வெள்ளி, 7 ஏப்ரல், 2017

மலையாள மொழி கட்டாயம் : கேரள அரசு அதிரடி முடிவு !


கேரளாவில் மலையாள மொழியை அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாயமாக்க அம்மாநில அரசு முடிவுசெய்துள்ளது. கேரளா அரசின் அமைச்சரவைக் கூட்டம் கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 5) நடைபெற்றது. அதில், மாநிலத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மத்திய அரசின் பாடத் திட்டத்தில் இயங்கக்கூடிய சி.பி.எஸ்.இ. மற்றும் ஐ.சி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் மலையாள மொழி கட்டாயமாக்கப்படும். மேலும் அதற்கென சட்டம் இயற்றவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. இந்தப் புதிய சட்டம், மேல்நிலைப்பள்ளி வரை மாணவர்கள் மலையாள மொழியை கட்டாயம் ஒரு பாடமாக படிக்க வழிவகை செய்யும். சில பள்ளிகள் மலையாள மொழியை கட்டாயப் பாடமாக வைத்திருக்காதது, பெரும்பாலான தனியார் பள்ளிகள், பாடத்திட்டத்திலிருந்து மலையாள மொழிப் பாடத்தை நீக்கியதுடன், அம்மொழியில் பேசும் மாணவர்களுக்கு தண்டனை அளித்த சம்பவத்தையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் சாம்பியன் என்ற தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துவந்த மாணவன் தனது தாய்மொழியான மலையாளத்தில் பேசியதற்காக, அந்த வகுப்பு ஆசிரியர் ‘இனி நான் மலையாளம் பேசமாட்டேன்’ என்று, 50 முறை எழுதிவரச் சொல்லி அந்த மாணவருக்கு தண்டனை அளித்தார் என்பது நினைவுகூரத்தக்கது.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: