செவ்வாய், 10 ஜூன், 2014

மோடியரசின் கவர்ச்சி : நாடு முழுவதும் புதிதாக 100 நகரங்கள் !

உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன், நாடு முழுவதும், 100 நகரங்களை மத்திய அரசு உருவாக்கும். பெண்கள் பாதுகாப்பு மற்றும் கல்விக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும். அனைத்து வசதிகளுடன் கூடிய வீடு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் கிடைப்பது உறுதி செய்யப்படும்' என, ஜனாதிபதி உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, மத்தியில் பதவியேற்ற பின், பார்லிமென்டின் இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று உரை நிகழ்த்தினார். &அப்போது, அவர் கூறியதாவது:'குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்' என்ற, தாரக மந்திரத்தின் அடிப்படையில், புதிய அரசு செயல்படும். புதிய அரசு, ஏழைகளுக்காக அர்ப்பணம் செய்யப்படுகிறது. ஏழ்மையை ஒழிப்பதே இந்த அரசின் குறிக்கோள்.பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, அதிக முன்னுரிமை வழங்கப்படும்.   ஜனாதிபதி உரையில மட்டுமா கவர்ச்சி இருக்கு..ஆரம்பம் முதலே ஒரே கிளு கிளுப்பா தான போயிட்டு இருக்கு..
பதுக்கல்காரர்கள் மீது, நடவடிக்கை எடுத்து, பொது வினியோக திட்டம் சீரமைக்கப்படும்.கிராமங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 'ரூரல் மற்றும் -அர்பன்' இடையேயான வேறுபாட்டிற்கு, 'ரூர்பன்' என்ற புதிய யோசனை வாயிலாக, முற்றுப்புள்ளி வைக்கப்படும். நகர்ப்புறங்களில் உள்ள, அத்தனை வசதிகளும், கிராமப்புறங்களுக்கும் கொண்டு செல்லப்படும்.குடும்பத்துக்கு ஒரு வீடு:>நாடு முழுவதும், சர்வதேச தரத்திலான, 100 புதிய நகரங்கள் உருவாக்கப்படும். சுத்தம், சுகாதாரம் என்ற இரண்டையும் அளவீடாகக் கொண்ட, முன்மாதிரி நகரங்களும் அமைக்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும், குடிநீர் இணைப்பு, கழிப்பறை வசதி, 24 மணி நேர மின்சாரத்துடன் கூடிய, வீடு அமைத்து தர, ஏற்பாடு செய்யப்படும்.அதிகாரிகள் மத்தியில், நம்பிக்கை ஏற்படுத்தவும், நேர்மையான, வெளிப்படையான நிர்வாகத்தை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு ஆவணங்கள் அனைத்தும், 'டிஜிட்டல்' மயமாக்கப்படும். அரசு நிர்வாக நடவடிக்கைகள் அனைத்துமே, டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, விரைவில், 'டிஜிட்டல் இந்தியா' உருவாக்கப்படும். மழைநீரைச் சேமிக்கவும், சாத்தியம் உள்ள நதிகளை இணைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். 'ஒவ்வொரு வயலுக்கும் தண்ணீர்' என்ற நோக்கில், 'பிரதமர் விவசாய நீர்ப்பாசன திட்டம்' என்ற புதிய திட்டம், செயல்படுத்தப்படும்.இளைஞர் மேம்பாட்டு திட்டம் என்பது மாற்றப்பட்டு, 'இளைஞர்களே வழிநடத்தும் மேம்பாட்டு திட்டம்' கொண்டு வரப்படும். அதன் மூலம், நிறைய 'ஆன் - லைன்' படிப்புகள்நடத்தப்படும். விளையாட்டு வீரர்களை இனம் கண்டுபிடிக்க, தேசிய அளவில், திட்டம் கொண்டு வரப்படும். புதிய தேசிய சுகாதாரக் கொள்கை உருவாக்கப்படும். தேசிய சுகாதார காப்பீட்டுத் திட்டம்அறிமுகம் செய்யப்படும்.'குப்பை இல்லாத நாடு' என்ற நோக்கில், புதிய திட்டம் அமல்படுத்தப்படும்.'பெண்கள் பாதுகாப்பு மற்றும் -பெண்கள் கல்வி' என்ற புதிய முழக்கத்தோடு, பெண்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களுக்கு எதிரான தொல்லைகள் மற்றும் வன்முறைக்கு, முற்றுப்புள்ளி வைக்க, புதிய கொள்கை முடிவை, மத்திய அரசு மேற்கொள்ளும்.


பெண்களுக்கு இடஒதுக்கீடு




*அனைத்து மாநிலங்களிலும், ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.எம்.,கள் போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படும்.
*அனைத்து மாநிலங்களிலும், 'எய்ம்ஸ்' போன்ற மருத்துவமனைகள் கட்டப்படும்.
*பார்லிமென்ட் மற்றும் மாநில சட்டசபைகளில், பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும்.
*ஜம்மு - -காஷ்மீர் மாநிலத்தில், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். பயங்கரவாதி களின் ஊடுருவல்கள் தடுக்கப்பட்டு, காஷ்மீர் பண்டிட்கள், அவர்களின் சொந்த ஊரில், குடியேற நடவடிக்கை எடுக்கப்படும்.
*வேலைவாய்ப்புகள் மற்றும் சொத்துகளை உருவாக்கும் துறைகளில், நேரடி அன்னிய முதலீடு அதிகரிக்கப்படும்.
*புதிய மின்சாரக் கொள்கை அமல்படுத்தப்படும்.
*சர்வதேச அணுசக்தி ஒப்பந்தங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.
*கங்கை நதியை சுத்தப்படுத்த, நடவடிக்கை எடுக்கப்படும்.
*50 சுற்றுலா தலங்களைஉள்ளடக்கிய வளையம்ஏற்படுத்தப்படும்.
*ஊழல் மற்றும் கருப்புப் பண அபாயம் ஒழித்துக் கட்டப்படும்.


ராகுலுடன் கைகுலுக்கிய மோடி




பார்லிமென்ட் கூட்டுக் கூட்டத்தில், நேற்று ஜனாதிபதி உரை நிகழ்த்திய போது, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், எட்டாவது வரிசையில், தங்கள் கட்சியின் மூத்த தலைவர்களான, மோதிலால் ஓரா மற்றும் ஜெய்ராம் ரமேஷ் உடன் அமர்ந்திருந்தார்.ராகுல் இருந்த இடத்திற்குச் சென்ற, பிரதமர் நரேந்திர மோடி, அவரின் கையைப் பிடித்து குலுக்கி, வாழ்த்து தெரிவித்தார். அதேபோல், ஜனாதிபதி உரை துவங்கும் முன், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியுடன், காங்கிரஸ் தலைவர் சோனியா, நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்.கூட்டுக் கூட்டத்தில், உட்கார இடம் கிடைக்காத, எம்.பி.,க்கள் சிலர், ஜனாதிபதி உரை நிகழ்த்திய, 55 நிமிடங்களும், ஓரமாக நின்று கொண்டு இருந்தனர்.

'வன்முறை விஷயத்தில், சகிப்புத் தன்மைக்கே இடமில்லை என்றும், பார்லிமென்ட் மற்றும் சட்டசபைகளில், பெண்களுக்கு, 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதாவை, தற்போதைய அரசு நிறைவேற்றும்' என்றும், ஜனாதிபதி பிரணாப் கூறியபோது, சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி உட்பட, பலரும் மேஜையை தட்டிவரவேற்றனர்.மன்மோகன் சிங், முதல் வரிசையில், பிரதமர் மோடி மற்றும் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி அருகே அமர்ந்திருந்தார்.'கங்கை நதி சுத்தப்படுத்தப்படும் மற்றும் காஷ்மீரி பண்டிட்கள் அவர்களின் மூதாதையர் நிலங்களுக்கு திரும்ப, நடவடிக்கை எடுக்கப்படும்' என, உரையில் தெரிவிக்கப்பட்டபோது, பெரும்பாலான எம்.பி.,க்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். ஜனாதிபதி உரை துவங்கும் முன், மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ஒவ்வொருவரிசையாக சென்று, எம்.பி.,க்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.


வைர நாற்கர ரயில் திட்டம்




ரயில்வே துறை முற்றிலும் நவீனமயமாக்கப்படும். வைர நாற்கர திட்டம் என்ற பெயரில், அதிவேக ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே உள்ள, சரக்கு ரயில் போக்குவரத்து திட்டத்துடன் சேர்த்து, விவசாயத்தை மேம்படுத்த, 'அக்ரி -ரயில் போக்குவரத்து' திட்டமும் கொண்டு வரப்படும்.சிறிய நகரங்களுக்கும், விமானப் போக்குவரத்து விரிவுபடுத்தப்படும். தற்போதைய துறைமுகங்கள், நவீனப்படுத்தப்படும். துறைமுகங்களுக்கு, 'சாகர் மாலா' என்ற புதிய திட்டத்தின் படி, ரயில் மற்றும் சாலை போக்குவரத்து அமைத்து தரப்படும்.

ஜனாதிபதி உரை வார்த்தைகளின் ஜாலமாகவே உள்ளது. தேர்தல் நேரத்தில் முன்வைக்கப்பட்ட கோஷங்களுக்கு, புதிய வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அனைத்து மிகைப்படுத்தப்பட்ட விஷயங்களாகவே உள்ளன.
ஆனந்த் சர்மா,காங்., தகவல் தொடர்பாளர்

வரும் ஆண்டிற்கான, மோடி அரசின் செயல்திட்டங்கள், ஜனாதிபதி உரையில் இடம்பெறவில்லை. பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையில், சொல்லப்பட்ட விஷயங்களே மீண்டும் தரிவிக்கப்பட்டுள்ளன.மேலும், இந்தத் திட்டங்கள் எப்படி செயல்படுத்தப்பட உள்ளன என்பது விவரிக்கப்படவில்லை. ஜனாதிபதி உரை, மத்திய அரசின் விருப்பமே அன்றி, தீர்வு அல்ல.
சீதாராம் யெச்சூரி,மார்க்சிஸ்ட் மூத்த தலைவர்

பலமான, சுயசார்புடைய, சுயநம்பிக்கையுள்ள இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற, மோடி தலைமையிலான அரசின் லட்சியங்களை பிரதிபலிக்கும் வகையில் ஜனாதிபதி உரை அமைந்துள்ளது. புதிய நம்பிக்கை தளத்தையும் உருவாக்கி உள்ளது. நாட்டின் நலிந்த பொருளாதாரத்தை, மீண்டும் தடத்திற்கு கொண்டு வருவதற்கான தீர்வுகளை பிரதிபலிக்கிறது.
வெங்கையா நாயுடு,மத்திய அமைச்சர்

- நமது சிறப்பு நிருபர்

கருத்துகள் இல்லை: