்புப்படைத் தலைவர் பதவி என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்?

கார்கிலுக்கு பின் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த பாதுகாப்பு ஊழியர்கள் என்ற அமைப்பின் தலைவராக இருந்து ஓய்வு பெற்ற லெஃப்டினன்ட் ஜெனரல் அனில் செய்த் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். e>அவர் கூறுகையில், "தற்போது ஒவ்வொரு துறையும் தங்களது தனிப்பட்ட திறனை மேம்படுத்த, நிதிகளை எதிர்பார்க்கும். பாதுகாப்புப்படைத் தலைவர் இருப்பது, ஒரே இடத்தில் மொத்த திறனையும் மேம்படுத்துவது. இதற்கு முன்பு, ராணுவத்தை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏதேனும் ஏற்பட்டால், ஒவ்வொரு துறையும் தனித்தனியே ஒரு திட்டத்தோடு வருவார்கள். மொத்தமாக மூன்று திட்டங்கள் இருக்கும். தற்போது இத்தலைவர் பதவியை உருவாக்குவதால் இவரே அதனை நிர்வகிப்பார். ஆகவே, குறைந்த ஆதாரங்களுடன் தேவையானவற்றை அடைய முடியும்" என்று தெரிவித்தார்.

அடுத்து என்ன?

தற்போது தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படை தலைவர்களாக இருப்பதை போன்று நான்கு நட்சத்தர தரைவரிசை இருப்பவர் பாதுகாப்புப் படைத்தலைவர் ஆக்கப்படுவாரா? அல்லது ஐந்து நட்சத்திர தரைவரிசை இருப்பவர் நியமிக்கப்படுவாரா?
தற்போதைய நிலையில் பல கேள்விகளுக்கு பதில் இல்லை.
"விரைவில் இதற்கு பின்னால் இருக்கும் விஷயம் வெளிவரும்" என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத விமானப்படையின் முன்னாள் தலைவர் ஒருவர்.
"தற்போதைய பாதுகாப்பு செயலர், பாதுகாப்புப்படைகளின் தலைவருக்கு கீழ் செயல்பட வேண்டும். பாதுகாப்புப்படைத் தலைவருக்கே உயர்ந்த அதிகாரம் வழங்கப்பட வேண்டும். முக்கிய நியமனங்கள் மற்றும் மூத்த அதிகாரிகளின் செயல்பாட்டு அறிக்கைகள் குறித்தும் இவர் முடிவெடுக்கும் நிலை இருக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்
"சொல்வதற்கு வருத்தமாக இருக்கிறது. இங்கு அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கான போர் நடக்கிறது. இந்தப் பதவி உருவாக்கப்பட்டால், பலரும் தங்களின் அதிகாரங்களை இழக்க நேரலாம். பாதுகாப்புப்படைத் தலைவரின் அதிகாரம் நீர்த்துப் போகாமல் பார்த்துக் கொள்வது அரசியல் வர்கத்தின் பொறுப்பு" என்றும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: