ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

மைக்கல் ஜாக்சனின் முகம் எப்படியெல்லாமோ அழகாகப்பட்டது பின்பு மெதுவாக ......

மைக்கேல் ஜாக்சன் என்ற பெயரைக் கேட்டதும் சுருள் சுருளாய் நெற்றியின் முன் விழும் முடியும், பெண்மை கலந்த அந்த வசீகர முகமும்தான் ரசிகர்களின் மனதில் தோன்றும். ஆனால், அந்த முகத்திற்காகத்தான் அவர் தன் வாழ்நாள் முழுக்க வலியை அனுபவித்து, இறுதியில் அந்த வலியாலே இறந்தும் போனார். தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று அவர் இந்த சிகிச்சை செய்யாமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருப்பாரென்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும் வியப்பூட்டும் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அவர் மேற்கொண்ட சிகிச்சைகள்: 1977 - மைக்கேலுக்கு 19 வயது, அந்தக் காலம் பற்றி கூறும் ஜாக்சன் ‘அப்போது எனக்கு முகத்தில் பருக்கள் அதிகமாக இருந்தது. இதனால் தினமும் நான் அழுவேன்’ என்பார்.
மேலும் தனது மூக்கு பெரிதாக இருப்பதால் அதை சிறியதாக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அது சரியாக அமையாததால் இரண்டாவது முறையாக மற்றொரு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனால் சுவாசக் கோளாறால் அவதிப்பட்டார்.

1983 - ‘த்ரில்லர்’ ஆல்பம் பிரபலமாகி மைக்கேல் புகழின் உச்சியில் இருந்த காலம். கண் புருவத்தை திருத்திக் கொண்டார். கன்னங்களை புஷ்டியாகக் காட்ட அறுவை சிகிச்சை செய்து கொண்டார். மேலும் மூன்றாவது முறையாக மூக்கிலும் அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

1991 - மைக்கேல் தனது 33 ஆவது வயதில் தனிமையான வாழ்க்கை வாழ்ந்தார். 4 ஆவது மற்றும் 5 ஆவது அறுவை சிகிச்சை முடிந்து கன்னத்தில் செய்யப்பட்ட இம்ப்ளாண்ட் சிகிச்சையால் முகம் வெள்ளையாக மாறத் தொடங்கியது.

1995 - தன் நண்பரும் தோல் சிகிச்சை நிபுணருமான யூரி கெல்லர் மூலம் தோலை ப்ளீச்சிங் செய்து கொண்டார். அவர் மைக்கேல் ஜாக்சனிடம், ஏன் உன் உருவத்தை அடிக்கடி மாற்றிக் கொள்கிறாய் என்று கேட்டதற்கு “நான் என் அப்பாவைப் போல தோற்றமளிக்கக் கூடாது” என்று கூறியுள்ளார்.

2002 -  மூக்கில் அறுவை சிகிச்சை செய்த இடத்திலிருந்து திரவம் ஒன்று வடிந்து கொண்டே இருக்கும். இதனால் எப்போதும் மூக்கு துவாரங்களை மூடிய படியே இருப்பார்.

2003 - பெண்மைத் தன்மையுள்ளவராக அவரது முகம் மாறியது. அவரைப் பற்றி எடுக்கப்பட்ட ஆவணப்படத்தில் “நேர்மையாகச் சொல்கிறேன் நான் முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி எதுவும் செய்து கொள்ளவில்லை. எனக்குத் தோலில் ஒரு வித நோய் இருக்கிறது. அதுதான் இந்த நிற மாற்றத்திற்குக் காரணம். சுவாசப் பிரச்சனைகளுக்காகத்தான் மூக்கில் அறுவை சிகிச்சை மேற்கொண்டேன்” என்றார்.

2009- ஐம்பது வயதான ஜாக்சன் 305 மில்லியன் பவுண்ட் கடன் காரணமாக ‘திஸ் இஸ் இட்’ என்ற தனது உலக சுற்றுப் பயணத்தை அறிவித்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். சூம்பிப் போன அவரது மூக்கை பில்லர்களை (சதையை ஒட்டி, நீக்க பயன்படும் சிகிச்சைக்கருவி) வைத்து மீண்டும் கட்டமைத்தார் மருத்துவர். மூக்கு மற்றும் முகத்தையும் சீரமைத்தார். திடீர் மாரடைப்பு காரணமாக, ஜூன் 26-ந் தேதி அதிகாலை லாஸ் ஏஞ்சல்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மைக்கேல் ஜாக்சன், நினைவு திரும்பாமலேயே மரணத்தை தழுவினார்.

உலகெங்கும் இன்றளவும் அதிக அளவில் விற்கும் இசை ஆல்பங்கள் அவருடையதுதான். 13 கிராமி விருதுகள், 75 கோடி ஆல்ப கேசட்டுகள் விற்பனை என்று பில்லியன் கணக்கில் வருமானம். நாடு- மொழி-இனம் என்ற உணர்வுகளைக் கடந்து கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டவர் ஜாக்சன். அவரது சாதனை எண்ணிலடங்காது.

இந்த உலகமே அழிந்தாலும், பிரபஞ்சத்தில் வீசும் காற்றில் இசை நிறைந்திருக்கும். அப்போதும் கேட்கும் ‘ஜஸ்ட் பீட் இட்’ என்று துள்ளலான மைகேல் ஜாக்சனின் குரல் maalaimalar.com

கருத்துகள் இல்லை: