திங்கள், 9 பிப்ரவரி, 2015

வறிய நாடுகளுக்கு விசா சலுகை அளிக்க இந்தியா முடிவு

குறைந்த வளர்ச்சியைக் கொண்ட நாடுகளுக்கு விசா கட்டணங்களை ரத்து செய்வது, சந்தை வாய்ப்புகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.
குறைந்த வளர்ச்சியைக் கொண்ட நாடுகளுக்கு, வளர்ந்த, வளரும் நாடுகள் வழங்க வேண்டிய உதவிகள் குறித்து விவாதிக்க ஜெனீவாவில் உள்ள உலக வர்த்தக அமைப்பில், மாநாடு நடைபெற்றது.
மாநாட்டில் இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, ஜப்பான், கனடா, நார்வே, சுவிட்ஸர்லாந்து உள்பட பல நாடுகள் கலந்து கொண்டன.
அதில், விசா கட்டணங்களை ரத்து செய்வது, சந்தை வாய்ப்புகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கப்போவதாக இந்தியா அறிவித்தது.

"குறைந்த வளர்ச்சியைக் கொண்ட நாடுகளுக்கான தொழில் முறை விசா, வேலைவாய்ப்பு விசா ரத்து செய்யப்படும். ஒவ்வோர் ஆண்டும், குறைந்த வளர்ச்சியைக் கொண்ட நாடுகளைச் சேர்ந்த 1,000 தொழில் வல்லுனர்களுக்கு, தொழில்நுட்ப ஆலோசனை, மேலாண்மை ஆலோசனை, திட்ட மேலாண்மை குறித்த பயிற்சிகள் வழங்கப்படும்.
அந்த நாடுகள், இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான சந்தை வாய்ப்புக்கள் மேம்படுத்தப்படும். அந்த நாடுகளுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளும், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் வழங்கப்படும்' என்று இந்தியா அறிவித்தது.
இதுகுறித்து, கருத்து தெரிவித்த குறைந்த வளர்ச்சியைக் கொண்ட நாடுகளின் ஒருங்கிணைப்பாளரும், உகாண்டா நாட்டுத் தூதருமான கிறிஸ்டோபர் அபார், "விசா கட்டணங்களை ரத்து செய்வது என்ற இந்தியாவின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியா அளிக்கும் சலுகைகள் பாராட்டத்தக்கவை' என்றார். dinamani.com

கருத்துகள் இல்லை: