சனி, 28 நவம்பர், 2015

ஆட்டம் போட்ட பி.ஆர்.ஓ-க்கள்! வெளியேற்றியது வெள்ளம்...விகடன் .

அடாவடி... அத்துமீறல்... வசூல் வேட்டை! ஆட்டம் போட்ட பி.ஆர்.ஓ-க்கள்! வெளியேற்றியது வெள்ளம்ரசின் செய்தித் துறைக்குள் இப்போது அதிர்வேட்டுச் சத்தம் கேட்கிறது. கோட்டையிலும் திருநெல்வேலியிலும் பணியாற்றிய இரண்டு செய்தித் துறை அதிகாரிகள் அதிரடியாக கழற்றிவிடப் பட்டிருக்கிறார்கள். அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக இருக்க வேண்டிய செய்தித் துறையினர் கடமையைச் செய்யாமல் அதிகாரத்தைப் பயன்படுத்தி அடாவடிகளை அரங்கேற்றியதற்காகத் தூக்கி அடிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒருவர் திருநெல்வேலி மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி அண்ணா. இன்னொருவர் தலைமைச் செயலகம் பத்திரிகைத் தொடர்பு உதவி இயக்குநர் உமாபதி.
முதலில் அண்ணாவை பார்ப்போம். மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் பணியாற்றும் அரசு பி.ஆர்.ஓ-க்களை நியமிப்பதும் மாற்றுவதும் செய்தித் துறைதான்.
ஆனால், தனக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தியே அண்ணாவை பந்தாடியிருக்கிறார் திருநெல்வேலி கலெக்டர் கருணாகரன். மாவட்டத்தின் அனைத்துத் துறைகளிலும் முறைகேடுகளில் ஈடுபட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்துதான் அதிரடி பாய்ந்தி ருக்கிறது. இதுபற்றி பேசிய பி.ஆர்.ஓ அலுவலக ஊழியர்கள், ‘‘தி.மு.க ஆட்சியில் பணியில் சேர்ந்தவர் அண்ணா. மு.க.அழகிரிக்கு நெருக்கமானவர். அந்தச் செல்வாக்கைப் பயன்படுத்தி ஆட்டம் போட்டார். தி.மு.க. ஆட்சியில்  அமைச்சராக  இருந்த  பெரியகருப்பனிடம் பி.ஏ.வாகவும் பணியாற்றினார். அப்போது அமைச்சரின் பெயரைச் சொல்லி நிறைய முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அண்ணாவை பல இடங்களுக்குத் தூக்கி அடித்தார்கள். கடைசியில் தனக்கு நெருக்கமானவர்கள் மூலமாக முக்கிய அமைச்சர் ஒருவரைப் பிடித்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மாறுதல் வாங்கி வந்தார். அங்கேயும் அவர் மீது ஏராளமான புகார்கள். அமைச்சராக இருந்த பச்சைமால் பெயரைச் சொல்லி வேட்டை நடத்தியாகப் புகார் எழுந்தது. அரசின் நலத்திட்ட கையேடுகளை அச்சடித்து விநியோகம் செய்யாமல் வைத்துக் கொண்டார். அதை அச்சடித்துக் கொடுத்தவருக்கு 2 லட்சம் ரூபாய் பாக்கியை இதுவரை கொடுக்கவில்லை.
இதன்பிறகுதான் திருநெல்வேலிக்கு மாறுதலாகி வந்தார். ஆனாலும் அவரது நடவடிக்கைகள் மாறவில்லை. மீடியாவோடு பழகி அரசின் நலத்திட்டங்களை வெளியே கொண்டு வர வேண்டிய அண்ணா, பத்திரிகையாளர்களைக் கண்டாலே எரிந்து விழுந்தார். ஓராண்டுக்கு முன்பு பத்திரிகையாளர் ஒருவரைத் திட்டியதால் எழுந்த சர்ச்சையை கலெக்டர்தான் தீர்த்துவைத்தார்.அலுவலகத்தில் பணியாற்றுபவர்களிடம் மரியாதைக்குறைவாகப் பேசி வந்தார். மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராக அவதூறான செய்திகளைப் பரப்பி வந்ததால்தான் அவர் மீது இப்போது நடவடிக்கை பாய்ந்தது’’ என்றார்கள்.
 கலெக்டர் கருணாகரன் என்ன சொல்கிறார்? ‘‘அண்ணாவுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டபோது, தலையிட்டு சுமுகமாகத் தீர்த்துவைத்தேன். அதன் பிறகும் செய்தியாளர்கள் பலமுறை என்னைச் சந்தித்து புகார்கள் செய்தனர்.  உரிய பத்திரிகையாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய பஸ் பாஸ்கள்கூட முறைகேடாகச் சிலருக்குக் கொடுப்பதாகவும் புகார்கள் வந்தன. அரசு நிகழ்ச்சிகள் சிலவற்றில் செய்தியாளர்களின் பெயரைச் சொல்லி பணம் வசூல் செய்ததாகத் தகவல் கிடைத்தது. ‘இப்படி அவப்பெயர் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்’ என பலமுறை அறிவுறுத்தினேன். ஆனாலும், அவர் போக்கில் மாற்றம் இல்லை. இதை தவறாகப் புரிந்துகொண்டு  எனக்கும்,  பத்திரிகையாளர்களுக்கும் இடையே மோதலை ஏற்படுத்த முயற்சி செய்தார். அத்துடன், மாவட்ட அலுவலர்கள் சிலர் எனக்கு எதிராகச் செயல்படுவது போன்று என்னை நம்பவைக்க முயற்சித்தார். அரசு நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மழை பாதிப்பு பற்றி அரசின் நடவடிக்கைகள் பற்றிய செய்திகளும் போய்ச் சேரவில்லை. இத்தனைக்கும் பிறகு அவர் பணியாற்றினால், அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்படும். வேறு வழியே இல்லை என்கிற சூழலில் அவர் விடுவிக்கப்பட்டார்’’  என்றார். அண்ணாவின் கருத்தை அறிய முயன்றபோது, செல்போன் அழைப்பை எடுக்கவே இல்லை.
அடுத்து உமாபதி. தலைமைச் செயலகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் பத்திரிகை தொடர்பு உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் உமாபதி. இவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்ததால் ஜெயலலிதாவே தலையிட்டு அதிரடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறார். முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அரசின் சார்பில் வெளியிடப்படும் செய்திகளையும் அறிவிப்புகளையும் மீடியாவுக்கு அளிப்பது உமாபதியின் பொறுப்பு. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பதவிக்கு வந்தார். தலைமைச் செயலகத்தில் அரசு மக்கள் தொடர்பு அதிகாரியும் இருப்பார். மக்கள் தொடர்பு அதிகாரியும் உதவி இயக்குநரும் சேர்ந்துதான் பணிகளைப் பார்ப்பார்கள். ஆனால், இதில் உமாபதி மட்டுமே ஆதிக்கம் செலுத்தினார். முதல்வரின் நிகழ்ச்சி களின்போது செய்தித் துறை உதவி இயக்குநரும் இருப்பார். அதனால் முதல்வரிடம் நெருக்கமாக இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கினார். இதனால் உமாபதியின் செல்வாக்கு கூடியது.
காத்திருப்போர் பட்டியலில் வைக்கப் பட்டிருக்கும் உமாபதி பற்றி கதை கதையாக சொல்கிறார்கள் கோட்டையில் இருப்பவர்கள். ‘‘திருநெல்வேலியில் கலெக்டரே நடவடிக்கை எடுத்ததுபோல,  இங்கே முதல்வர் உத்தரவின் பேரில் உமாபதி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மழை வெள்ளம் பாதிப்பு பகுதிகளுக்கு அமைச்சர்கள் நேரடியாக விசிட் அடித்து நிவாரணப் பணிகளைச் செய்து வருகிறார்கள். ஆனால் அதுபற்றிய செய்திகள் பெரிய அளவில் பத்திரிகைளிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியாகவில்லை. வெள்ளப் பாதிப்புகள் பற்றிய செய்திகள் மட்டுமே மீடியாவில் வருவதால் ஆட்சிக்குக் கெட்ட பெயர். அதை உடனே சரிசெய்ய வேண்டும் என்பதில் அரசு அக்கறை காட்டியது. அதனால்தான் அமைச்சர்களை முடுக்கிவிட்டது. அவர்களை பற்றிய செய்திகளை மீடியாவுக்குக் கொண்டு போக வேண்டிய செய்தித் துறை பெரிய அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை.
அமைச்சர்களின் நிவாரணப் பணிகளை எல்லாம் போட்டோ, வீடியோ எடுத்து தினமும் அனுப்பினார்கள். ஆனால், அவற்றை மீடியாவுக்கு அனுப்பிவைத்து செய்திகளை வர வைப்பதற்காக முயற்சிகளை உமாபதி பெரிதாக எடுக்கவில்லை. சில குறிப்பிட்ட அமைச்சர்களின் செய்திகள் மட்டும் ஊடகத்தில் வெளியாகின. இதிலும் உமாபதியின் ரோல் இருக்கிறது. நெருக்கமான மற்றும் உதவிசெய்யும் சில அமைச்சர்களுக்கு மட்டுமே உமாபதி கனிவு காட்டினார். அவர்களின் செய்திகளும் போட்டோக்களும் வெளியாகின. இந்தக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில்தான் 8,481 கோடி ரூபாய் வெள்ள நிவாரண நிதி கேட்டு பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் முதல்கட்டமாக 2 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டிருந்தார். 8,481 கோடி ரூபாய் கேட்ட தொகை தொலைக்காட்சியில் முக்கியச் செய்தியாக வராமல் முதல் கட்டமாக 2 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டதுதான் வெளியானது. இதனால், முதல்வர் அலுவலகம் கொதித்துப்போனது. வெள்ள நிவாரணச் செய்திகள் பிரச்னைதான்  உமாபதியின் பதவிக்கு உலை வைத்தது.
உமாபதியை நன்கு அறிந்த செய்தித் துறையி னரிடம் பேசினோம். ‘‘1989-ம் ஆண்டு தமிழகத்தில் கவர்னர் ஆட்சி நடந்தபோது உமாபதி உதவி மக்கள் தொடர்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அப்போது தி.மு.க. அனுதாபியாக இருந்த செய்தித் துறை அதிகாரியும், போலீஸ் அதிகாரியும் உமாபதிக்குப் பரிந்துரை செய்தார்கள். அதனால் அவருக்கு உதவி மக்கள் தொடர்பு அதிகாரி வேலை கிடைத்தது. கொங்கு மண்டலத்தில் பணியில் இருந்தபோது தனது வளங்களைப் பெருக்கி்க்கொண்டார். கோவை மாநகராட்சி பி.ஆர்.ஓ-வாக இருந்தபோது நிறைய புகார்கள் எழுந்தன. அங்கே கமிஷனராக இருந்த நிரஞ்சன் மார்ட்டி, ‘உமாபதி வேண்டாம்’ என்று விரட்டியடித்தார். அங்கிருந்து திருப்பூர் மாவட்டத்துக்கு வந்தார். அங்கே மெஸ் நடத்தியதாக சர்ச்சை எழுந்தது. அப்போது அமைச்சராக இருந்த வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு மிக நெருக்கமாக இருந்தார்.  சொத்துகள் ஏராளம் என உமாபதி மீது புகார்கள் அனுப்பப்பட்டன. ஆனால், அதை அரசு கண்டுகொள்ளவில்லை. அமைச்சர்களையும் அதிகாரிகளையும் வளைத்துப் போடுவதில் கில்லாடி. அமைச்சர்களிடம் இருந்து மாதா மாதம் உமாபதிக்கு வரவேண்டியது வந்துவிடும்’’ என்றார்கள். முதல்வரின் நிகழ்ச்சிகளுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே உமாபதி பாஸ் வழங்குவார். பிரதமர் மோடி சென்னை வந்தபோது பல பத்திரிகைகளுக்கு உமாபதி பாஸ் தரவில்லை. இதனால், இவரை மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை பலமாக எழுந்து நின்றது’’ என்றார்கள்.
உமாபதியின் சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுக்கா மட்டப்பாறை கிராமம். அங்கே விசாரித்தோம். ‘‘உமாபதியை பத்தி யாராவது  புகார் சொன்னா உடனே தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, புகார் சொன்னவங்க மேல போலீஸை வெச்சு கேஸ் போட்டுடுவார். பொன்னம்பலம்னு ஒருத்தர் இப்படித்தான் அவர் மேல புகார் சொல்லிட்டே இருந்தாரு. மட்டப்பாறை கண்மாய்க்குப் பக்கத்துல உமாபாதிக்குத் தோட்டம் இருக்கு. அங்க பட்டா நிலம் போக, கண்மாய் நிலத்தையும் ஆக்கிரமிப்பு பண்ணி விவசாயம் செஞ்சிட்டு இருக்காரு. அதைக் குறிப்பிட்டு கோர்ட்ல கேஸ் போட்டாரு பொன்னம்பலம். கோர்ட்டும் ஆக்கிரமிப்பை உடனடியா  அகற்றச் சொல்லி உத்தரவு போட்டுச்சு. ஆனாலும் இன்னைய வரைக்கும் முழுசா ஆக்கிரமிப்பை எடுக்கலை. அதே நேரம், பொன்னம்பலம் மேல போலீஸை வெச்சு பொய் கேஸ் போட்டாங்க. போராடிப் பாத்துட்டு ஒரு கட்டத்துல மாரடைப்பு வந்து செத்துப் போயிட்டாரு பொன்னம்பலம். அவரோட மனைவி, அமெரிக்காவுல இருக்க மகனோட போய் செட்டிலாகிட்டாங்க’’ என்கிறார்கள்.
மக்கள் தொடர்புக்கு எப்படி ஆட்கள் வருகிறார்கள் என்று பாருங்கள்!
- எஸ்.முத்துகிருஷ்ணன், பி.ஆண்டனிராஜ், ஆர்.குமரேசன்
படங்கள்: எல்.ராஜேந்திரன், தி.ஹரிஹரன்

கருத்துகள் இல்லை: