ஞாயிறு, 3 மார்ச், 2019

செங்குந்த முதலியார்களும் தேர்தலில் குதிக்க முடிவு ...

தேர்தல் களம் காணும் செங்குந்த முதலியார்கள்!மின்னம்பலம் : தேர்தல் நேரம் என்றாலே சாதி அமைப்புகள் தங்களின் பலத்தைக் காட்டுவதும், அரசியல் கட்சிகளுக்குத் தங்களது கோரிக்கைக் குரல்களை எச்சரிக்கை தொனியில் முன்வைப்பதும் வழக்கம்தான்.
அந்த வகையில் ஒருபடி மேலே போய் தங்கள் கோரிக்கைகளை எந்த அரசியல் கட்சியும் பொருட்படுத்தாததால், சுயேச்சையாக பத்துக்கும் மேற்பட்ட தொகுதிகளில் களமிறங்கப் போகிறோம் என்று முடிவெடுத்திருக்கிறார்கள் தமிழ்நாடு செங்குந்தர் (முதலியார்) அரசியல் அதிகாரம் என்ற அமைப்பினர்.

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம் என்ற அமைப்பிலிருந்து தேர்தலில் களமிறங்குவதற்காகப் புறப்பட்டிருக்கும் இந்த, ‘செங்குந்தர் அரசியல் அதிகாரம்’ அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளரான வழக்கறிஞர் அரியலூர் எஸ்.எஸ்.ஆர். சரவணவேலிடம் இது பற்றிப் பேசினோம்.
“ராஜராஜ சோழனின் படையிலே இருந்த வீர செங்குந்தர்களின் வழி வந்தவர்கள் நாங்கள். எங்களுக்கான தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம் 80 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது. மூத்தோர்கள், முன்னோடிகள் நிறைந்த அமைந்த சங்கம் எங்கள் உரிமைகளுக்காகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
எங்கள் சமுதாயத்தின் முக்கிய தொழிலான நெசவுத் தொழில் எந்த ஆட்சியானாலும் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. தன் மானம் காத்து பிறர் மானமும் காக்கும் புனிதத் தொழிலாம் எங்கள் நெசவுத் தொழில் நலிந்துகொண்டே வருகிறது. கஞ்சித் தொட்டி திறந்து எம் சமுதாய மக்கள் உணவுக்கே அல்லாடும் நிலைமைக்குக் கொண்டுபோய்விட்டது ஆட்சியாளர்களின் தவறான முடிவுகள்” என்கிற சரவணவேல், அதன் விளைவாக எடுத்திருக்கும் முடிவு பற்றியும் விளக்கினார்.
“எங்கள் சமுதாயத்தின் மீதும், எங்கள் தொழில் மீதும் யாரும் கவனம் செலுத்தாத நிலையில் , இனி நாங்களே எங்களை முன்னிறுத்திக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் தீர்மானத்தோடுதான், எங்கள் மக்களை முன்னிறுத்தி தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறோம். செங்குந்தர் அரசியல் அதிகாரம் என்ற ஓர் இயக்கத்தை முன்னெடுத்து நாங்கள் அடர்த்தியாக இருக்கும் 12 தொகுதிகளில் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட இருக்கிறோம்.
தமிழகம் முழுவதும் எம் மக்கள் இருந்தாலும் ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கோயமுத்தூர், வேலூர், அரக்கோணம், ஆரணி, தர்மபுரி, கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி ஆகிய தொகுதிகளில் நாங்கள் கணிசமான வாக்குகளைக் கொண்டுள்ளோம். எனவே இத்தொகுதிகளில் நாங்கள் போட்டியிட இருக்கிறோம்” என்றார் சரவணவேல்.
“திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் உங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்களே, அவர்களிடம் உங்கள் கோரிக்கைகளை முன்வைத்தீர்களா?” என்று கேட்டோம்.
“அதிமுகவில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், அமமுகவில் வெற்றிவேல், திமுகவில் அதன் தலைவர் ஸ்டாலின் மாப்பிள்ளை சபரீசன் என்று பல கட்சிகளிலும் பலம் பொருந்திய இடத்தில் எங்கள் சமுதாயத்தினர் இருந்தும் அவர்களால் எங்கள் சமுதாயத்துக்கு எந்த முன்னேற்றமும் இல்லை. அதனால்தான் மக்களை முன்னிறுத்தி எங்கள் நெசவுத் தொழிலுக்கு நீதி கேட்கும் முயற்சியாக இந்தத் தேர்தல் களத்தைச் சந்திக்கிறோம்” என்று முடித்தார் சரவணவேல்.

கருத்துகள் இல்லை: