வியாழன், 15 ஆகஸ்ட், 2019

ஓவைசி.எம்பி ரஜினிக்கு : இன்னொரு மகாபாரதத்தைப் பார்க்க விரும்புகிறீர்களா?’ வீடியோ


ஓவைசிரஜினிகாந்த்
காஷ்மீர்விகடன் -சத்யா கோபாலன் : காஷ்மீர் விவகாரம் தொடர்பாக நடிகர் ரஜினி பேசியுள்ள கருத்து சர்ச்சையாகியுள்ள நிலையில் ஹைதரபாத் எம்.பி-யும் ரஜினியின் கருத்தை விமர்சித்துள்ளார். ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் நடைமுறையிலிருந்த சிறப்புச் சட்டப் பிரிவு 370, 35A சமீபத்தில் நீக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் உள்ள தலைவர்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தனர். இதற்கிடையில், நேற்று முன்தினம் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், காஷ்மீர் விவகாரம் பற்றிப் பேசியுள்ளது தற்போது சர்ச்சையாகியுள்ளது. “

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இங்கு வந்திருக்கிறார். மிஷன் காஷ்மீரின் வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். நீங்கள் அதைச் சாத்தியப்படுத்திய விதத்துக்கு ஹேட்ஸ் ஆஃப். குறிப்பாக, நாடாளுமன்றத்தில் நீங்கள் ஆற்றிய உரை மிக அற்புதமாக இருந்தது. இப்போது அமித் ஷா யாரென்று அனைவருக்கும் தெரிந்திருக்கும். மோடியும் அமித் ஷாவும் அர்ஜுனன் கிருஷ்ணன் போன்றவர்கள். இதில் யார் கிருஷ்ணன்… யார் அர்ஜுனன் என்பது நமக்குத் தெரியாது. இது அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரியும்” எனக் குறிப்பிட்டிருந்தார் ரஜினி.





இவரின் கருத்துக்கு கனிமொழி, திருமாவளவன் போன்ற பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், ரஜினி கருத்து பற்றிப் பேசியுள்ள ஹைதரபாத்தைச் சேர்ந்த ஏ.ஐ.எம்.எல்.எம் (All India Majlis-e-Ittehadul Muslimeen) தலைவரும் எம்.பி-யுமான ஒவைசி, “370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்கு, தமிழகத்தைச் சேர்ந்த நடிகர், பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவைக் கிருஷ்ணன், அர்ஜுனன் எனக் கூறுகிறார். அப்படியானால் இந்த சூழ்நிலையைப் பொறுத்தவரைப் பாண்டவர்கள் யார்? கௌரவர்கள் யார்? நம் நாட்டுக்கு மற்றுமொரு மகாபாரதம் வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.



ஓவைசி
மேலும், “மத்திய அரசுக்கு காஷ்மீரில் உள்ள மக்கள் மீது எந்தப் பாசமும் இல்லை, அவர்களுக்கு காஷ்மீர் மண்ணின் மீது மட்டும்தான் பாசம். அவர்கள் அதிகாரத்தை விரும்புகிறார்கள் நீதியை விரும்பவில்லை. அரசு மீண்டும் தங்கள் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளவே விரும்புகிறதே தவிர யாரும் மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கவில்லை என்பதை நான் அவர்களுக்கு நினைவுபடுத்துகிறேன்” என அரசைக் கடுமையாக விமர்சித்தும் பேசியுள்ளார் ஓவைசி.

 vikatan.com

கருத்துகள் இல்லை: