வியாழன், 26 நவம்பர், 2015

வெள்ளத்தால் ஒரு லட்சம் வீடுகள் விற்பனை முடங்கிவிட்டது..சென்னை புறநகர் மனைகள் தண்ணீரில்...

மழை, வெள்ள பாதிப்புகளால், சென்னை புறநகரில், ஒரு லட்சம் வீடுகள் விற்பனை முடங்கி உள்ளது. இந்த நிலை சீராக, மூன்று மாதங்கள் ஆகும் என்பதால் கட்டுமான நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளன. அண்மையில் பெய்த கன மழையின் காரணமாக, சென்னை புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து உள்ளது. குறிப்பாக, பள்ளிக்கரணை, சோழிங்கநல்லுார், துரைப்பாக்கம், பெரும்பாக்கம், மேடவாக்கம், சிட்லபாக்கம், கிழக்கு தாம்பரம், மேற்கு தாம்பரம், முடிச்சூர், பழைய பெருங்களத்துார், ஊரப்பாக்கம், வண்டலுார், போரூர், குன்றத்துார், அய்யப்பன் தாங்கல், காட்டுப்பாக்கம், அம்பத்துார், ரெட்டேரி, கொளத்துார் பகுதிகள் வெள்ளத்தில் தவிக்கின்றன.  அறிவு ஜீவியான தமிழனை இவர்களுக்கு ஏமாற்ற தெரியாதா? ஒரு வீடு வாங்கினால் விஜயின் தெறி பட டிக்கெட்கள் பத்து இலவசம் என்றால் தமிழன் வரிசை கட்டி நிற்க மாட்டானா?
புதிய வீடுகள்:
சென்னையில், அதிக வீடுகள் விற்பனையாகும் பகுதிகளாக இவை இருந்து வருகின்றன. வீட்டுக்கடன் வட்டி விகிதம், வழிகாட்டி மதிப்பு உயர்வு போன்ற காரணங்களால் இப்பகுதிகளில், சில மாதங்களாக வீடுகள் விற்பனை சரிந்து உள்ளது. தற்போதைய நிலவரப்படி இப்பகுதிகளில், மொத்தம், ஒரு லட்சம் வீடுகள் விற்பனையாகாமல் முடங்கி உள்ளன. இந்த நிலையில், அண்மையில் கொட்டித் தீர்த்த மழையின் காரணமாக, இதில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து உள்ளது. இங்கு ஏற்கனவே வீடு வாங்கியவர்கள், சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனங்கள் மீது அதிருப்தி அடைந்து உள்ளனர்.

விற்பனை முடக்கம்:

இது குறித்து இந்திய கட்டுனர் வல்லுனர் சங்க மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
* மழை காரணமாக, புதிய குடியிருப்புகள் கட்டப்பட்ட பகுதிகளில், வெள்ள நீர் சூழ்ந்து இருப்பது, வீடு வாங்கியவர்கள், வீடு வாங்க நினைப்பவர்கள் மத்தியில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது
* ஏற்கனவே, வீடு வாங்கியவர்கள் தற்காலிகமாக வேறு இடங்களுக்கு குடியேற துவக்கி உள்ளனர். இதனால், இங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் வீடுகள் விற்பனை முடங்கி உள்ளது
* வெள்ள நீர் வடிந்து, சாலைகள் சீரமைக்கப்பட்ட பிறகே இங்கு மக்கள் குடியேறுவர். இங்கு இயல்பு நிலை ஏற்பட்ட பிறகே புதிய வீடுகள் விற்பனை நடவடிக்கைகளை மீண்டும் துவக்க முடியும். இதற்கு, மூன்று மாதங்கள் ஆகும்.இவ்வாறு அவர் கூறினார்.

திரும்ப கிடைக்குமா?

இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத கட்டுமான நிறுவன உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:ஏற்கனவே, சென்னை யில் வீடுகள் விற்பனை தேக்கம் அடைந்து உள்ள நிலையில், மழை, வெள்ள பாதிப்புகளால் முற்றிலுமாக முடக்கிவிடும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து பல்வேறு திட்டங்களில் வீடு வாங்க முன்பதிவு செய்தவர்கள், அத்தொகையை திரும்ப அளிக்குமாறு கேட்டு கட்டுமான நிறுவனங்களை அணுக துவங்கி உள்ளனர். இதனால் கட்டுமான நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்

- நமது நிருபர் -  தினமலர்.com

கருத்துகள் இல்லை: