புதன், 14 ஆகஸ்ட், 2019

சமுக ஆர்வலர் கொலை! திருநாவுக்கரசு(வயது 55) கொலை வழக்காக பதிவு செய்ய கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

Murugan Kanna : · சமூக செயற்பாட்டாளர்கள் உயிருக்கு பாதுகப்பில்லாத
தமிழகம் சிவகங்கை மாவட்டம் கல்லல் கிராமத்தை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் திருநாவுக்கரசு (56) போக்குவரத்து தொழிலாளியாக வாழ்க்கையை துவக்கியவர். திராவிட இயக்கத் கருத்தியலை ஏற்றுக் கொண்டவர் . மணல் கொள்ளைக்கு எதிராக தொடர்ந்து போராடி வருபவர். நேற்று அதிகாலை திருநாவுக்கரசு வீட்டிற்கு கல்லல் காவல்துறையினர் வந்து மணல் கொள்ளை எதிராக கொடுத்த மனுவை திரும்பப் பெற மாட்டாயா ? என்று வந்து அச்சுறுத்தி மிரட்டி சென்ற நிலையில் திருநாவுக்கரசு மதியம் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பொழுது இரண்டு கண்களையும் பிடிங்கி எடுக்கப்பட்டு ,கை கால்கள் எழும்பு முறிக்கப்பட்டும் , உடைகள் முழுவதும் களையப்பட்டும் நிர்வாண கோலத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினர் திருநாவுக்கரசை அவரது வீட்டில் வைத்து மிரட்டிய நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது கொலைக்கும் காவல் துறைக்கும் தொடர்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.
சமூக செயல்பாட்டாளர்களின் தொடர் மரணம்.. கொல்லப்பட்ட தோழர்.திருநாவுக்கரசர் பெரியார் சிந்தனையாளர் .. திராவிடர் கழகத்தில் பணியாற்றியவர் என்று செய்தி வருகிறது தொடர் கொலைகளை வேடிக்கை பார்க்கிறது காவல் துறையும் நீதித்துறையும் அரசும்..
dailythanthi.com : காரைக்குடி அருகே சமூக ஆர்வலர் மர்ம சாவு: கொலை வழக்காக பதிவு செய்யக்கோரி உறவினர்கள் மறியல்"
 காரைக்குடி அருகே சமூக ஆர்வலர் மர்மமான முறையில் மரணமடைந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்யக்கோரி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சிவகங்கை, காரைக்குடி அருகே கல்லல் பகுதியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு(வயது 55). இவர் சமூக ஆர்வலராக இருந்து வந்தார்.
இந்தநிலையில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லல்-காரைக்குடி
சாலையில் உள்ள மணிமுத்தாறு பாலம் பகுதியில் மர்மமான முறையில் காயங்களுடன் இறந்துகிடந்தார்.

இதையடுத்து அவரது உடலை போலீசார் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது அவருடைய உறவினர்கள் உடலை பரிசோதனை செய்யும் போது வீடியோ பதிவாக எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். ஆனால் அதற்கு முன்னதாகவே திருநாவுக்கரசின் உடல் பரிசோதனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் திருநாவுக்கரசின் மரணம் குறித்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்யக்கோரியும், இதுதொடர்பாக விசாரணை நடத்தி தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் அவரது உறவினர்கள் நேற்று சிவகங்கை-மானாமதுரை சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் திருமொழி, சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பாலையா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் வீரபாண்டி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மறியல் குறித்து தகவல் அறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மங்களேசுவரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன், சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித், துணை தாசில்தார் சுந்தரி ஆகியோர் அங்கு வந்து மறியிலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன்பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
.
dinakaran.com : சிவகங்கை, ஆக. 14:  சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கல்லல் தமிழர் தெருவை சேர்ந்தவர் திருநாவுக்கரசு(56). இவர் நேற்று முன்தினம் கல்லலில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் மணிமுத்தாறு ஆற்றுப்பாலம் அடியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவரின் கழுத்து மற்றும் கண்ணில் காயங்கள் இருந்தன. உடலை கைப்பற்றிய கல்லல் போலீசார் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று திருநாவுக்கரசு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் கொலை வழக்கு பதிவு செய்யாமல் போலீசார் மறைப்பதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்து அவரின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்தனர்.
கொலை வழக்கு மற்றும் வன்கொடுமை வழக்கு பதிவு செய்ய வேண்டும். மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் வீரபாண்டி, நிர்வாகிகள் கருப்புச்சாமி, மதி, இ.கம்யூனிஸ்ட் ஒக்றிய செயலாளர் சந்திரன், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர்கள் சங்குஉதயக்குமார், திருமொழி மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மானாமதுரை சாலையில் சுமார் 40 நிமிடம் மறியலில் ஈடுபட்ட அவர்களிடம் ஏஎஸ்பி மங்களேஸ்வரன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. பின்னர் இதே கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர், எஸ்பியிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. தொடர்ந்து உடலை பெற மறுத்து வருவதால் பதற்றம் நீடிக்கிறது

கருத்துகள் இல்லை: