புதன், 8 ஜனவரி, 2014

சுவரில் துளை போட்டு பெரம்பூர் நகைக் கடையில் ரூ.1 கோடி நகை கொள்ளை !

பெரம்பூர் பேப்பர் மில்ஸ் ரோட்டில் உள்ள நகைக்கடையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளை போயுள்ளன. கடையின் பின்புற சுவரில் துளைபோட்டு மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து கைவரிசை காட்டி உள்ளனர். இதனால், பெரம்பூர் பகுதியில் வியாபாரிகள் பீதி அடைந்துள்ளனர். சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் ரோட்டில் வசிப்பவர் சந்தோஷ் (49). ராஜஸ்தானை சேர்ந்த இவர், அதே ரோட்டில் சந்தோஷ் நகை மாளிகை என்ற பெயரில் நகைக் கடை நடத்தி வருகிறார். இந்த கடையின் முன்புறம் ஷட்டர் போட்டு, அதற்கு முன்பாக இரும்பு கம்பி கேட்டும் உள்ளது. பக்கவாட்டில் சிறிய சந்து உள்ளது. அதன் வழியாக சென்றால், கடையின் பின்புறம் செல்லலாம்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு சந்தோஷ் மற்றும் ஊழியர்கள் சென்றனர். நேற்று செவ்வாய்க்கிழமை கடைக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதனால் வேலை விஷயமாக சந்தோஷ், வெளியூர் சென்றுவிட்டார். இன்று காலை கடையை திறக்க சந்தோஷ் தம்பி ராஜேஷ் சென்றுள்ளார். முன்பக்க ஷட்டரை திறந்து கடைக்குள் சென்ற அவர், ஷோகேசில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த செயின், மோதிரம், நெக்லஸ் உள்பட அனைத்து நகைகளும் மாயமானது கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார். நகைகள் முழுவதும் கொள்ளை போனது கண்டு பதற்றத்துடன் கடை முழுவதும் சுற்றி, சுற்றி வந்தார்.

 கடையின் பின்புற சுவரில் கடப்பாரையில் துளை போட்டு, அதற்கு அடுத்து போடப்பட்டிருந்த மரத்தடுப்பையும் உடைத்து கடைக்குள் நுழைந்த மர்ம ஆசாமிகள் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். சுமார் 400 பவுனுக்கு மேல் நகைகள் கொள்ளை போயிருக்கலாம் என்று தெரிகிறது. கொள்ளை போன நகைகளின் மதிப்பு 1 கோடி ரூபாய் இருக்கும்.இதுகுறித்து செம்பியம் போலீசில் புகார் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று விசாரித்தனர். பின்னர், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வந்து, கடையில் பதிவாகி உள்ள மர்ம நபர்களின் ரேகைகளை பதிவு செய்து எடுத்து சென்றனர். அந்த ரேகைகளை பழைய குற்றவாளிகளின் ரேகைகளுடன் ஒப்பிட்டு பார்த்து வருகின்றனர். நகைக் கடை உள்ளது பழங்கால கட்டிடம்.  இதன் சுவர்கள் பழுதடைந்து காணப்படுகிறது. இதை கொள்ளையர்கள் நன்கு அறிந்து, முன்கூட்டியே திட்டமிட்டுதான் கொள்ளையடித்து சென்றுள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.  பேப்பர்மில்ஸ் ரோட்டில் உள்ள நகைக் கடையில் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளை போயிருப்பது வியாபாரிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. -  .tamilmurasu.org/I

கருத்துகள் இல்லை: