புதன், 14 ஆகஸ்ட், 2019

அதிமுக பாஜக காதலுக்கு வேட்டுவைத்த வேலூர் தேர்தல்

வேலூர் ரிசல்ட்: அதிமுக - பாஜக மோதல்!மின்னம்பலம் : வேலூர் தேர்தலில் தோற்றதற்கு பாஜக கொண்டுவந்த மசோதாக்கள்தான் காரணம் என்று ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
வேலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார். அவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 4,85,340. அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 4,77,199 வாக்குகள் பெற்றார். வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகளில் திமுகவுக்கு அதிகமான வாக்குகள் பதிவானதால்தான் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார்.
இதுதொடர்பாக தேர்தல் நடந்த 5ஆம் தேதி நாம் டிஜிட்டல் திண்ணையில் வேலூரில் எதிரொலித்த காஷ்மீர் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதில், தேர்தல் அன்று காஷ்மீர் விவகாரம் வேலூரிலுள்ள இஸ்லாமியர்களுக்குத் தெரியவந்ததும் சாரைசாரையாகச் சென்று வாக்களிக்கத் தொடங்கிவிட்டனர் என்று குறிப்பிட்டிருந்தோம்.
மேலும், தேர்தல் தோல்வி குறித்து எடப்பாடியின் ரியாக்‌ஷன் தொடர்பாக வெளியிட்ட செய்தியில், “முத்தலாக் மசோதாவை ஆதரிச்சு பன்னீர் மகன் பாதி முஸ்லிம் ஓட்டு கிடைக்காம பண்ணிட்டாரு. எலெக்‌ஷன் அன்னிக்கு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை கேன்சல் பண்ணி, அத ரெண்டா பிரிச்சி மீதி ஓட்டை அமித் ஷா காலி பண்ணிட்டாரு” என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருந்ததாகக் குறிப்பிட்டிருந்தோம்.

இந்தச் சூழலில் தனது தோல்விக்கான காரணம் 370ஆவது சட்டப் பிரிவு நீக்கமும், முத்தலாக் சட்டமும்தான் என்று கூறியிருக்கிறார் ஏ.சி.சண்முகம்.
வேலூரில் நேற்று (ஆகஸ்ட் 13) செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வேலூர் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக என்ஐஏ சட்டத்திருத்த மசோதா வந்தது. அதற்கு நான்கு நாட்கள் முன்பாக முத்தலாக் சட்டம் வந்தது. காஷ்மீரின் 370ஆவது சட்டப் பிரிவை நீக்கும் மசோதாவும் தேர்தல் அன்று கொண்டுவரப்பட்டது. தேர்தல் அன்று 4 மணி வரையிலும் சிறுபான்மையின மக்கள் வாக்களிக்கவில்லை. அவர்கள் தேர்தலைப் புறக்கணிப்பதாகவே இருந்தனர். ஆனால், அதன் பிறகு சில தலைவர்கள் களமிறங்கி அவர்களை வாக்களிக்க வைத்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “இஸ்லாமிய மக்கள்தான் திமுகவுக்குக் கைகொடுத்திருக்கிறார்கள். வாணியம்பாடியில் 22,000 வாக்குகள் திமுகவுக்குச் சென்றது. அதுபோலவே ஆம்பூர் தொகுதியில் ஒவ்வொரு பகுதியிலும் 300 வாக்குகள் வரை அதிகம் பெற்றோம். ஆனால், குறிப்பிட்ட ஆறு வார்டுகளில் மட்டும் திமுக 30,000 வாக்குகள் பெற்றது. இந்த இரண்டும் திமுகவின் வெற்றிக்கு வலுவாக இருந்தது. இல்லையெனில் 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருப்பார்கள்” என்றும் விளக்கினார். அதாவது தனது தோல்விக்குக் காரணம் பாஜகதான் என்பதை அவர் இவ்வாறாகச் சொல்லியிருந்தார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இதுகுறித்த கேள்விக்குப் பதிலளித்த தமிழிசை, “ஏ.சி.சண்முகம் ஏன் அவ்வாறு சொல்கிறார் என்று தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை மக்கள் எங்களை ஆதரிக்கிறார்கள். 370ஆவது பிரிவை நீக்கியதற்காக அந்தப் பகுதி மக்கள்கூட வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆகவே ஏ.சி.சண்முகம் சொல்வது தவறு. 370 நீக்கம் ஏ.சி.சண்முகத்தின் வெற்றிக்கான வாக்குகளை அதிகப்படுத்தி தந்திருக்கும்” என்று குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை: