வெள்ளி, 27 நவம்பர், 2015

மம்தா பானர்ஜி : அமீர்கானை வெளியேறு என்று யாரும் சொல்ல முடியாது

நாட்டில் நிலவி வரும் சகிப்பின்மை குறித்து கருத்து தெரிவித்த பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், அமீர்கானை இந்தியாவை விட்டு வெளியே செல்லுமாறு யாரும் சொல்ல முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். சகிப்பின்மை குறித்த அமீர்கானின் கருத்துக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு என இருதரப்பு விமர்சனங்களும் வந்து கொண்டே இருக்கின்றன. அரசியல் தரப்பில் மட்டுமல்லாது திரைத்துறையிலுமே சிலர் அவர் மீது விமர்சனங்களை முன்வைத்தனர். இதன் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்திலும் நேற்று இந்த விவகாரம் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கின் உரையில் மறைமுகமாக ஒலித்தது. இந்நிலையில், அமீர்கானுக்கு மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் கூறுகையில்:-

”ஜனநாயக நாட்டில் தான் உணர்ந்ததை கூற ஒருவருக்கு உரிமை உண்டு. அமீர்கான் தான் என்ன உணர்ந்தாரோ, அவர் மனைவி என்ன சொன்னாரோ அதை தான் கூறியுள்ளார். அமீர்கானை வெளிநாட்டிற்கு செல்லுங்கள் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்று சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது.

நாம் எல்லோரும் இந்திய நாட்டின் குடிமக்கள். இந்த நாடு ஒவ்வொருவருக்கும் சொந்தமானது. இது நமது தாய்நாடு.

அவர்கள் யார் (இந்துத்துவா அமைப்புகள்) வெளியேறு என்று சொல்ல. அமீர்கான் பேசியது சரியா? தவறா என்று அவர் ஏன் முடிவு செய்கிறார்கள்.” என்றார்.  maalamalar.com

கருத்துகள் இல்லை: