சனி, 9 மார்ச், 2019

கலைஞரோடு ஊடகவியலாளர்கள் ... ஒரு நிருபரின் நேரடி அனுபவங்கள்

LR Jagadheesan : அது ஒரு கனாக்காலம். யாரையும் எளிதில் அணுக முடிந்த,
யாரிடமும் எதையும் கேட்க முடிந்த, எல்லாவற்றையும் எழுத்தால் மாற்ற முடியும் என்கிற நம்பிக்கை நிரம்பியிருந்த காலம்.
செய்தியாளருக்கான தமிழக அரசின் இலவச பேருந்து பாஸில் பல்லவனில் பயணித்த; செய்தியாளர் சந்திப்பு முடிந்தபின் அருகில் இருக்கும் டீக்கடையில் அரட்டை அடித்தபடி அரசியலையும் இதழியலையும் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் துடிப்பும் மிக்க மாணவர்களாக செய்திப்பசியும் வயிற்றுப்பசியும் சேர்ந்து அலைக்கழித்த காலமது.
எங்களுக்கு கைபிடித்து கற்றுக்கொடுக்க இதழியலிலும் அரசியலிலும் நல்ல ஆசிரியர்கள் வாய்த்தது எங்களுக்கு வாய்த்த வரம். 
நாங்கள் அப்படியான ஆசான்களாக இல்லாததும் அரசியலிலும் அத்தகைய ஆளுமைகள் இல்லாததும் இந்த தலைமுறை இளம் செய்தியாளர்கள் சந்திக்கும் சாபம்.
இந்த படங்களில் இருக்கும் சிலர் இன்று உயிரோடில்லை. பலர் பத்திரிக்கைத்துறையிலேயே இல்லை. ஆனால் அவர்களோடு சேர்ந்தலைந்த நினைவுகள், மனம் விட்டு சிரித்த சிரிப்புகள் மல்லுக்கட்டிய தருணங்கள் இறுதிவரை உயிர்ப்போடிருக்கும் இனிய நினைவுகளாக.
நினைத்தமாத்திரத்தில் கண்களை கசியச்செய்யும் எத்தனை எத்தனை நினைவுகள். சம்பவங்கள். சண்டைகள். சமாதானங்கள்.

சரித்திர நிகழ்வுகளின் நேரடி சாட்சியமாக இருக்க நேர்வது செய்தியாளர்களின் தனிச்சிறப்பு தான். ஆனால் அந்த சரித்திரத்தின் பின்னிருக்கும் சொல்லப்படாத செய்திகள் பேசப்படாத அநியாயங்களுக்கும் அவனே சாட்சியாவது வரமல்ல. சாபம்.
இது post-truth era —பொய்களின் காலம். உண்மைக்கு இங்கே பெரிய இடமுமில்லை. தேவையும் இல்லை. பொய்களின் போதையே போதுமானது.

கருத்துகள் இல்லை: