வியாழன், 7 மார்ச், 2019

நான் ராஜ்யசபாவுக்கு போக வேண்டுமா?: வைகோ

நான் ராஜ்யசபாவுக்கு போக வேண்டுமா?: வைகோமின்னம்பலம் : திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு மக்களவைத் தொகுதியும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் என்று பங்கீடு செய்யப்பட்ட பிறகு மார்ச் 7 ஆம் தேதி மதிமுகவின் பொதுக்குழு நடந்தது.
கடந்த மார்ச் 6 ஆம் தேதி ஈரோட்டில் மதிமுக நடந்த நிலையில் இந்த ஆண்டு பொதுக்குழுவை தேர்தலை முன்னிட்டு சென்னையிலேயே நடத்துவது என முடிவானது.
மதிமுகவின் 27-ஆவது பொதுக்குழுக் கூட்டம் அக்கட்சியின் பொருளாளர் திருப்பூர் துரைசாமி தலைமையில் இன்று (மார்ச் 6) சென்னை அண்ணா நகரிலுள்ள விஜயஸ்ரீ மஹாலில் கூடியது. முதலில் மதிமுக தலைவர்கள் எழுதிய நூல்களின் வெளியிட்டு விழா நடைபெற்றது. அதன்பின்பு 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொதுக்குழுவில் சிலரே பேசினாலும் அதில் நெல்லை மாவட்டச் செயலாளர் தி.மு.ராஜேந்திரன் பேசும்போது,

“தலைவர் ஒரு மக்களவை, ஒரு ராஜ்யசபா வாங்கிட்டு வந்திருக்காரேனு யாரும் வருத்தப்படாதீங்க. ஏன்னா தலைவர் தேர்தல்ல போட்டி போட்டா தலைவர எதிர்த்து நிக்கிறதுக்கு பல பேர் தயாரா இருக்காங்க. என்ன காரணம்னா ஸ்டெர்லைட், அதானினு ஏகப்பட்ட தொழிலதிபர்கள் வைகோவை தோற்கடிக்கிறதுக்காக அவரை எதிர்த்து நிக்கிறவங்களை கவனிப்பாங்க. இதுக்காகவே பலரும் தலைவருக்கு எதிரா போட்டி போட தயாரா இருக்காங்க. அந்த சூழ்ச்சி வலையை அறுத்துக் கொண்டு வைகோ வெற்றி பெற்றிருக்கிறார் இதை எல்லார்கிட்டையும் போய் சொல்லுங்க.
சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும். வைகோதான் மதிமுகவின் சுவர். அவர் நன்றாக இருந்தால்தான் நாம் அரசியல் செய்ய முடியும். கட்சியை வளர்க்க முடியும். எனவே இந்த ராஜதந்திர முடிவை நாம் அனைவருக்கும் எடுத்துச் சொல்லுவோம்” என்றார்.
இன்னும் சிலர் பேசியபிறகு வைகோ பேசினார். சுமார் ஒருமணி நேரம் பேசிய வைகோ, மதிமுகவின் ஆரம்பகட்டம், இந்தத் தேர்தல் கூட்டணி, ஸ்டாலின் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கை குறித்தெல்லாம் விரிவாகப் பேசினார்.
“எல்லாரும் நன்றாக வேலை செய்ய வேண்டும். உங்க கட்சி நிர்வாகிகள் வந்து மற்ற கூட்டணிக் கட்சியினரிடம் பணம் கேட்டார்கள் என்ற செய்தி என் காதுக்கு வரக் கூடாது. இதுவரைக்கும் அந்த நல்ல பெயரை எனக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறீர்கள். சூரியனில் நிற்கலாம் என்று என்னிடம் சொன்னார்கள். அதுபற்றி முடிவெடுத்துச் சொல்கிறோம் என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறேன்” என்றவர் ஒரு கட்டத்தில்,
“இந்த லோக் சபா, ராஜ்யசபா எதுலயுமே நிக்கவேணாம்னு கூட நினைக்கிறேன். பெரியார் மாதிரி சமூக தொண்டு செஞ்சிட்டு போயிடலாமானு கூட அப்பப்ப தோணுது” என்று வைகோ சொன்னவுடன் மேடையில் இருந்தவர்கள் அதிர்ச்சி ஆகிவிட்டார்கள்.
கீழே இருந்த பொதுக்குழு உறுப்பினர்களும், “அண்ணாச்சி என்ன சொல்றீங்க. நீங்க பார்லிமென்ட்டுக்கு போயே ஆகணும்” என்று குரல்களை எழுப்பினர். ’பெரியார் மாதிரி வேணாம் அண்ணாச்சி.... அண்ணா மாதிரி வாங்க’ என ஒரு பொதுக்குழு உறுப்பினர் சத்தமாக குரல் எழுப்பினார். சில நிமிட சலசலப்புக்குப் பின் வைகோ அனைவரையும் அமரவைத்து, உங்களுக்குக் கட்டுப்படுகிறேன் என்று கூறி ஒப்புக் கொண்டிருக்கிறார்.
பொதுக்குழு முடிந்த பின் சில மாசெக்கள், “தலைவர் ராஜ்யசபா போறதுங்கறது ஒன்னரை மாசம் முன்னே பேசி முடிவு செய்யப்பட்ட விஷயம். ஆனா இவர் ஏன் இப்ப திடீர்னு இப்படி சொல்றாரு. தன்னை சந்திக்கிற நெருக்கமான பத்திரிகையாளர்களிடம் கூட, பெரியார் போல இயக்கம் நடத்திக்கிட்டு போயிடலாமானு தோணுது என்று இந்த தேர்தல் நடைமுறைகளைக் கண்டு நொந்து போய் சொல்லியிருக்கிறார். இப்ப பொதுக்குழுவுலயும் இப்படி சொல்லியிருக்காரு. ஒருவேளை நாம என்ன நினைக்கிறோம்னு டெஸ்ட் பண்ணிப் பாத்திருப்பாரோ” என்று பேசிக்கொண்டார்கள்.

கருத்துகள் இல்லை: