புதன், 20 செப்டம்பர், 2017

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு கடந்து வந்த பாதை! வழக்கின் தீர்ப்பு அக்டோபர் 25-ந் தேதி

tamiloneindia Lakshmi Priya": : டெல்லி: நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் தீர்ப்பு அக்டோபர் 25-ந் தேதி வழங்கப்படும் என சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார். அக்டோபர் 25-ல் தீர்ப்பு வழங்க முடியாத நிலையில் அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் நீதிபதி ஓபி ஷைனி தெரிவித்துள்ளார். முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கி வழங்கியதில் ரூ.1.70 லட்சம் கோடி முறைகேடு நடந்துள்ளதாக முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி ஆகியோரது மீது குற்றச்சாட்டு எழுந்தது.
டெல்லி சிபிஐ கோர்ட்டில் 6 வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் தீர்ப்பு தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளது.

இந்த வழக்கு கடந்து வந்த பாதை:
  • மே 2007- மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சராக அ.ராசா பொறுப்பேற்பு
  • ஆக. 2007- 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடுக்கான நடைமுறைகள் தொடங்கியது
  • செப்.25- அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதியாக அக்.1, 2007-ஆம் தேதியை தொலைத்தொடர்பு அமைச்சகம் நிர்ணயித்தது.
  • அக்.1- தொலைத்தொடர்பு துறையில் 46 நிறுவனங்களிடமிருந்து 575 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றன
  • நவ. 2- பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அலைக்கற்றை ஒதுக்கீடு வழங்குவதில் வெளிப்படைத்தன்மை இருப்பதை உறுதி செய்யுமாறு ராசாவுக்கு கடிதம் எழுதினார்
  • ஜன.10, 2008- அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்பதை கடைப்பிடிக்க தொலைத்தொடர்பு துறை திட்டமிட்டது.
  • 2008- ஸ்வான் டெலிகாம், யூனிடெக், டாடா டெலி சர்வீசஸ் ஆகியன தங்கள் பங்குகளின் சில பகுதியை எடிசாலட், டெலிநார் மற்றும் டோகோமோவுக்கு அதிக விலைக்கு விற்றன
  • மே.4, 2009- 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக மத்திய லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்துக்கு (சிவிசி) புகார் கடிதம்
  • 2009- புகாரை சிபிஐ விசாரிக்க சிவிசி உத்தரவிட்டது
  • அக்.21- தொலைத் தொடர்பு துறையில் அதிகாரிகள், நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது.
  • அக்.22- தொலைத் தொடர்பு துறை அலுவலகங்களில் சிபிஐ ரெய்டு
  • நவ.16- நீரா ராடியா மற்றும் இடைத்தரகராக இருந்தவர்களின் தகவல்களை பெற வருமான வரி துறை இயக்ககத்தின் உதவியை சிபிஐ நாடியது.
  • நவ.20- அமைச்சராக இருந்த ராசாவுடன் ராடியாவுக்கு தொடர்பிருந்தது தெரியவந்தது
  • மார்ச் 31, 2010- அலைக்கற்றை ஒதுக்கீட்டு நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என சிஏஜி அறிக்கை
  • மே 6- ஊடகங்கள் மூலம் ராசாவுக்கும் ராடியாவுக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல் பகிரங்கமாக ஒலிப்பரப்பானது
  • ஆக.18, 2010- 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக ராசாவிடம் விசாரணை நடத்த பிரதமர் அனுமதி அளிக்க உத்தரவிடக் கோரி சு.சுவாமி தொடர்ந்த வழக்கில் அவ்வாறு உத்தரவிட மறுப்பு டெல்லி உயர்நீதிமன்றம்
  • செப்.13, 2010- கடந்த 2008-இல் தொலைத்தொடர்பு அனுமதி வழங்கியதில் ரூ.70 ஆயிரம் கோடி முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட 3 வழக்குகளில் 10 நாள்களுக்குள் அ.ராசா பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
  • செப்.24, 2010- அலைக்கற்றை முறைகேட்டில் தொடர்புடைய அ.ராசாவிடம் விசாரணை நடத்த அனுமதிக்க பிரதமருக்கு உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தை நாடினார் சு.சுவாமி.
  • அக்.2010- முறைகேடு தொடர்பாக சிஏஜி அறிக்கைக்கு விளக்கம் அளிக்கக் கோரி உச்சநீதிமன்றம் கேட்டு கொண்டது
  • நவ.10,2010- 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டால் ரூ.1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு என சிஏஜி அறிக்கை
  • நவ.14-15, 2010- தொலைத்தொடர்பு துறை அமைச்சர் பதவியை அ.ராசா ராஜினாமா செய்தார்
  • பிப்.10, 2011- 2 ஜி முறைகேட்டால் பயணடைந்தவர்களின் வீடுகளை சிபிஐ கண்காணிப்பு வளையத்துக்கு கொண்டு வர சுப்ரீம் கோர்ட் கேட்டு கொண்டது.
  • அ. ராசாவிடம் சிபிஐ காவலில் எடுத்து விசாரணை
  • பிப். 17-18- ஸ்வான் டெலிகாம் நிறுவனத் தலைவர் ஷாகீத் பால்வாவுடன் நீதிமன்றக் காவலில் ராசா திகார் சிறையில் அடைக்கப்பட்டார்
  • பிப்.24- முறைகேடு பணத்தை திமுகவின் கலைஞர் டிவி கைமாற்றும் பணியை எளிதாக்கியது ஷாகீத் பால்வா என டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்தது
  • மார்ச் 14- 2 ஜி வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்படுத்தியது
  • மார்ச் 29- மார்ச் 31-க்குப் பதிலாக ஏப்ரல் 2-இல் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதி. ஆசிப் பால்வா மற்றும் ராஜீவ் அகர்வால் ஆகிய மேலும் இருவர் கைது
  • ஏப்.2- அ.ராசா, சந்தோலியா மற்றும் பெகுரா, கவுதம் தோஷி, ஹரி நாயர், சுரேந்திர பிபாரா, ஷாகீத் பால்வா உள்பட 9 பேர் மீதும், ரிலையன்ஸ், ஸ்வான் டெலிகாம் மற்றும் யூனிடெக் வயர்லெஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் மீதும் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்
  • ஏப்.25- திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி மற்றும் இதர 4 பேர் மீது சிபிஐ 2-ஆவது முறையாக குற்றப்பத்திரிகை தாக்கல்
  • மே 6: கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜர்
  • மே 20: சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு. கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைப்பு
  • அக்.23- குற்றம்சாட்டப்பட்ட 17 பேர் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டன
  • நவ.11- விசாரணை தொடங்கியது
  • நவ.23- நாயர், தோஷி, பிபாரா, சந்திரா மற்றும் கோயங்கா உள்ளிட்ட பெருநிறுவன இயக்குநர்களுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கியது
  • நவ.28- கனிமொழி, குமார், மொராணி, ஆசிப் மற்றும் ராஜீவ் ஆகியோருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது
  • நவ.29- ஷாகீத் பால்வாவுக்கு சிறப்பு நீதிமன்றம் ஜாமீன்
  • டிச.1- சந்தோலியாவுக்கு சிறப்பு நீதிமன்றம் ஜாமீன்
  • பிப். 2, 2012- ராசாவின் பதவிக்காலத்தில் வழங்கப்பட்ட 122 டெலிகாம் அனுமதிகள் ரத்துசெய்யப்பட்டன. 2ஜி வழக்கில் நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்திடம் சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி மறுப்பு. இதை சிறப்பு நீதிமன்றத்தின் முடிவுக்கு நீதிபதிகள் விட்டுவிட்டனர்
  • பிப்.4- ப.சிதம்பரத்தை குற்றவாளியாக சேர்க்க சு.சுவாமி தாக்கல் செய்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
  • பிப். 23- ப.சிதம்பரத்துக்கு எதிராக சு.சுவாமி சுப்ரீம் கோர்ட்டை அணுகினார்.அத்துடன் அவரிடம் விசாரணை நடத்த பொது நலன் வழக்கையும் தாக்கல் செய்தார்
  • மார்ச் 1-2ஜி வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் சட்ட துறை அமைச்சராக இருந்த சல்மான் குர்ஷித் ஆகியோருக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு அனுமதி
  • ஏப்.4- சிதம்பரத்துக்கு எதிரான மனுவின் விசாரணை தொடக்கம்
  • ஆக.24- 2ஜி முறைகேட்டால் ப.சிதம்பரம் பயனடைந்ததற்கான முகாந்திரம் இல்லை என கூறி அவருக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது
  • ஏப். 25, 2014- ராசா மற்றும் கனிமொழி மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல்
  • மே. 5- பிரதமர் மன்மோகன் சிங்கின் இசைவுக்கேற்ப தான் செயல்பட்டதாக ராசா நீதிமன்றத்தில் வாக்குமூலம்
  • ஜூன் 1, 2015- 2ஜி மூலம் கலைஞர் டிவிக்கு ரூ.200 கோடி கிடைத்ததாக அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
  • ஆக. 19- ராசாவுக்கு எதிராக சொத்து குவிப்பு வழக்கை பதிவு செய்தது சிபிஐ
  • நவ.3- தன் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரி கனிமொழி தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
  • ஏப்.19, 2017- இறுதி வாதங்களை நிறைவு செய்தது சிறப்பு நீதிமன்றம்
  • ஜூலை 5- செப்டம்பர் 5-ஆம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி ஷைனி தெரிவித்தார்.
  • ஜூலை 15- இரு தரப்பினரின் எழுத்துப்பூர்வமான விளக்கங்கள் பதிவு
  • செப். 20- அக்டோபர் 25-ந் தேதி இவ்வழக்கில் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி ஓபி ஷைனி அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: