வெள்ளி, 8 ஜூலை, 2016

திருப்பூரில் 100 ஐ எஸ் பயங்கரவாதிகள்? மே.வங்கத்தில் கைதானவன் வாக்குமூலம்

திருப்பூர்: மேற்கு வங்கத்தில் பிடிபட்ட, ஐ.எஸ்., ஆதரவு பயங்கரவாதி, திருப்பூரிலுள்ள நிறுவனங்களில், 100 பேரை வேலைக்கு அமர்த்தியிருப்பதாக, 'திடுக்' தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முகமது முஸ்ருதீன், 27, திருப்பூர், ஆண்டிபாளையத்தில் மளிகை கடை நடத்தி வந்தான். சமீபத்தில், கோல்கட்டா சென்ற இவனை, மேற்கு வங்க மாநில போலீசார் கைது செய்தனர். ஆவணங்கள் பறிமுதல் : சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.,சுடன் இவனுக்குள்ள தொடர்பை, மேற்கு வங்க போலீசார் உறுதி செய்தனர். இவனிடமிருந்து துப்பாக்கி, ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து, திருப்பூரிலுள்ள அவனது வீடு மற்றும் மளிகை கடையை நேற்று முன்தினம் சோதனையிட்ட புலனாய்வு பிரிவினர், வாள், டைரி, 'லேப் டாப்' மற்றும் சில ஆவணங்களை கைப்பற்றினர். கைதான முஸ்ருதீன், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின், இந்திய பிரிவு பொறுப்பாளருடன் நேரடித் தொடர்பு வைத்திருந்தது குறித்தும் விசாரணை நடத்தினர்.


முகமது முஸ்ருதீனுக்கு, ஐ.எஸ்., பயங்கரவாதிகளுடன் நேரடி தொடர்பு ஏற்பட்டது எப்படி? வெளிநாடுகளில் இருந்து இவனுடன் போனில் பேசியவர்கள் யார் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. சர்வதேச நாடுகளுடன், நேரடி வர்த்தக தொடர்பை கொண்டிருக்கும் திருப்பூர் மாவட்டம், ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் சதித் திட்டத்தில் உள்ளதா, திருப்பூரில் பதுங்கியிருந்ததன் நோக்கம் ஆகியவை குறித்தும், தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரிக்கின்றனர். திருப்பூர், ஆண்டிபாளையத்தில் முகமது முஸ்ருதீன் வசித்து வந்த வீட்டை, மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த, மத்திய உளவு பிரிவு குழுவினர் நேற்று ஆய்வு செய்து, போட்டோ எடுத்தனர். பின், முகமது முஸ்ருதீன் மனைவி சயிரா பானு, அவனது அண்ணன் முகமது மினாஸ்ருதீனிடம் விசாரணை நடத்தினர்.

இது குறித்து, போலீசார் கூறியதாவது: மேற்கு வங்கத்தில் இருந்து, பல ஆண்டுகளுக்கு முன் திருப்பூர் வந்த முஸ்ருதீன், வேலை செய்த இடத்தில் சயிரா பானுவை காதலித்து திருமணம் செய்து கொண்டான். கோழிப்பண்ணை பகுதியில், வாடகை ஷெட் பிடித்து, வட மாநில நபர்களுக்காக சிறிய அளவில், 'மெஸ்' நடத்தினான். மளிகை கடை வட மாநில தொழிலாளர் எண்ணிக்கை அதிகரித்ததும், 'மெஸ்' நடத்துவதை கைவிட்டுவிட்டு மளிகை கடை துவக்கி, அவற்றுடன் பல்வேறு தொழில்களை செய்துள்ளான். எந்த வேலையிலும் இவன் நேரடியாக ஈடுபட்டதில்லை. ஒவ்வொரு பணிக்கும் தனித்தனி ஆட்களை நியமித்திருந்தான். அவர்களில் பகாத் என்பவன் போலீஸ் பிடியில் உள்ளான்; மற்ற நபர்கள் குறித்து விசாரணை நடக்கிறது. திருமணத்துக்கு பின், முஸ்ருதீன் மாதத்தில் பாதி நாட்கள் வெளியூரில் இருந்துள்ளான். ஒவ்வொரு முறை ஊருக்கு சென்று வரும்போதும், 10 அல்லது, 15 வாலிபர்களை அழைத்து வந்துள்ளான். அவர்களை, வெவ்வேறு பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்களில், வேலைக்கும் சேர்த்து விட்டுள்ளான்; 100 பேர் வரை, இவனது உதவியில் திருப்பூரில் தங்கியிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. விசாரணை நடத்தினால் தான் முழு உண்மையும் வெளிவரும். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். மகள்களின் பெயர் தமிழரசி, இளவரசி! : முகமது முஸ்ருதீன் வசித்த வீடு, ஆண்டிபாளையம், கோழிப்பண்ணை அருகில் உள்ளது. இரவில் இவன் துாங்கும்போது, தன் தலைமாட்டில், கைப்பிடியுடன் கூடிய இரும்புக் கோடாரியை வைத்து துாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளான். இதைப் பார்த்த சிலர், 'எதற்காக இந்த கோடாரி' எனக் கேட்க, 'அதுவா... இரவில் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது; எல்லாம் தற்காப்புக்காகத் தான்' என கூறியுள்ளான். பாம்பை அடிக்க, கோடாரியா என்ற சந்தேகமும் அவர்களுக்கு அப்போது எழுந்துள்ளது. போலீசார் தற்போது விசாரிக்கும்போது, இது போன்ற விஷயங்களும் வெளிச்சத்துக்கு வருகின்றன. முஸ்ருதீனுக்கு, 4 மற்றும், 2 வயதில் இரு மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு, 'மாஜியா, ராஜியா' என, பெயரிட்டிருந்தாலும், 'தமிழரசி, இளவரசி' என, செல்ல பெயரிட்டு அழைத்து வந்ததாக, அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதன் பின்னணி குறித்தும் உளவு போலீசார் விசாரிக்கின்றனர்  தினமலர்.com

கருத்துகள் இல்லை: