சனி, 23 செப்டம்பர், 2017

மாணவர்களுக்குத் துரோகம்: நீதிபதி சீற்றம்!

மாணவர்களுக்குத் துரோகம்: நீதிபதி சீற்றம்!
மின்னம்பலம் : உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் முன்பு நேற்று 22.9.2017 நீட் தேர்வு, சிபிஎஸ்சி தேர்வு மற்றும் ஜியோ - ஜாக்டோ தொடர்புடைய வழக்குகள் விசாரணைக்கு வந்தன. வழக்கு விசாரணையின்போது அறச்சீற்றத்தோடு பல கேள்விகளை முன்வைத்தார். அதில் சில கேள்விகள் தமிழக அரசை நோக்கியும், சில கேள்விகள் அரசியல் கட்சிகளை நோக்கியும், சில கேள்விகள் சமூகத்தை நோக்கியும் சீற்றத்தோடு புறப்பட்டது.
நீதிபதி கிருபாகரனின் கேள்விகளில் சில பகுதிகள் இதோ:
நீட் தேர்வில் விலக்கு கிடைக்கும் என்று பேசிப் பேசியே ஓர் உயிரை இழந்துவிட்டோம். மாணவர்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைக்கப்பட்டது. இனிமேல், நீட் தேர்வில் விலக்குக் கிடைக்கும் வரை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் எந்தப் பேட்டியும் கொடுக்க வேண்டாம். ஆசை வார்த்தைகளை மாணவர்கள் மனதில் விதைக்க வேண்டாம். நீட் தேர்வில் வெற்றி பெற முடியாத மாணவர்களை அடுத்த ஆண்டு தேர்வுக்கு தயார்படுத்தும் விதமாக பயற்சி மையங்கள் அமைக்கப்பட்டனவா?
இதற்காக தமிழக அரசு என்னென்ன முயற்சிகளை மேற்கொண்டுள்ளது? மாணவர்களுக்கு கவுன்சலிங் வழங்கும் நிபுணர் குழுவை அமைப்பதற்கு அரசுக்கு ஒரு மணி நேரம்கூட போதுமே... அது ஏன் அமைக்கப்படவில்லை? நாம் விளையாட வேண்டிய வயதில் உள்ள குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புகிறோம். அவர்களின் குழந்தைப் பருவத்தை வீணடிக்கிறோம். பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற குறுகிய நோக்கில்தான் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புகிறோம். ஆடிப்பாட வேண்டிய குழந்தைகளை மௌனியாக வைத்திருக்கிறோம். ஏன் இந்த நிலை?
ஜாக்டோ - ஜியோ வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவளித்த கட்சிகள், அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படுவதற்கு குரல் கொடுக்காதது ஏன்? நீதிமன்ற உத்தரவை சமூக வலைதளங்களில் விமர்சித்தவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? போராட்டத்தின்போது மாணவர்களை வீட்டுக்கு அனுப்பிய ஆசிரியர்கள்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் நீதித்துறையை விமர்சிப்பது சரியல்ல.
இவ்வாறு அவர் கண்டனம் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், “சமூக வலைதளங்களில் நீதிமன்றத்தை விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார். இதன்படி, “அக்டோபர் 4ஆம் தேதி தமிழக அரசு எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை: