திங்கள், 3 ஏப்ரல், 2017

சாரு நிவேதா : குற்றங்கள் அதிகமாக அதிகமாக கோயில்கள் பெருகிக் கொண்டிருக்கின்றன.

மேற்கத்திய சமூகங்களில் ஓர் ஆன்மிக வெற்றிடம் நிலவுகிறது. அதற்கான காரணிகள் பல. குழந்தைகளை அரசாங்கமே தத்தெடுத்துக் கொண்டு அவர்களுக்கான அனைத்துத் தேவைகளையும் கவனித்துக் கொள்கிறது. அதனால் மூன்றாம் உலக நாடுகளைப் போல் இல்லாமல் இளம் வயதிலிருந்தே எதற்கும் போராட வேண்டிய அவசியம் இல்லாத வாழ்க்கை வாய்த்து விடுகிறது. குளிர், அதிதீவிர குளிர், பனிப்பொழிவு ஆகிய தட்பவெப்பப் பிரச்னையைத் தவிர, வாழ்க்கையில் வேறு ‘த்ரில்’லே இல்லாமல் இருக்கிறது. குடும்பம் என்ற நிறுவனமும் ஆசிய, ஆஃப்ரிக்க நாடுகளைப் போல் இல்லாமல் வலுவிழந்து இருக்கின்றன. பிள்ளைகளை அரசாங்கம் கவனித்துக் கொள்வதால் பெற்றோருக்குப் பிள்ளைகள் மீது எந்த உரிமையும் இருப்பதில்லை. பிள்ளைகளுக்கும் பெற்றோர் மீது எந்தப் பற்றுதலும் இல்லை. அதனால்தான் தகப்பன் தினம், தாயார் தினம் என்றெல்லாம் வைத்துக்கொண்டு அன்றைய தினம் மட்டும் போய் பெற்றோரை நேரில் பார்க்கிறார்கள். 90 வயதான தம்பதிகளை ஐரோப்பிய நகரங்களின் பூங்காக்களில் அதிகம் பார்க்கலாம். சூனியத்தை வெறித்தபடி சிலை போல் அமர்ந்திருப்பார்கள்.

அங்கே நம்மைப் போன்ற உடல்நலப் பிரச்னைகளும் இருப்பதில்லை. புற்றுநோய் மட்டுமே அவர்கள் அறிந்த நோய். நாற்பது வயதிலிருந்தே அவர்கள் ரத்த அழுத்தம், இதய நோய், சர்க்கரை என்று மாத்திரையும் கையுமாக வாழ்வதில்லை. குடிமக்கள் அனைவருக்கும் உணவு, இருப்பிடம் என்ற இரண்டையும் அரசு கொடுத்து விடுகிறது. வேலையே செய்யாமல்கூட ஒருவர் அங்கே அரசு உதவித் தொகையின் மூலம் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து விட முடியும். அந்த அளவுக்கு சமூகப் பாதுகாப்பு இருக்கிறது. அதனால் கடவுளின் தேவை குறைந்து விட்டது. இதை நாம் இந்தியச் சூழலோடு பொருத்திப் பார்ப்போம். 25 ஆண்டுகளுக்கு முன்னால் இப்போது இருப்பதைப் போன்ற அளவுக்குக் கோயில்களில் கூட்டம் இருந்ததில்லை. இப்போது கோயில்களும் அதிகரித்து விட்டன; கூட்டமும் அதிகரித்து விட்டது. இந்த 25 ஆண்டுகளில் மக்களுக்கு பக்தி அதிகரித்து விட்டதா என்ன? இல்லவே இல்லை. வாழ்வின் மீதான பயம் அதிகரித்திருக்கிறது. உதாரணமாக, சில தினங்களுக்கு முன்னால் அஸ்வின் சுந்தர் - நிவேதிதா தம்பதிக்கு நேர்ந்த மரணம். இருவரும் இரவு உணவுக்குப் பிறகு காரில் வீடு திரும்பியிருக்கின்றனர். சாலையில் உள்ள வேகத்தடை காரின் உட்புறத்தில் இடித்து கார் நிலைகுலைந்து மரத்தில் மோதி எரிந்து போனது. அஸ்வின் ஒரு கார் ரேஸ் பந்தய வீரர். அவர் ஓட்டிச்சென்றது உயர் ரக பி.எம்.டபிள்யூ. கார். எதிலாவது மோதினால் காற்றுப் பை நிரம்பி வாகனத்தில் உள்ளவர்களைச் சூழ்ந்துகொண்டு அவர்களுக்கு எந்த ஆபத்தும் நேராமல் பாதுகாக்கும். பாதுகாப்பு காரணமாக காரின் கதவும் திறக்காது. ஆனால், அஸ்வின் தம்பதி விபத்துக்குள்ளானபோது கார் எரிந்து கொண்டிருந்த நிலையில் காரின் கதவைத் திறக்க முயன்று, திறக்க முடியாததால் இருவரும் இறந்து போனார்கள். இந்த துர்மரணத்துக்குக் காரணம், சாலையில் இருந்த வேகத்தடை. மரணத்தை ஏற்படுத்தும் இதுபோன்ற வேகத்தடைகளை நான் வெளிநாடுகள் எங்கேயும் பார்த்ததில்லை. அங்கெல்லாம் சாலைகளில் எத்தனை வேகத்துக்குப் போக வேண்டும் என்ற அறிவிப்புப் பலகை மட்டுமே இருக்கும். இங்கே அப்படி பலகை போட்டால் யாரும் பின்பற்ற மாட்டார்கள்.
ஆரம்பித்த இடத்துக்கு வருவோம். ஏழையாக இருந்தாலும் சரி, பணக்காரராக இருந்தாலும் சரி... இந்தியா போன்ற நாடுகளில் நம் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. பெண்களாக இருந்தால் கேட்கவே வேண்டாம். இதனால்தான் நம் ஊர்க் கோயில்களில் கூட்டம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. குற்றங்கள் அதிகமாக அதிகமாக கோயில்கள் பெருகிக் கொண்டிருக்கின்றன. மேற்கத்திய நாடுகளில் தேவாலயங்கள் வெறும் சுற்றுலாத் தலங்களாக மாறி விட்டன. இரண்டு முறை கிறிஸ்துமஸ் சமயத்தில் ஐரோப்பாவில் இருந்தேன். தேவாலயம் சென்றேன். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு மற்றும் பனிப்பொழிவு ஆகிய காரணங்களால் எல்லோரும் குடித்துவிட்டு உறங்கிக் கொண்டிருந்ததாலோ என்னவோ தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் தினத்தன்று இரண்டு மூன்று பேர் மட்டுமே நின்று கொண்டிருந்தோம். அவர்களும் என்னைப் போல் வெளிநாட்டுக்காரர்கள்.
நிறைவு அல்லது abundance காரணமாக மேற்கத்தியர் எல்லோரையும் தனிமை என்ற பிரச்னை சூழ்கிறது. அதனால் சிலர் போதை அடிமைகளாக மாறுகின்றனர். இத்தகைய சூழலில்தான் அவர்களுக்குத் தேவையான உள் அமைதியைத் தருவதில் இந்திய கார்ப்போரேட் சாமியார்கள் பெரும் ஜித்தர்களாக ஆகி விடுகிறார்கள். இதைத் தவிர ஐரோப்பியத் தனிமையையும் சூனிய உணர்வையும் மீறுவதற்கான ஒரு வழியாக இருப்பது, இசை. அதனால்தான் மேற்கு நாடுகளில் இசைக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் மதம், சினிமா, அரசியல் போல் மேற்கில் வியாபித்திருப்பது இசை என்று சொல்லலாம்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: