வெள்ளி, 18 அக்டோபர், 2013

Ex உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் சொத்துகளை பினாமி பெயரில் ? தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவரும் இவர்தான் !

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தபோது முறைகேடுகளில் ஈடுபட்டு பினாமி சொத்துகளை வாங்கியதாக புகாருக்கு ஆளான தேசிய மனித உரிமைகள் ஆணைய (என்ஹெச்ஆர்சி) தலைவர் கே.ஜி. பாலகிருஷ்ணனை அப் பதவியில் இருந்து நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள பொது நல மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் வரும் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
மனுவை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதிகள் பி.எஸ். சௌஹான், எஸ்.ஏ. பாப்டே அடங்கிய அமர்வு, "மனுதாரரின் கோரிக்கை குறித்து விரிவாக விசாரிக்க வேண்டும். தலைமை நீதிபதியாக கே.ஜி. பாலகிருஷ்ணன் இருந்த போது தவறிழைத்ததாகக் புகார் கூறப்பட்டது. இதையடுத்து, தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் பதவியில் இருந்து அவரை நீக்கக் கோருவது சரியா? என்பதை ஆராய வேண்டும். இந்த மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது. ஆகையால், வரும் அக்டோபர் 30-ஆம் தேதி மனு மீது விசாரணை நடத்தப்படும்' என்று தெரிவித்தது.

முன்னதாக, இந்த மனு மீது நீதிபதிகளிடம் கருத்துத் தெரிவித்த சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன், "இதே புகார் தொடர்பாக மத்திய சட்டத் துறையும் ஆய்வு செய்தது. தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் என்ற முறையில் கே.ஜி. பாலகிருஷ்ணனின் நடத்தையில் எந்தப் பிரச்னையும் இல்லை என சட்டத் துறை கூறியுள்ளது' என்றார்.
அதற்கு மனுதாரரின் வழக்குரைஞரான பிரசாந்த் பூஷண் ஆட்சேபம் தெரிவித்தார். அப்போது அவர் கூறியது:
"தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் பதவிக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவரைத்தான் நியமிப்பது மரபாகும். தலைமை நீதிபதியாக இருந்த ஒருவர், அடுத்த பதவியை வகிக்கும் போதுதான் முந்தைய பொறுப்பில் செய்த தவறு வெளிச்சத்துக்கு வருகிறது. ஆனால், தற்போது வகிக்கும் பதவியில் தவறு செய்யவில்லை என்று கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் தவிர்ப்பது எந்த வகையில் நியாயமாகும்? இந்த விவகாரத்தில் மத்திய அரசின் பதில் வியப்பளிக்கிறது. கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சௌமித்ர சென் மீது குற்றம் நீரூபிக்கப்பட்ட போது அவர் மீது நடவடிக்கை எடுக்க இதே கே.ஜி. பாலகிருஷ்ணன் பரிந்துரை செய்தார். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்று, புதிய பொறுப்பை வகித்து வரும் கே.ஜி. பாலகிருஷ்ணன் மீதும் அதே நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்' என்றார்.
இரு தரப்பு கருத்துகளையும் கேட்டறிந்த நீதிபதிகள், "இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் மிகவும் தீவிரமானவை. எனவே, வரும் 30-ஆம் தேதி விரிவாக விசாரணை நடத்துகிறோம்' என்றனர்.
முன்னதாக, இந்த மனு தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்திருந்த பிரமாணப் பத்திரத்தில், கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமை நீதிபதியாக இருந்த போது அவரும் அவரது உறவினர்களும் ஏராளமான சொத்துகளை பினாமி பெயரில் குவித்ததாகக் கூறப்படுவதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை. தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் தனது பதவிக் காலத்தில் தவறு செய்து அக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே அவரைப் பதவியில் இருந்து நீக்க முடியும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது தினமணி.com

கருத்துகள் இல்லை: